20 வயதில் உலக சாதனை..! இந்தியாவின் முதல் நார்வே செஸ் சாம்பியனானார் பிரக்ஞானந்தா!

Pragyanatha and other Chess players
Pragyanantha won Norway chess 2026 TitleImage credit: Instagram,Premeya news
Updated on

நார்வே தலைநகர் ஓஸ்லோவில் நடைபெற்ற , புகழ் பெற்ற சர்வதேச சதுரங்க தொடரில், இந்தியா சார்பில் போட்டியிட்ட 20 வயது நிரம்பிய இளம் கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தா சிறப்பான நகர்வுகளை முன்னெடுத்து, இறுதி போட்டியில் வெற்றி பெற்றுள்ளார். இந்த வெற்றியின் மூலம் சதுரங்க உலகில் மிக உயரிய பட்டமாக கருதப்படும் நார்வே சதுரங்க பட்டத்தை வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

இந்த சதுரங்க தொடர் தொடக்கத்தில் பல பின்னடைவுகளை சந்தித்த பிரக்ஞானந்தா , ஒரு கட்டத்தில் போட்டியை விட்டு வெளியேறி விடுவார் என்று பலரும் நினைத்தனர். ஆனாலும், தனது மன உறுதியை தளரவிடாமல் பிரக்ஞானந்தா தொடர்ச்சியாக போராடினார். சதுரங்க போட்டியின் முக்கிய தருணத்தில் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இறுதி போட்டிக்கு தகுதி பெற்றார்.

பிரக்ஞானந்தாவின் வெற்றி சாதாரணமானது அல்ல. தொடரில் பங்கேற்ற வீரர்களின் பெயர்களை பார்த்தாலே அவரது வெற்றியின் மகத்துவம் புரியும். இந்த சதுரங்க தொடரில் உலகத் தரவரிசையில் முதலிடம் பெற்றுள்ள மேக்னஸ் கார்ல்சன், தற்போதைய உலக சாம்பியன் ஆன இந்தியாவின் இளம் கிராண்ட் மாஸ்டர் டி. குகேஷ், மற்றும் சதுரங்க உலக ஜாம்பவான்களான அலிரேசா ஃபிரூஜா, வெஸ்லி சோ போன்றவர்களும் பங்கு பெற்றிருந்தனர்.

சர்வதேச சதுரங்க போட்டியின் மற்றொரு சுற்றில் அமெரிக்க வீரரான வெஸ்லி சோ, ஆர்மகெடான் முறையில் ஃபிரூஜாவை வீழ்த்தி பட்டம் பெறும் முயற்சியில் முன்னணியில் இருந்தார். அதே நேரம் தற்போதைய உலகச் சாம்பியன் ஆன குகேஷ் , முன்னாள் உலக சாம்பியன் ஆன மேக்னஸ் கார்லெசன் உடனான போட்டியில், கிளாசிக்கல் டபுள் முறையில் தோற்கடிக்கப்பட்டார். இதனால் குகேஷ் பட்டம் பெறும் வாய்ப்பு தகர்க்கப்பட்டது.

தொடரின் இறுதிப் போட்டிக்கு முந்தைய சுற்றுக்களில் அதிரடியான ஆட்டத்தினை பிரக்ஞானந்தா வெளிப்படுத்தினார். கிளாசிக்கல் பிரிவில் ஃபிரூஜா, கார்ல்சன் மற்றும் குகேஷ் ஆகியோருக்கு எதிரான அவரது ஆட்டம் திருப்புமுனை தந்தது. இந்த சுற்றில் அவர் பெற்ற தொடர் வெற்றிகள் இறுதிப் போட்டிக்கான கதவினை திறந்து விட்டது. ஒன்பதாவது சுற்றில் சிறப்பான முறையில் குகேஷை அவர் வெற்றி கொண்டார்.

இறுதிச்சுற்றில் ஜெர்மனியின் வின்சென்ட் கெய்மரை எதிர்கொண்ட பிரக்ஞானந்தா, சிறப்பான வியூகத்தின் மூலம் அவரை தோற்கடித்தார். இந்த தொடரில் இரண்டு முறை உலகின் நம்பர் ஒன் சதுரங்க ஆட்டக்காரரான மேக்னஸ் கார்ல்சனை தோற்கடித்தது பிரக்ஞானந்தாவிற்கு சிறப்பான பெயரினை பெற்று தந்தது. இதற்கு முன்னர் இந்த சாதனையை இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த் செய்துள்ளார். வரலாற்று சிறப்புமிக்க இந்த தொடரில் சாம்பியன் பட்டத்தை வென்று முதல் இந்தியன் என்ற பெருமையை பிரக்ஞானந்தா பெற்றுவிட்டார்.

logo
Kalki Online
kalkionline.com