சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் KKR அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் RCB அணியை வெற்றிபெற்றது.
2024 IPL தொடரின் 10வது லீக் போட்டி நேற்று சின்னசாமி மைதானத்தில் கொல்கத்தா மற்றும் பெங்களூரு அணிகளுக்கு இடையே நடைபெற்றது. முதலில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி பவுலிங்கைத் தேர்வு செய்தது. அதன்பின்னர் பெங்களூரு அணியின் ஓப்பனராக டூ ப்ளஸி மற்றும் விராட் கோலி ஆகியோர் களமிறங்கினார்கள். டூ ப்ளஸி வெறும் 8 ரன்களில் அவுட்டாகி வெளியேறினார். அதன்பின்னர் க்ரீன் களமிறங்கினார். விராட் கோலியும் க்ரீனும் சேர்ந்து சிறப்பான ஸ்கோரை அடித்தார்கள். பவர் ப்ளே முடிவில் சுமார் 61 ரன்கள் அடிக்கப்பட்டது. அதன்பின்னர் படிப்படியாக பெங்களூரு அணியின் வேகம் குறைந்தது. க்ரீன் 21 பந்துகளில் 33 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
ஆகையால் பெங்களூரு அணி 11 ஓவர்களில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 87 ரன்களை எடுத்திருந்தது. வேகம் குறைந்ததை உணர்ந்த மேக்ஸ்வேல் மற்றும் விராட் கோலி மீண்டும் அதிரடி ஆட்டத்தில் இறங்கினார்கள். விராட் கோலி 36 பந்துகளில் அரைசதம் அடித்தார். கொல்கத்தா அணியில் பவுலிங்கில் 12வது ஓவரில் 17 ரன்களை வாரி வழங்கினார் வருண் சக்கரவர்த்தி.
அதேபோல் நரைன் பவுலிங்கில் மேக்ஸ்வெல் 28 ரன்கள் அடித்து வெளியேறினார். அதன்பின்னர் பெங்களூரு அணி 18 ஓவர்களில் 153 ரன்களை எடுத்திருந்தது. விராட் கோலி மற்றும் தினேஷ் கார்த்திக் கூட்டணியும் சிறப்பாக அமைந்தது. தினேஷ் கார்த்திக் ரஸ்ஸல் பவுலிங்கில் தொடர்ந்து 2 சிக்ஸர்களை அடித்தார். அதேபோல் கடைசி ஓவரில் 16 ரன்கள் சேர்க்கப்பட்டது. ஆகையால் பெங்களூரு அணி 20 ஓவரில் 182 ரன்கள் எடுத்தநிலையில் கொல்கத்தா அணிக்கு 183 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
அதன்பின்னர் பேட்டிங்கில் களமிறங்கிய கொல்கத்தா அணி இலக்கைப் பற்றி கவலைக் கொள்ளாமல் அதிரடியாக விளையாட ஆரம்பித்தது. சால்ட் 20 பந்துகளில் 30 ரன்கள் எடுத்தார். சுனில் 22 பந்துகளில் 47 ரன்களை குவித்து அதிரடியாக விளையாடினார். அதேபோல் வெங்கடேஷ் ஐயரும் 30 பந்துகளில் அரைசதம் அடித்து வெளியேறினார். இந்த மூன்று வீரர்களுமே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் இலக்கை அடைவது சுலபமாகிவிட்டது. அதன்பின்னர் ஸ்ரேயஸ் ஐயர் 39 ரன்களும், ரிங்கு 5 ரன்களும் எடுத்து அணியை வெற்றிபெறச் செய்தனர்.
இதனால் கொல்கத்தா அணி 16.5 ஓவர்களிலேயே 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் போட்டியைக் கைப்பற்றியது.