

உலகளவில் சாதனை படைத்த இந்திய சதுரங்க வீரர் விஸ்வநாதன் ஆனந்தைத் தொடர்ந்து, தற்போது குகேஷ், பிரக்ஞானந்தா, அர்ஜுன் எரிகாய்சி போன்ற பல இளம் இந்திய வீரர்கள் செஸ் விளையாட்டில் உலகை அசத்தி வருகின்றனர். இது எப்படி சாத்தியமானது? இதுபோல் உங்கள் குழந்தைகளுக்கும் திறமை உள்ளதா?
சதுரங்கத்தின் ஆரம்பம்:
சதுரங்கத்தின் ஆணிவேர் பண்டைய வட இந்தியாவில் உள்ளது. கி.பி. 6ஆம் நூற்றாண்டில் குப்த பேரரசின்போது சதுரங்கம் (Chaturanga) என்ற பெயரில் இது விளையாடப்பட்டது. இந்த விளையாட்டு போர்க்களத்தை அடையாளப்படுத்தியது; இதன் காய்கள் காலாட்படை (Infantry), குதிரைப்படை, யானைகள் மற்றும் தேர்களைக் குறித்தன. இந்தியாவிலிருந்து இது சத்ரஞ்ச் (Shatranj ) என்ற பெயரில் பெர்சியாவிற்கும் (ஈரான்), பின்னர் அரபு உலகிற்கும்; இறுதியாக ஐரோப்பாவிற்கும் பரவியது. அங்கு இது தரப்படுத்தப்பட்ட விதிகளுடன் நவீன சதுரங்கமாக உலகெங்கும் பரிணமித்தது.
உலகை அதிரவைக்கும் இந்திய சதுரங்கம் மற்றும் அதன் வளர்ச்சி:
இன்று இந்தியாவின் சதுரங்க ஆதிக்கதிற்கு உத்வேகமாக, ஐந்து முறை உலக சாம்பியனான விஸ்வநாதன் ஆனந்த்தான் பார்க்கப்படுகிறார். இது சென்னை போன்ற நகரங்கள் சதுரங்க மையங்களாக மாறி, எண்ணற்ற கிராண்ட்மாஸ்டர்களை உருவாக்கக் காரணமாக இருந்தது. உலகளவில் இந்தியாவின் வெற்றிகளுக்குப் பின்னால் உள்ள மேஜிக் பல காரணங்களின் கலவையாக உள்ளது. இது ஆரம்பக்கட்டத்திலேயே ஒருவரின் திறமையை அங்கீகரிப்பது, வலுவான நிறுவன ஆதரவு மற்றும் அறிவுசார் விளையாட்டுகளை மதிக்கும் கலாச்சார சூழல் ஆகியவற்றில் உள்ளது. இதனால் பள்ளிகளில் சதுரங்கம் பரவலாகக் கற்பிக்கப்படுகிறது, அனைத்து மட்டங்களிலும் போட்டிகள் ஏற்பாடு செய்யப்படுகின்றன. திறமையாளர்களின் எழுச்சியைச் சீக்கிரம் உறுதி செய்கிறது.
சிறந்த பயிற்சி நிறுவனங்கள்:
இந்தியாவில் சென்னையில் உள்ள வேலம்மாள் சதுரங்க அகாடமி, மும்பையில் உள்ள இந்திய சதுரங்கப் பள்ளி மற்றும் கிராண்ட்மாஸ்டர் ஆர்.பி. ரமேஷ் அவர்களால் நிறுவப்பட்ட சதுரங்க குருகுல் போன்ற பல புகழ்பெற்ற சதுரங்க அகாடமிகள் உள்ளன. இந்த நிறுவனங்கள் தேசிய, சர்வதேசப் போட்டிகளுக்காக வீரர்களுக்குப் பயிற்சி அளிக்கின்றன. அதோடு உளவியல் ரீதியான பயிற்சி, உலகளாவிய போட்டிகளில் பங்கேற்கும் வாய்ப்பையும் வழங்குகின்றன. சதுரங்கத்தில் இந்தியா ஒரு வல்லரசாக உருவெடுப்பதில் இத்தகைய அகாடமிகள் முக்கியப் பங்கு வகிக்கின்றன.
உங்கள் குழந்தைகளைச் சதுரங்கம் சாம்பியனாக மாற்றுவது எப்படி?
சதுரங்கத்தில் சிறந்த செயல்பாட்டை உறுதி செய்யும் குழந்தைகள், பெரும்பாலும், நினைவாற்றல், பொறுமை, கவனம் மற்றும் சிக்கல்களைத் தீர்க்கும் திறன்களை வெளிப்படுத்துகிறார்கள். அவர்கள் ஒரு விஷயத்தை முன்கூட்டியே சிந்திக்கும் திறன் கொண்டவர்களாகவும், புதிர்களை விரும்புபவர்களாகவும், எந்த ஒரு போட்டி சூழல்களிலும் தோல்வியைத் தடுக்கப் போராடுபவர்களாகவும் இருப்பார்கள். ஆக, இதுபோன்ற இயல்பான குணங்கள் அவர்களை இந்த விளையாட்டுக்கு மிகவும் பொருத்தமானவர்களாக ஆக்குகின்றன. இருப்பினும் பயிற்சியின் மூலம் இவற்றை மேலும் வளர்க்க முடியும்.
இதில் விளையாடுபவர்களுக்குக் கிடைக்கும் கௌரவங்கள்:
இந்தியாவில் தேசிய, சர்வதேச சதுரங்கப் போட்டிகளில் பங்கேற்கும் வீரர்கள், அரசு அல்லது அதன் கூட்டமைப்புகளிடமிருந்து விருதுகள், கல்வி உதவித்தொகைகள், நிதி உதவிகள் மூலம் அங்கீகாரம் பெறுகிறார்கள். அவர்கள் உலகத் தரம் வாய்ந்த பயிற்சி வாய்ப்புகளையும், உலகளாவிய போட்டிகளுக்கான கதவுகளைத் திறக்கும் நிதியுதவிகளையும் பெறுகிறார்கள். இதில் பெறும் வெற்றியானது கௌரவம், மரியாதை மற்றும் எதிர்காலச் சதுரங்கத் திறமையாளர்களுக்கு உத்வேகம் அளிக்கும் வாய்ப்பையும் தருகிறது. வெகுமதிகளுக்கு அப்பால் அவர்களின் பங்கேற்பு ஒழுக்கம், மன உறுதி, அறிவுசார் வளர்ச்சியை வளர்க்கிறது; இவை வாழ்நாள் முழுவதும் அவர்களுக்குப் பயனளிக்கின்றன.