இந்திய ஆண்கள் அணி அகமதாபாத்தில் மார்ச் 8,2026 நியூசிலாந்து அணியை வீழ்த்தி பத்தாவது டி20 உலக கோப்பையை கைப்பற்றியது. இதில் ஆல்ரவுண்டராக இந்திய அணியின் சார்பில் விளையாடிய சிவம் துபே கோப்பை வென்ற சில மணி நேரங்களில் ரயிலில் மூன்றாம் தர ஏசி கோச்சில் மும்பை சென்றதன் பின்னணி குறித்து கூறியுள்ளதை இப்பதிவில் காண்போம்.
அகமதாபாத் நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி இந்திய அணி பத்தாவது டி20 உலகக் கோப்பையை கைப்பற்றியதால் நாடு முழுவதும் கொண்டாட்டங்கள் களை கட்டின. கிரிக்கெட் ரசிகர்கள் நாடு முழுவதும் தெருக்களிலும் வீரர்கள் மைதானத்திலும், ஹோட்டலிலும் வெற்றிக் கொண்டாட்டத்தில் மூழ்கி இருந்தனர்.
இத்தகைய வரலாற்று சிறப்பு வாய்ந்த கொண்டாட்டங்களுக்கு மத்தியில் சிவம் துபே மட்டும் அமைதியாக மும்பை செல்லும் ரயிலில் அதிகாலையிலேயே பயணம் செய்தார். அதற்கான காரணம் குறித்து அவர் கூறும் போது,
உலகக்கோப்பை வென்ற அந்த தருணத்தில் மனது முழுவதும் என்னுடைய தந்தையையும் குழந்தையையும் பார்க்க வேண்டும் என்ற ஆவல் மேலிட்டது. கட்டுப்படுத்த முடியாத அந்த உணர்ச்சியின் காரணமாக எவ்வளவு சீக்கிரத்தில் வீட்டிற்கு செல்ல முடியுமோ அவ்வளவு சீக்கிரம் செல்ல வேண்டுமென நினைத்தேன். முதலில் விமானத்தில் செல்ல முடிவெடுத்தேன். ஆனால் உலகக்கோப்பை இறுதிப் போட்டி காரணமாக அகமதாபாத்தில் இருந்து மும்பைக்கு செல்லும் விமானங்கள் நிரம்பிவிட்டன.(Full booking)
சாலை மார்க்கமாக செல்வதை விட ரயிலில் பயணம் செய்தால் விரைவாக மும்பை சென்றடைய முடியும் என்ற காரணத்தால் உடனடியாக டிக்கெட் முன்பதிவு செய்ய முயன்றேன். நட்சத்திர வீரராகவும் உலகக் கோப்பை வென்ற நாயனாகவும் இருப்பதால் மக்களால் எளிதாக அடையாளம் காண முடியும். இதனால் அன்பு தொல்லை ஏற்படக்கூடும் எனத் தெரிந்திருந்தும் தன்னுடைய அவசரத்திற்காக 3-Tier AC (மூன்றடுக்கு குளிர்சாதன வசதி) பெட்டியில் பயணம் செய்ய முடிவு செய்து தனது மனைவி அஞ்சும் கான் மற்றும் ஒரு நண்பருடன் அதிகாலை 5:10 மணி ரயிலில் பயணத்தைத் தொடங்கினார்.
சிவம் துபேயின் இந்த முடிவு குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் கவலை அளித்தது. ரயில் நிலையத்திலோ அல்லது ரயிலுக்குள்ளேயோ ரசிகர்கள் இவரை அடையாளம் கண்டு கொண்டால் கூட்டம் கூடி சிரமம் ஏற்பட்டு பாதுகாப்பு பிரச்சனை ஏற்படும் என எச்சரித்தனர்.
இதனை தீர்க்க சிவம் துபே முடிவு செய்து தனது அடையாளத்தை மறைக்க முகக்கவசம் (Mask) மற்றும் தொப்பி (Cap) அணிந்து கொண்டதோடு, கைகளில் உள்ள டாட்டூக்கள் தெரியாமல் இருக்க முழுக்கை டி-ஷர்ட் (Full Sleeve T-shirt) அணிந்து கொண்டார்.
அதிகாலை ரயிலை தேர்ந்தெடுத்த சிவம் துபே, ரயில் புறப்படுவதற்கு 5 நிமிடங்களுக்கு முன்பு வரை காரில் அமர்ந்திருந்து விட்டு கடைசி நிமிடத்தில் வேகமாக சென்று தனது இருக்கையில் அமர்ந்துள்ளார். யாரும் இவரை அடையாளம் கண்டு கொள்ளாததால் எந்தவித சிக்கலும் இல்லாமல் தனது குடும்பத்தை பாதுகாப்பாகச் சென்று சந்தித்தார்.
வேற்று மதத்தைச் சார்ந்த அஞ்சும் கான் என்பவரை காதலித்து பெற்றோர் சம்பந்தத்துடன் மணம் முடித்தார். இஸ்லாமிய மற்றும் இந்து என இரு மத சடங்குகளுடன் இரு வீட்டாரின் சம்மதத்துடன் நடைபெற்று மதத் தடைகளை தாண்டி இவர்கள் கட்டமைத்துள்ள அழகான குடும்பம் சிவம் துபேயை உலகக்கோப்பை வெற்றிக்கு பிறகு ஓடோடி வரவைத்துள்ளது.
ஒரு விளையாட்டு வீரர் எவ்வளவு புகழ் பெற்று இருந்தாலும் விளையாட்டில் எத்தனையோ உலக சாதனைகள் செய்திருந்தாலும் தனது குடும்பமே எல்லாவற்றிலும் முதன்மையானது என்பதை சிவம் துபே நிருபித்துள்ளார். கோடான கோடி ரசிகர்கள் கொண்டாடும் ஒரு கிரிக்கெட் வீரராக இருந்து கொண்டு சாதாரண மனிதரை போல ரயிலில் பயணித்து தனது தந்தையையும், குழந்தையையும் பார்க்கச் சென்ற அவரது எளிமை அனைவரையும் கவர்ந்துள்ளது.