ஒருநாள் போட்டியிலும் ஸ்ரேயாஸ் ஐயர் இல்லை! அவருக்கு பதில் யார்?

ஒருநாள் போட்டியிலும் ஸ்ரேயாஸ் ஐயர் இல்லை! அவருக்கு பதில் யார்?
Updated on

சிறந்த பேட்ஸ்மேனாக வளர்ந்து வருபவர் ஸ்ரேயாஸ் ஐயர். சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில், கடந்தாண்டு அதிக ரன்களை (724 ரன்கள்) அடித்த இந்திய வீரரான ஸ்ரேயாஸ் ஐயர் தற்போது அடிக்கடி காயத்தினால் பாதிக்கப்பட்டு வருகிறார். இதனால் ஆஸ்திரேலியாவுக்கெதிரான ஒருநாள் போட்டியிலும் அவர் விளையாடமாட்டார் என்ற தகவல் வெளியாகி வருகிறது.

இந்தியாவின் தலைசிறந்த பேட்ஸ்மேன்களைப் போல், சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தி முன்னுக்கு வந்துகொண்டிருப்பவர் ஸ்ரேயாஸ் ஐயர். அவரது ஆட்டமும் ரசிக்கும்படியாக இருக்கும். சீக்கிரமாகவே இந்திய அணியில், தனக்கென ஒரு சிறப்பான அடையாளத்தை உருவாக்குவார் என்று எதிர்பார்க்கப்படும் வேளையில், தற்போது அடிக்கடி காயங்களினால் பாதிக்கப்பட்டு வருகிறார்.

இதன் காரணமாக, நியூசிலாந்து அணிக்கெதிரான போட்டியில் அவர் பங்கேற்காத நிலையில், பெங்களூருவில் இருக்கும் தேசிய கிரிக்கெட் அகாடமியில் பங்கெடுத்து உடல் தகுதியை மீட்டார்.

இந்நிலையில், அவர் ஆஸ்திரேலியாவுக்கெதிரான டெஸ்ட் தொடரில் முதல் டெஸ்ட்டில் பங்கெடுக்காத நிலையில், 2வது, 3வது டெஸ்ட்டுகளில் பங்கெடுத்தார். அதில் அவர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியும் நல்ல ஸ்கோரை எட்ட முடியவில்லை. தொடர்ச்சியாக 4வது டெஸ்ட்டில் அவர் விளையாடவிருந்த நிலையில், அப்போது அவருக்கு மீண்டும் உடல் சார்ந்த வலி ஏற்பட்டு அந்த போட்டியில் விளையாட முடியாமல் போனது.

இதுசம்பந்தமாக ரோகித் சர்மா பேசுகையில், ஸ்ரேயாஸ் ஐயருக்கு வலி மிகவும் அதிகமாக இருக்கிறது. அதனால் அவர் உடனே விளையாட திரும்புவது சற்று இயலாத காரியம் என்று குறிப்பிட்டுள்ளார். அதேசமயம், அவரது உடல்நலன் குறித்த மருத்துவமனை அறிக்கை இன்னும் தங்களுக்கு கிடைக்கவில்லை என்றும் கூறியுள்ளார்.

இந்தியா-ஆஸ்திரேலியா மோதும் ஒருநாள் போட்டி வரும் 17ம் தேதி நடக்கவிருக்கும் நிலையில், ஸ்ரேயாஸ் ஐயர் அதில் பங்கெடுப்பது கேள்விக்குறியாகியுள்ளது. இருந்தாலும், தற்போது ஜடேஜா அணிக்கு திரும்பியுள்ளதால், மிடில் ஆர்டரில் பெரிய அளவில் பாதிப்பு இருக்காது எனவும் நம்பப்படுகிறது.

logo
Kalki Online
kalkionline.com