

இங்கிலாந்தில் ஐசிசி நடத்தும் டி20 மகளிர் உலகக் கோப்பை தொடர் நடைபெற்று வருகிறது. இந்திய அணி தனது முதல் போட்டியில் பாகிஸ்தானை எதிர் கொண்டு சிறப்பான வெற்றியை பதிவு செய்தது. இந்திய அணியின் இரண்டாவது போட்டி நெதர்லாந்து அணியுடன் நேற்று நடைபெற்றது. இந்த போட்டியின் போது இந்திய அணியின் துணை கேப்டனும் , அணியின் நட்சத்திர ஆட்டக்காரரான ஸ்மிருதி மந்தனா ஒரு புதிய உலக சாதனையை நிகழ்த்தி காட்டினார்.
இந்த போட்டியில் டாஸ் வென்ற நெதர்லாந்து அணி, இந்திய அணியை பேட்டிங் செய்யுமாறு பணித்தது. இந்தியாவின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஷபாலி வர்மாவும் ஸ்மிருதி மந்தனாவும் களம் இறங்கி மிகவும் அதிரடியாக விளையாடி எதிரணியினை நிலைகுலைய வைத்தனர். இந்த இரண்டு ஆட்டக்காரர்களும் 11 ஓவர் வரை நிலைத்து நின்று ஆடி அந்த அணியை கதிகலங்க வைத்தனர்.
ஸ்மிருதி மந்தனா 47 பந்துகளை எதிர் கொண்டு 11 பவுண்டர்களை விளாசி 74 ரன்களை எடுத்தார். மறுபுறம் அவருக்கு சிறப்பான ஒத்துழைப்பு கொடுத்த ஷபாலியும் 10 பவுண்டரிகளுடன் 55 ரன்களை எடுத்து , இந்த தொடரின் தனது முதல் அரை சதத்தினை பதிவு செய்தார். இந்த பார்ட்னர்ஷிப் 115 ரன்கள் என்ற வலுவான நிலைக்கு அணியினை நிலை நிறுத்தியது.
ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 5 விக்கெட்டுகளை இழந்து 209 ரன்கள் எடுத்திருந்தது . இந்த ஸ்கோர் மகளிர் டி20 உலக கோப்பை போட்டிகளில், இந்திய அணி அடித்துள்ள அதிகபட்ச ஸ்கோர் என்ற சாதனையையும் பதிவு செய்துள்ளது. விக்கெட் கீப்பர் ரிச்சா கோஷ் மிகவும் அதிரடியாக விளையாடி 2 சிக்ஸர்கள் 1 பவுண்டரியுடன் 20 ரன்கள் எடுத்து களத்தில் இருந்தார். அவருடன் 2 பந்துகளில் 10 ரன்களைக் குவித்து தீப்தி சர்மாவும் உடன் இருந்தார்.
அடுத்து களம் இறங்கிய நெதர்லாந்து மகளிர் அணி , ஆரம்பத்தில் இருந்து ரன்களை எடுக்க கடுமையான சிரமத்தினை எதிர்கொண்டது. இந்திய அணியின் அசாத்தியமான பந்துவீச்சினை எதிர் கொள்ள முடியாமல் நெதர்லாந்து அணி தொடர்ச்சியாக விக்கெட்டை பறிகொடுத்து கொண்டே வந்தது.
அந்த அணியில் பாப்ட் டி லெய்ட் மட்டும் அதிகபட்சமாக 28 ரன்களை எடுத்திருந்தார். தடுமாறிய அந்த அணி அனைத்து விக்கட்டுகளையும் இழந்து 114 ரன்களை மட்டுமே குவித்து படுதோல்வி அடைந்தது.
இந்த போட்டியில் 11 பவுண்டரிக்களை விளாசியதன் மூலம் , டி20 சர்வதேச கிரிக்கெட் வரலாற்றிலேயே 600 பவுண்டரிகளை அடித்த முதல் வீராங்கனை என்று மிகப்பெரிய சாதனையை ஸ்மிருதி மந்தனா படைத்துள்ளார். இந்த சாதனை மகளிர் டி 20 உலகக்கோப்பை போட்டிகளில் மட்டுமல்லாமல் , ஆண்கள் டி20 உலக கோப்பை போட்டிகளிலும் வேறு எவரும் இந்த சாதனையை நிகழ்த்தியதில்லை.
இதுமட்டுமல்லாமல் மகளிர் டி20 உலகக் கோப்பை தொடரில், ஸ்மிருதி மந்தனா – ஷபாலி வர்மா பார்ட்னர்ஷிப் 502 ரன்கள் குவித்து மற்றொரு சாதனையை படைத்துள்ளது. இந்த ஜோடி 486 ரன்கள் குவித்திருந்த மிதாலி ராஜ் – புனம் ரவுத் சாதனையை தகர்த்துள்ளனர். இத்துடன் 6 அரை சதங்கள் அடித்து டி 20 உலகக் கோப்பை தொடரில் அதிக அரை சதம் அடித்த இந்திய வீராங்கனை என்ற பெருமையும் ஸ்மிருதி பெற்றுள்ளார்.