

இந்திய மகளிர் அணி, டி20 உலக கோப்பையை வெல்வதற்கு பேட்டிங்கில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்று, முன்னாள் தலைமை தேர்வாளர் ஹேமலதா கலா கூறியுள்ளார். தற்போது இங்கிலாந்தில் தொடங்கியுள்ள டி20 மகளிர் உலகக் கோப்பையை இந்திய அணி கைப்பற்றுவதற்கு ஒரு சில அறிவுரைகளை அவர் கூறியுள்ளார்.
ஐசிசி டி 20 உலக கோப்பைக்கு இந்திய மகளிர் அணி தயாராகி வருகிறது. கோப்பையை வெல்வதற்கான அனுபவமும் சிறந்த பேட்டிங் திறனும் இந்திய அணியிடம் இருப்பதாக முன்னாள் இந்திய கேப்டனும் முன்னாள் தலைமை தேர்வாளருமான ஹேமலதா கலா நம்புகிறார்.
அவர் கூறியதாவது " இந்த உலகக் கோப்பையில் அமன்ஜோத் கவுர் மற்றும் காஷ்வி கௌதம் ஆகிய ஆல் ரவுண்டர்கள் காயம் அடைந்தது அணிக்கு பின்னடைவாக இருந்தாலும் , தேர்வு குழு சிறப்பான அணியை தேர்ந்தெடுத்துள்ளது. காயத்திலிருந்து மீண்டு சேலஞ்சர்ஸ் டிராபி மற்றும் இங்கிலாந்திற்கு எதிரான போட்டிகளிலும் சிறப்பாக விளையாடிய யாஸ்திகா பாட்டியாவை அணியில் சேர்த்தது சிறந்த தேர்வாக அமைந்துள்ளது.
இந்திய மகளிர் அணியின் பலமே ஸ்மிருதி மந்தனா மற்றும் ஷபாலி வர்மா ஆகியோர் தொடக்க ஜோடியாக களமிறங்குவது தான். இவர்கள் சிறப்பான முறையில் விளையாடி இந்திய அணிக்கு நல்லதொரு துவக்கத்தை கொடுப்பார்கள். அதன் பிறகு கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர், ரிச்சா கோஷ் ஆகியோரின் ஆட்டத்தை முடிக்கும் திறனும் அணிக்கு கை கொடுக்கும். மீண்டும் ஒருமுறை இந்திய அணி தனது வலிமையான பேட்டிங் வரிசையை சார்ந்து இயங்க வேண்டி உள்ளது" என்று ஹேமலதா தெரிவித்துள்ளார்.
மேலும் தொடர்ந்த அவர் "கேப்டன் ஹர்மன்பிரீத் கவுரின் முக்கியப் பங்குடன் கூடிய மிடில் ஆர்டர், அதன்பின் ரிச்சா கோஷின் ஃபினிஷிங் திறன்கள் என அனைத்தும் கைகொடுக்கும். பவர்பிளேயில் ஸ்மிருதியும் ஷஃபாலியும் மிகவும் அதிரடியாக விளையாடி, அணிக்கு வலிமையான தொடக்கத்தை அளிப்பது முக்கியம். 2017 ஆம் ஆண்டு நடைபெற்ற ஒரு நாள் உலகைக் கோப்பை தொடரில் , இந்திய அணி இறுதிப் போட்டியில் விளையாட , ஸ்மிருதியின் அதிரடியான பேட்டிங் ஒரு முக்கிய காரணம் என்பது எனக்கு நினைவில் இருக்கிறது.
ஒரு வலுவான துவக்கம் எதிரணியை பலவீனப்படுத்துவதோடு , அடுத்து இறங்கும் வீரங்கனைகளுக்கு அழுத்தத்தை குறைத்து சுதந்திரமாக விளையாட வழி செய்கிறது. இங்கிலாந்து தொடரிலும் பயிற்சி ஆட்டங்களிலும் இந்திய அணி ஆடுகளத்திற்கு ஏற்ப தங்களை மாற்றிக் கொண்டுள்ளது. இங்கிலாந்து ஆடுகளங்கள் பேட்டிங்கிற்கு சாதகமாக இருந்தாலும் , அங்கு அடிக்கடி மழை பெய்யும் வாய்ப்பு உள்ளதால், ஆடுகளத்தின் தன்மை பேட்டிங்கிற்கு எதிராக மாறும். இதனால் அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டிக்குத் தகுதிபெற நல்ல வியூகங்களை சிந்திக்க வேண்டும் என்று அறிவுரை கூறியுள்ளார்.
நெருக்கடியான சூழலில் ஹர்மன்பிரீத் கவுர் பேட்டிங் அணிக்கு கைகொடுக்கும். அவர் இந்திய பேட்டிங்கின் முதுகெலும்பாக இருக்கிறார். மிடில் ஆர்டரில் அவரது பங்களிப்பு, ஒட்டுமொத்த பேட்டிங் பிரிவிற்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் தூணாக இருக்க வேண்டும். மகளிர் அணியின் புதிய வீராங்கனையான நந்தினி சர்மா, பவுன்சர்கள், மெதுவான பந்துகள் என மாறுபட்ட பந்துவீச்சில் சிறப்புடன் செயல்படுகிறார். ஷஃபாலியும் சிறப்பாக செயல்படுவார்.
ஆல்ரவுண்டர் ராதா யாதவ் தேர்ந்த சுழற்பந்து வீச்சாளர் மற்றும் தடுப்பாட்டக்காரர், அவரை ஆடும் லெவனில் சேர்ப்பது அவசியம். விக்கெட் கீப்பர் ரிச்சா கோஷ் அதிரடியான ஆட்டத்தால் , விளையாட்டின் போக்கையே மாற்றக் கூடியவர் , இவருக்கு முன்னால் ஹர்மனும் ஜெமிமாவும் பேட்டிங்கில் களமிறங்க வேண்டும். இந்திய அணி சாம்பியன் பட்டம் பெற தேவையான அனைத்து அம்சங்களும் பெற்றுள்ளது. இங்கிலாந்தின் ஆடுகளத்தை புரிந்து கொண்டு ஐசிஐசி மகளிர் டி20 உலக கோப்பையை வெல்ல தயாராக வேண்டும் என்று ஹேமலதா கலா கூறியுள்ளார்.