

டி20 உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா மற்றும் இலங்கையில் வரும் பிப்ரவரி 7-ஆம் தேதி முதல் மார்ச் 8-ஆம் தேதி வரை டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற உள்ளது. மொத்தம் 20 அணிகள் பங்கேற்கும் இத்தொடரில், அணிகள் நான்கு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இதில் இந்திய அணி ‘ஏ’ பிரிவில் இடம் பெற்றுள்ளது. இந்தியாவைத் தவிர பாகிஸ்தான், நமீபியா, நெதர்லாந்து மற்றும் அமெரிக்கா ஆகிய அணிகள் இந்தப் பிரிவில் களம் காணுகின்றன.
உலகக் கோப்பை தொடருக்கான 15 வீரர்கள் கொண்ட இந்திய அணியை பிசிசிஐ இன்று (டிசம்பர் 20) அறிவித்துள்ளது. அதிரடி வீரர் சூர்யகுமார் யாதவ் அணியின் கேப்டனாகவும், ஆல்-ரவுண்டர் அக்சர் படேல் துணை கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். கடந்த சில போட்டிகளாக பார்ம் அவுட்டில் இருந்த தொடக்க வீரர் சுப்மன் கில் அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். இக்குழு தேர்வு ரசிகர்களிடையே பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.அதேபோல் ஜிதேஷ் சர்மாவும் அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். இஷான் கிஷன், ரிங்கு சிங் மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளனர்.
இந்திய அணியின் அட்டவணைப்படி, தனது முதல் லீக் ஆட்டத்தில் பிப்ரவரி 7-ஆம் தேதி மும்பை வான்கடே மைதானத்தில் அமெரிக்காவை எதிர்கொள்கிறது. அதனைத் தொடர்ந்து பிப்ரவரி 12-ல் நமீபியாவுடனும், கிரிக்கெட் உலகமே ஆவலுடன் எதிர்பார்க்கும் இந்தியா - பாகிஸ்தான் மோதல் பிப்ரவரி 15-ஆம் தேதி கொழும்பிலும் நடைபெற உள்ளது. இறுதியாக, பிப்ரவரி 18-ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும் லீக் ஆட்டத்தில் நெதர்லாந்து அணியுடன் இந்தியா மோதவுள்ளது.
இந்திய அணி விவரம்: சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), அக்சர் படேல் (துணை கேப்டன்), அபிஷேக் சர்மா, சஞ்சு சாம்சன், திலக் வர்மா, ஹர்திக் பாண்ட்யா, ஷிவம் துபே, ரிங்கு சிங், பும்ரா, ஹர்ஷித் ராணா, அர்ஷ்தீப் சிங், குல்தீப் யாதவ், வருண் சக்ரவர்த்தி, வாஷிங்டன் சுந்தர், இஷான் கிஷன்.