

ஒரு விபத்தில் ஐந்து மாதக்குழந்தைக்கு எதிர்பாராதவிதமாக கண் பார்வை பறிப்போகிறது. 'இனி அவ்வளவு தான். இந்த குழந்தையின் எதிர்காலம் என்னவாகுமோ?' என்று நினைத்து அவளின் பெற்றோர் வருந்தினர். ஆனால், அவர்களுக்கு அன்று தெரியாது அவர்களின் மகள் தான் இந்தியாவிற்கு முதல் பார்வையற்றோருக்கான மகளிர் டி20 உலகக் கோப்பையை (Women's World Cup) வென்று தருவார் என்று.
ஆந்திராவில் உள்ள ஒரு சிறிய கிராமத்தில் 24 வருடங்களுக்கு முன் தீபிகா பிறக்கிறார். இவர் பிறந்த ஐந்தே மாதத்தில் எதிர்ப்பாராத விதமாக ஒரு விபத்தில் சிக்கி கண் பார்வையை இழக்கிறார். ஓரளவுக்கு தான் தீபிகாவால் பார்க்க முடியும் என்ற நிலை ஏற்பட்டது. அதேசமயம் அவர்கள் பெற்றோர்களுக்கு சொந்த வயலே இருந்தாலும் அடிக்கடி தண்ணீர் இன்றி வறண்டு போவதால், தினக்கூலி வேலைக்கு போக ஆரம்பிக்கிறார்கள்.
மூன்று வேளை சாப்பாட்டிற்கே கஷ்டப்பட்டாலும், தன் மகளை நன்றாக படிக்க வைக்கிறார்கள். ஏழாவது படிக்கும் போது தீபிகா ஸ்பெஷல் ஸ்கூலுக்கு மாறுகிறார். அங்கே தீபிகா விளையாடும் போது அவருடைய விளையாட்டு திறமையையும், ஒலியை கணிக்கக்கூடிய வேகத்தையும் ஒரு ஆசிரியர் கவனிக்கிறார். "நீ ஏன் Blind cricket விளையாடாக் கூடாது? உனக்கு அதில் பெரிய எதிர்க்காலம் இருக்கிறது" என்று சொல்கிறார்.
தீபிகா முடிந்த அளவுக்கு அந்த ஆசிரியரிடம் தன் வறுமை நிலையை சொல்லி புரியவைக்கிறார். ஆனால் ஆசிரியரோ, தன்னால் முடிந்த அளவு பணத்தை அவரின் பெற்றோருக்கு அனுப்புவதாகவும், தீபிகாவை விளையாட்டில் மட்டும் கவனமாக இருக்கவும் சொல்கிறார். Blind cricket ஐ பொருத்த வரை பாலில் (ball) இருந்துவர ஒலியை சரியாக கணித்து பாலை அடிக்க வேண்டும்.
கடுமையாக பயிற்சி எடுத்து தீபிகா மிகவும் சீக்கிரமே தன் திறமையை வளர்த்துக் கொள்கிறார். அதற்கு பிறகு தொடர்ந்து நிறைய மாநில அளவிலான விளையாட்டுகளில் நன்றாக விளையாடுகிறார். தான் மட்டுமில்லாமல் தன்னுடன் சேர்த்து விளையாடுபவர்களையும் நன்றாக விளையாடுவதற்கு உதவுகிறார். கடைசியாக ஒருநாள் இந்திய டீமில் கேப்டனாக தேர்ச்சி பெறுகிறார்.
சமீபத்தில் நடந்த Inaugural Women's T20 World Cup for the Blind 2025ல் இந்தியாவை அசத்தலாக வழிநடத்தி ஒரு மேட்ச்சில் கூட தோற்காமல் இந்தியாவிற்கு முதல் பார்வையற்றோருக்கான மகளிர் டி20 உலகக் கோப்பையை ஜெயித்து கொடுத்தார். சாதாரணமாக இந்த விளையாட்டை பார்க்கும் போது நமக்கு ஈஸியாக தெரியலாம். ஆனால், பார்வை குறைப்பாடுடன் விளையாடும் அவர்களுக்கே இதன் கஷ்டம் புரியும். இந்த வெற்றி, இந்தியாவில் மாற்றுத்திறனாளிப் பெண்களின் கிரிக்கெட் துறைக்கு ஒரு பெரிய உத்வேகத்தைக் கொடுத்துள்ளது.