

கர்நாடகாவின் பெல்லாரியில் நடந்த 2வது இந்தியன் ஓப்பன் ஜம்ப்ஸ் போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த வீரர் ஜெஸ்வின் ஆல்ட்ரின், நீளம் தாண்டுதலில் 8.42 மீ தாண்டியதன் மூலம், முரளி ஸ்ரீசங்கரின் 8.36 மீட்டர் சாதனையை முறியடித்து புதிய சாதனை படைத்துள்ளார்.
நேற்று கர்நாடக மாநிலம் பெல்லாரியில் இன்ஸ்பையர் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஸ்போர்ட்-ஸில் 2வது இந்தியன் ஓப்பன் ஜம்ப்ஸ் போட்டி நடைபெற்றது. அதில் ஆடவர்களுக்கான நீளம் தாண்டுதல் போட்டியில் தமிழக வீரர் ஜெஸ்வின் ஆல்ட்ரின் புதிய தேசிய சாதனை படைத்தார்.
அதன்படி, நேற்றைய போட்டியில் பங்கேற்ற 21 வயது இளைஞனான ஜெஸ்வின் ஆல்ட்ரின் தனது முதல் முயற்சியில் 8.05 மீ தாண்டினார். அடுத்து இரண்டாவது முயற்சியில் 8.26 மீ தாண்டினார். அடுத்ததாக மூன்றாவது முயற்சியில் தான் அவர் 8.42 மீ தாண்டி இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார்.
இந்த சாதனையின் மூலம் சென்ற வருடம் 8.36 மீ தாண்டி தேசிய சாதனை படைத்த முரளி ஸ்ரீசங்கரின் சாதனையை தற்போது இவர் முறியடித்து புதிய சாதனை நிகழ்த்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.