ஆஸ்திரேலியா கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர் தனது இறுதி டெஸ்ட் போட்டியில் விளையாடி முடித்துவிட்டு கிளவுஸ் மற்றும் ஹெல்மெட்டை இளம் ரசிகர் ஒருவருக்கு பரிசாக கொடுத்தது ரசிகர்களை நெகிழ்ச்சி அடைய செய்துள்ளது.
பாகிஸ்தான் அணி மற்றும் ஆஸ்திரேலியா அணி நேற்று கடைசி டெஸ்ட் போட்டியின் கடைசி நாளில் விளையாடியது. இதில் ஆஸ்திரேலியா அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது. இந்த போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் பாகிஸ்தான் அணி 115 ரன்கள் எடுத்தது. இதனால் ஆஸ்திரேலியா அணிக்கு 130 ரன்கள் இலக்காக அமைந்தது. இதனையடுத்து வார்னர் தனது கடைசி டெஸ்ட் போட்டி விளையாட களமிறங்கினார்.
அப்போது பாகிஸ்தான் அணி வார்னருக்கு மரியாதை செலுத்தியது. அதன்பின் விளையாடிய வார்னர் 57 ரன்கள் எடுத்து அவுட்டாகினார். தனது கடைசி போட்டியில் அரைசதம் எடுத்து சென்றது ரசிகர்களை மிகவும் உற்சாகப்படுத்தியது. அவுட்டானப் பின் ரசிகர்களுக்கு நன்றித் தெரிவிக்கும் விதமாக ஹெல்மெட்டை கழற்றி கையை அசைத்தார், வார்னர். பின் பவிலியனுக்கு சென்ற வார்னர் போகும் வழியில் அவரின் இளம் ரசிகர் ஒருவருக்கு தனது ஹெல்மெட்டையும் கிளவுஸையும் கொடுத்துவிட்டு சென்றார்.
இதனால் அந்த இளைஞர் உற்சாகமாக தலைக்கால் புரியாமல் ஆடினார். ஆஸ்திரேலியா அணி வெற்றிபெற்றதை அடுத்து பாகிஸ்தான் வீரர்களுக்கு வார்னர் இறுதியாக கைக்குழுக்கி விட்டு திரும்பினார். பின்அவரின் குடும்பத்தினரிடம் கட்டியணைத்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.
இறுதியாக வார்னர் பேட்டி கொடுத்தார். பேட்டியில் வார்னர் பேச முடியாமல் சில வார்த்தைகள் மட்டும் பேசிவிட்டு கண்ணீருடன் வெளியேறினார். இது மைதானத்தில் உள்ள ரசிகர்களை நெகிழ்ச்சி அடையச் செய்தது. பின்னர் அரங்கத்தில் இருந்த அத்தனை ரசிகர்களும் மைதானத்திற்குள் இறங்கி வந்து அவருக்கு விடைக்கொடுத்தனர்.
இதற்கு முன்னர் 1990ம் ஆண்டு சிட்னி மைதானத்தில் முதன்முறையாக ரசிகர்கள் இறங்கினார்கள். அதன்பின்னர் இப்போதுதான் ரசிகர்கள் இரண்டாவது முறையாக மைதானத்தில் டேவிட் வார்னருக்காக இறங்கியுள்ளனர். இது ஒட்டு மொத்த கிரிக்கெட் ரசிகர்களையும் ஆச்சரியத்தில் தள்ளிவிட்டது என்றே கூற வேண்டும்.