FIFA துரத்தியதா? இந்தியா புறக்கணித்ததா? உலகக்கோப்பை சர்ச்சையின் நிஜம்!

FIFA - இந்திய கால்பந்து அணி
FIFA - இந்திய கால்பந்து அணிAI Image
Updated on

FIFA அமைப்பு இந்திய அணியை விளையாட விடாமல் துரத்திவிட்டது என்று ஒரு பரவலான கட்டுக்கதை உலகெங்கிலும் வலம் வருகிறது. இது உண்மையா? ஏன் இந்திய கால்பந்து அணி FIFA-தொடரில் விளையாடுவது இல்லை என்று பார்ப்போமா?

1948ம் ஆண்டு லண்டனில் நடைபெற்ற ஒலிம்பிக் தொடரில் இந்திய கால்பந்து அணி பங்கேற்றது. இந்தியா சுதந்திரம் அடைந்ததும் பங்கேற்ற முதல் பெரும் தொடர். அப்போது இந்திய அணி வீர்ரகளுக்கு பூட்ஸ் அணியும் பழக்கம் இல்லை, வெறும் துணியை காலில் சுற்றிக்கொண்டுதான் விளையாடுவார்கள். ஆனால், இது மற்ற நாடுகளுக்கு வித்தியாசமாகவும், ஆச்சர்யமாகவும் கேலி செய்யும் ஒரு விஷயமாகவும் அமைந்தது. என்னதான் காலில் துணி கட்டிக்கொண்டு விளையாடினாலும், இந்திய அணி மிகவும் பலம் வாய்ந்த அணியாகவே இருந்தது. அசுர பலம் வாய்ந்த பிரான்ஸ் நாட்டு அணியை எதிர்த்து 1-2 என்ற கோல் கணக்கில் இந்தியா மிகக் கடுமையான 'டஃப்' கொடுத்தது. இரண்டு பெனால்டி வாய்ப்புகள் மட்டும் நழுவாமல் இருந்திருந்தால், அன்று இந்திய அணி பிரான்ஸை வீழ்த்தியிருக்கும்.

இந்திய கால்பந்து அணி
இந்திய கால்பந்து அணிAI Image

அப்போட்டி முடிந்ததும், பத்திரிக்கையாளர்கள் இந்திய அணியின் கேப்டனிடம் இதுகுறித்து கேட்டனர். அப்போதைய இந்திய கால்பந்து அணியின் கேப்டன், நாகாலாந்தைச் சேர்ந்த தலிமெரென் ஆவோ. அவரிடம் "ஏன் பூட்ஸ் போடாமல் விளையாடினீர்கள்? கால் வலிக்கவில்லையா?" என்று ஆச்சரியத்துடன் கேட்டனர்.

அதற்கு அவர் சிரித்துக்கொண்டே "இந்தியாவில் நாங்கள் விளையாடுவது 'கால்பந்து' (Football), ஆனால் நீங்கள் விளையாடுவது 'பூட்பந்து' (Bootball)!" என்று நக்கலாக சொன்னார்.

இது உலகளவில் அப்போது பேசுபொருளானது. அதேசமயம், இந்திய வீரர்களுக்கு வெறும் காலுடன் மட்டுமே விளையாட தெரியும் என்ற பிம்பத்தை உண்டு செய்தது.

பின் 1950ம் ஆண்டு, இரண்டாம் உலகப் போருக்குப் பின் நடந்த முதல் உலகக் கோப்பையில், பல நாடுகள் பொருளாதார ரீதியாகப் பாதிக்கப்பட்டிருந்தன. ஆசியப் பிரிவில் தகுதிச் சுற்றில் விளையாட வேண்டிய பிலிப்பைன்ஸ், இந்தோனேசியா, பர்மா (மியான்மர்) ஆகிய நாடுகள் பல்வேறு காரணங்களால் திடீரென தொடரிலிருந்து பின்வாங்கின. இதன் விளைவாக, ஆசிய கண்டத்திலிருந்து போட்டியின்றி இந்தியா தானாகவே உலகக் கோப்பைக்குத் தகுதி பெற்றது.

இதையும் படியுங்கள்:
பிரேசில் படைத்த உலக சாதனைகளும் கின்னஸ் பக்கங்களில் இடம்பிடித்த கால்பந்து ரகசியங்களும்!
FIFA - இந்திய கால்பந்து அணி

அத்தொடரில் வெறும் காலுடன் விளையாட அனுமதி இல்லை என்று FIFA அமைப்பு கூறவே இல்லை. ஆனால், இதனால் தான் இந்திய கால்பந்து அணி அத்தொடரிலிருந்து புறகணிக்கப்பட்டது என்று பரவலாக பேசப்பட்டது. ஆனால், அத்தொடரிலிருந்து விலகியது முழுக்க முழுக்க இந்திய அணியின் முடிவே ஆகும்.

அதற்கு காரணம், அப்போது FIFA இப்போதிருப்பதுபோல அப்படியொன்றும் பெரிய தொடரெல்லாம் இல்லை. ஒலிம்பிக் மட்டுமே உலக நாடுகள் மத்தியில் பெரியதாக இருந்தது. அதேபோல், இந்திய அணி ப்ரேசில் செல்வதற்கான பயணச் செலவு தங்கும் செலவு ஆகியவை குறித்து எண்ணியும் அந்த வாய்ப்பை புறகணித்தது. ப்ரேசில் முழுச் செலவையும் நாங்களே பார்த்துக்கொள்கிறோம் என்று கூறியும் இந்திய அணி அந்த வாய்ப்பை பயன்படுத்தவில்லை. அதேபோல், வெளிநாட்டு தொடருக்காக உள்ளூர் தொடர்களை தள்ளிவைப்பதில் இந்திய கால்பந்து அமைப்பிற்கு சிறிதும் உடன்பாடில்லை.

FIFA அமைப்பு இந்திய அணியை புறகணிக்கவில்லை, இந்திய அணிதான் இதனை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. ஒருவேளை, இந்திய அணி அன்று கலந்துக்கொண்டிருந்தால், இன்று இந்திய கால்பந்து அணியின் கட்டமைப்பும், தரமும் உலக அளவில் வேறொரு உயரத்தில் இருந்திருக்குமோ?

logo
Kalki Online
kalkionline.com