19 வயதுக்குட்பட்டவருக்கான உலககோப்பை தொடர் அடுத்த ஆண்டு இலங்கையில் நடைபெறும் என்றிருந்த நிலையில் இப்போது தென்னாப்பிரிக்காவிற்கு மாற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஐசிசி ஆடவருக்கான உலககோப்பை தொடர் இந்தியாவில் இந்த ஆண்டு அக்டோபர் 1ம் தேதி தொடங்கி நவம்பர் 19ம் தேதி முடிவடைந்தது. இதனையடுத்து U19 உலககோப்பை தொடர் அடுத்த ஆண்டு ஜனவரி 13ம் தேதி இலங்கையில் தொடங்கி பிப்ரவரி 4ம் தேதி முடிவடையும் என அதிகாரப்பூர்வ அட்டவணை வெளியானது.
ஆனால் இப்போது U19 உலககோப்பை தொடர் தென்னாப்பிரிக்காவில் ஏற்கனவே குறிப்பிட்ட அதே தேதிகளில் நடைபெறும் என்று ஐசிசி தெரிவித்துள்ளது. இப்படி திடீரென்று இடத்தை மாற்ற என்ன காரணம் என்று ரசிகர்கள் குழம்பி இருந்த நிலையில் அதற்கான காரணம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
U19உலககோப்பை தொடர் இலங்கையிலிருந்து தென்னாப்பிரிக்காவுக்கு மாற்றியதற்கு காரணம் இலங்கை கிரிக்கெட் வாரியத்தின் மேல் அந்நாட்டு அரசின் தலையீடுத்தான் என கூறப்படுகிறது. இதுகுறித்து நேற்று அகமதாப்பாத்தில் நடைபெற்ற ஐசிசி உறுப்பினர்களுக்கான கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
பின்னர் இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய ஐசிசி உறுப்பினர்கள், “ U19 உலககோப்பை தென்னாப்பிரிக்காவிற்கு மாற்றப்பட்டுள்ளது. ஏற்கனவே 2020ம் ஆண்டு தென்னாப்பிரிக்காவில்தான் நடைபெற்றது. இலங்கை கிரிக்கெட் வாரியத்தில் தற்காலிகமான இந்த இடைநிறுத்தம் எந்த வகையிலும் உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தாது” என தெரிவிக்கப்பட்டது.