Carlos Alcaraz
Carlos Alcaraz

யு.எஸ்.ஓபன்: காலிறுதியில் கார்லோஸ் அல்காரஸ்!

Published on

யு.எஸ். ஓபன் டென்னிஸ் போட்டியில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் நான்காவது சுற்று ஆட்டத்தில் உலகின் நெம்பர் 1 வீரரான அல்காரஸ், இத்தாலியின் மாட்டீ அர்னால்டை 6-3, 6-3, 6-4 என்ற செட் கணக்கில் வென்று காலிறுதிக்கு தகுதி பெற்றார்.

நடப்பு சாம்பியனான அல்காரஸுக்கு இத்தாலிய வீரரை வெல்ல ஒரு மணி நேரமும் 57 நிமிடங்கள் மட்டுமே தேவைப்பட்டது. யு.எஸ்.ஓபன் போட்டியில் அல்காரஸ் காலிறுதியை எட்டுவது இது மூன்றாவது முறையாகும்.

யு.எஸ்.ஓபன் போட்டியில் முதல் முறையாக களம் இறங்கிய இத்தாலிய வீரர் மாட்டீ அர்னால்டை எதிர்கொள்வது அல்காரஸுக்கு ஒன்றும் கடினமாக இல்லை. எனினும் மூன்றாவது செட்டில் அல்காரஸின் சர்வீசை அர்னால்டு முறியடித்தார். ஆனாலும் அல்காரஸ் ஆட்டத்தை தன்கையில் கொண்டுவந்து வெற்றியை நிலைநாட்டினார்.

முன்னதாக விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் பட்டம் வென்ற ஸ்பெயின் வீரரான அல்காரஸ், தொடக்கத்திலிருந்தே இத்தாலிய வீரருக்கு எதிரான ஆட்டத்தில் தீவிரம் காட்டி வந்தார்.

“நான் ஆரம்பத்திலிருந்தே ஒரே மாதிரியான  அணுகுமுறையில் விளையாடினேன். உண்மையிலேயே இந்த போட்டி சுவாரஸ்மாக இருந்தது. தவறுகள் அதிகம் செய்யாமல் சிறப்பாக ஆடினேன். அது எனக்கு வெற்றியை தேடித்தந்தது” என்று அல்காரஸ் மகிழ்ச்சி பொங்க கூறினார்.

கடினமான ஆடுகளம்தான் எனக்கு பிடித்தமானது. விம்பிள்டன் போட்டியை வென்றபிறகு எனக்கு புல்தரை மீது விருப்பம் இருந்தது. ஆனாலும் கடினமான ஆடுகளம்தான் எனக்கு மிகவும் பிடித்தமானது. களிமண் தரைக்கு மூன்றாவது இடம்தான் என்றார் அல்காரஸ்.

காலிறுதிக்குள் நான் நுழைந்துவிட்டாலும் இனிவரும் போட்டிகள் எனக்கு கடுமையாகவே இருக்கும் என்று நம்புகிறேன்” என்றார் அல்காரஸ்.

logo
Kalki Online
kalkionline.com