
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் இந்திய கிரிக்கெட் அணி 'பார்டர் - கவாஸ்கர்' கோப்பைக்கான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.
இந்த நிலையில் மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் இவ்விரு அணிகளுக்கு இடையிலான 4-வது டெஸ்ட் போட்டியில்தான் இந்த சம்பவம் நடந்தது. விராட் கோலியிடம் ஆஸ்திரேலிய ரசிகர்கள் வரம்பு மீறி செயல்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
மெல்போர்ன் டெஸ்டின் முதல் நாள் ஆட்டத்தில், ஆஸ்திரேலிய புதுமுக பேட்ஸ்மேன் சாம் கான்ஸ்டாசை, இந்திய நட்சத்திர வீரர் விராட் கோலி தேவையின்றி தோள்பட்டையால் இடித்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் எழுந்த நிலையில் உடனடியாக அருகில் இருந்த உஸ்மான் கவாஜா மற்றும் நடுவர்கள் உள்ளே புகுந்து அவர்களை விலக்கினர்.
இது குறித்து விசாரித்த ஐ.சி.சி. போட்டி நடுவர் ஆன்டி பைகிராப்ட் கோலிக்கு போட்டி கட்டணத்தில் 20 சதவீதம் அபராதமாக விதித்தார். மேலும் கோலிக்கு ஒரு தகுதி இழப்பு புள்ளியும் விதிக்கப்பட்டது. ஆனாலும் கோலிக்கு விதிக்கப்பட்ட தண்டனை போதுமானது அல்ல என ஆஸ்திரேலிய ஊடகத்தினரும், முன்னாள் வீரர்களும் கடுமையாக விமர்சித்தனர்.
தி வெஸ்ட் ஆஸ்திரேலியா பத்திரிகை ஒரு படி மேலே சென்று, ‘கோமாளி கோலி’ என்று தலைப்பிட்டு செய்தி வெளியிட்டு கடும் கண்டனத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியது. ஆஸ்திரேலிய ஊடகத்தின் இந்த செயல் இந்திய ரசிகர்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தி இருந்த நிலையில், இதற்கு இந்திய முன்னாள் வீரர்களும், ரசிகர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
விராட் கோலிக்கு எதிராக ஆஸி ரசிகர்கள் அவமரியாதையாக அவதூறாகப் பேசுவது முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும், நாங்கள் கிங் விராட் கோலியின் பின்னால் உறுதியாக நின்று இத்தகைய நடத்தையை கண்டிக்கிறோம் என்றும் அவரது ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
மெல்போர்ன் டெஸ்டில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியை பெற்றுள்ள நிலையில் நான்காவது டெஸ்ட் போட்டி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இந்த நிலையில், 36 ரன்களில் ஆட்டம் இழந்த பிறகு விராட் கோலி பெவிலியன் நோக்கி சென்றார். அப்போது ஆஸ்திரேலிய ரசிகர்கள் அவரை இழிவாக திட்டி கோஷம் எழுப்பினர்.
இதனால் எல்லைக்கோட்டை கடந்து சிறிது தூரம் உள்ளே சென்ற விராட் கோலி கோபத்துடன் வெளியே வந்து ரசிகர்களை முறைத்து பார்த்தார்.
இதை பார்த்த ஆடுகள பாதுகாவலர் விராட் கோலியை சமாதானப்படுத்தும் நோக்குடன் அவரை ஓய்வறைக்கு அழைத்து சென்றார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பேசுபொருளாகி வருகிறது.
மெல்போர்னில் தரையிறங்கியதிலிருந்து உள்ளூர் ஊடகங்களால் விராட் கோலி குறிவைக்கப்பட்டார்.
2 ஆண்டுக்கு முன்பு இதே மைதானத்தில் விராட் கோலி விளையாடிய போது (20 ஓவர் உலகக் கோப்பையில் இந்தியா- பாகிஸ்தான் மோதல்) குழுமியிருந்த 90 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரசிகர்கள் அவரை உற்சாகப்படுத்தி கொண்டாடிய நிலையில், இன்று அதே இடத்தில் கேலி - கிண்டலுக்குள்ளாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.