விராட் கோலி Vs கம்பீர் : மைதானத்தில் என்ன நடந்தது?

விராட் கோலி Vs கம்பீர் :  மைதானத்தில் என்ன நடந்தது?

நேற்று நடந்த பெங்களூர் - லக்னோ அணிகளுக் கிடையான ஐபிஎல் போட்டியில் விராட் கோலியும் கம்பீரும் வாய்த் தகராறில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. 

2023 ஐபிஎல் போட்டிகள் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில் நேற்று நடந்த பெங்களூர் மற்றும் அணிகளுக்கு இடையேயான மேட்சில், விளையாட்டு மைதானம் பேட்டிங் செய்வதற்கு கொஞ்சம் கூட சாதகமாக இல்லை. முழுக்கு முழுக்க மைதானமானது ஸ்லோ பிச்சாகவும், பந்துவீச்சாளர் களுக்கு உகந்த பிச்சாகவும் தயார் செய்யப்பட்டிருந்தது. இதனால் முதலில் பேட்டிங் செய்த பெங்களூர் அணி கடுமையாகத் திணறி 126 ரன்கள் மட்டுமே குவித்தது. அதிரடியாக ஆடக்கூடிய மேக்ஸ்வெல், கோலி, டு பிளசிஸ் ஆகியோரும் மெதுவாகவே ஆடினார்கள். இதையடுத்து களமிறங்கிய லக்னோ அணியும் அடுத்தடுத்து விக்கட்டுகளை பறிகொடுத்து, 108 ரன்கள் மட்டுமே குவித்து அனைத்து விக்கெட்டையும் இழந்து தோல்வியடைந்தது.

போட்டியின் தொடக்கத்திலிருந்தே விராட் கோலி மிகுந்த ஆக்ரோஷமாக காணப்பட்டார். லக்னோ அணியின் க்ருணால் பாண்டியா அவுட் ஆனபோது, வாயில் விரலை வைத்து ஷூ என சொல்வது போல சைகை செய்தார். பின்னர் அப்படி செய்யக்கூடாது என்பது போல சைகை செய்து இதய வடிவத்தைக் காட்டினர். இதற்கு முன்னதாக நடந்த பெங்களூர்-லக்னோ மேட்சில், லக்னோ அணி வென்றபோது, பெங்களூர் ரசிகர்களைப் பார்த்து ஷூ என்பது போல கௌதம் கம்பீர் சைகை காட்டினார். ஒரு எம்பி-யாக இருப்பவர் ரசிகர்களைப் பார்த்து இப்படி செய்யக்கூடாது என மிகப் பெரிய சர்ச்சை கிளம்பியது. 

இதற்கு பதிலடி தரும் வகையிலேயே, க்ருணால் பாண்டியா அவுட் ஆனபோது கோலியும் இதே சைகையைக் காட்டி, பின்னர் அப்படி செய்யக்கூடாது என்று ஹார்ட் சிம்பலைக் காட்டினார். அதன் பிறகு 18.4 வது ஓவரில் லக்னோ அணியின் வீரரான நவீன் உல் ஹக் அவுட் ஆனபோது கோலிக்கும் அவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் இருவரும் வார்த்தைகளை பரிமாறிக் கொண்டனர். 

இதையடுத்து, போட்டி முடிந்ததும் லக்னோ வீரரான கைல் மேயர்ஸ் விராட் கோலியுடன் சகஜமாக பேசிக் கொண்டிருந்தார். அப்போது சிறுபிள்ளைத்தனமாக நடந்து கொண்ட கம்பீர், அங்கு வந்து கைல் மேயர்ஸின் கையைப் பிடித்து, நீ அவனுடன் பேசக்கூடாது என்பது போல இழுத்துச் சென்றார். மைதானத்தில் கௌதம் கம்பீர் இப்படி நடந்து கொண்ட விதம் கடும் விமர்சனங்களை சந்தித்தது. விராட் கோலியும் அந்த இடத்திலேயே அதை விமர்சனம் செய்தார். இதைப் பார்த்த கௌதம் கம்பீர் ஏதோ பேசிக்கொண்டு விராட் கோலியை நோக்கி முன்னேறிச் சென்றார். விராட் கோலியும் எந்த பயமும் இல்லாமல், அவர் முகத்திற்கு நேராக சென்று, நீங்கள் செய்தது தவறு என்று கூறி கண்டித்து பேசினார். 

பின்னர் கே.எல் ராகுல் கம்பீரை சமாதானம் செய்ய முயன்றும் அவர் அதைக் கேட்கவில்லை. அதேபோல நவீனை கோலியிடம் பேச வைக்க முயன்றார். பேச்சுவார்த்தைக்கு கோலி தயாராக இருந்தபோதும், நவீன் பேச விரும்பவில்லை. இந்த சம்பவம் நேற்று மைதானத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதில், பெரும்பாலான ரசிகர்கள் விராட் கோலிக்கே ஆதரவாகப்பேசி வருகின்றனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com