சாம்பியன்ஸ் ட்ராபி நெருங்கி வரும் நேரத்தில் இந்திய அணியை தோற்கடித்து பழி வாங்குவோம் என்று பேசியிருக்கிறார் இங்கிலாந்து வீரர் ஒருவர்.
இந்தியா இங்கிலாந்து அணிகள் இடையேயான டி20 மற்றும் ஒருநாள் தொடர்கள் நடைபெற்று வருகின்றன. ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெற்றது. இந்த தொடரில் இந்திய அணி 4 போட்டிகளில் வெற்றிபெற்றது. முதல் டி20 போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்திலும், 2-வது போட்டியில் 2 விக்கெட் வித்தியாசத்திலும், 4-வது போட்டியில் 15 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது. 3-வது டி20 போட்டியில் மட்டும் இங்கிலாந்து அணி 26 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கடைசி போட்டியில் இந்திய அணியே வெற்றிபெற்றது.
இதனைத்தொடர்ந்து ஒருநாள் கிரிக்கெட் தொடர் ஆரம்பமானது. முதல் போட்டியில் இந்திய அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது. அதேபோல், இரண்டாவது போட்டியில் 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றிபெற்றது.
இப்படி இந்திய அணி தொடர்ந்து வெற்றிகளை குவித்து வருவதால், இங்கிலாந்து வீரர் ஒருவர் அடுத்த போட்டியிலும் இந்திய அணி வென்றால் எங்களுக்கு ஒன்றும் இல்லை, அதற்காக மற்றொரு இடத்தில் பழி வாங்குவோம் என்று பேசியிருக்கிறார்.
இங்கிலாந்து அணியின் துவக்க வீரர் பென் டக்கெட் இங்கிலாந்து அணியின் தொடர் தோல்விகளை குறித்து பேசுகையில், “நாங்கள் இந்தியாவிடம் 3-0 என்று தோற்றாலும், சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியில் அவர்களை வென்றால் இந்த தோல்வி பற்றி எங்களுக்கு கவலையில்லை. அந்த இறுதிப் போட்டியில் நாங்கள் வெற்றி பெற்றால், இந்த தொடர் தோல்வியை நாங்கள் திரும்பிப் பார்க்க மாட்டோம்.” என்று பேசியிருக்கிறார்.
கடந்த 2023ம் ஆண்டிலிருந்து இந்த தொடர் வரை ஒருநாள் போட்டிகளில் இங்கிலாந்து அணி சிறப்பாக விளையாடவில்லை என்பதும், ஒரு வெற்றிகூட பெறவில்லை என்பதும் அனைவரும் அறிந்ததே. இப்படியான நிலையில், சாம்பியன்ஸ் ட்ராபியில் வெற்றிபெறுமா என்பதுதான் எதிர்பார்ப்பாக உள்ளது.