ஐசிசி உலககோப்பை நேற்று குஜராத் மாநிலம் அஹமதாபாத் நகரில் உள்ள மோதி விளையாட்டு மைதானத்தில் இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து இடையேயான முதல் போட்டி நடந்தது.
இப்போடியில் இங்கிலாந்து ஓப்பனராக ஜோனி பேர்ஸ்டோ மற்றும் மலன் களமிறங்கினர். நீயுசிலாந்து அணி ஒப்பனராக கான்வே மற்றும் வில் யங் களமிறங்கினர். இந்த போட்டியில் நியூசிலாந்து அணி 283 என்ற இலக்கை கடந்து 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி அடைந்தது. நியூசிலாந்து அணியை சேர்ந்த கான்வே 121 பந்துகளில் 152 ரன்கள் குவித்தார். மற்றும் ரச்சின் ரவீந்திரா 96 பந்துகளில் 123 ரன்கள் குவித்து ஆட்ட நாயகன் ஆனார். ஆனால், அதன்பிறகுதான் ஒரு சுவாரஸ்யமான கதை இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு தெரியவந்துள்ளது.
யார் இந்த ரச்சின் ரவீந்திரா?
நியூசிலாந்து கிரிக்கெட் வீரரான ரச்சின் ரவீந்திரா 1999 ஆம் ஆண்டு நியூசிலாந்து தலைநகரமான வெல்லிங்டானில் பிறந்தார். ஆனால் இவரின் நம்முடைய இந்தியாதான். ரச்சினின் தாத்தா பாலகிருஷ்ணா அடிக கர்நாடகாவில் பிறந்து பெங்களூருவில் உள்ள விஜய் கல்லூரியில் உயிரியல் பேராசிரியராக பணியாற்றியவர். ரச்சினின் தந்தை ரவி கிருஷ்ணமூர்த்தி பெங்களூரில் சாப்ட்வேர் இன்ஜினியராக பணியாற்றினார். பின்னர் 1990களில் நியூசிலாந்து நாட்டிற்கு வேலை சூழல் காரணமாக குடிபெயர்ந்தனர். ஆனால், நியூசிலாந்திற்கு ரச்சின் குடும்பத்தினர் குடியேறுவதற்கு முன்பு வரை ரச்சின் பெங்களூருவில் நடைபெறும் உள்ளூர் போட்டிகளில் விளையாடி வந்துள்ளார். ரச்சின் அப்பா ரவி கிருஷ்ணமூர்த்திக்கு இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர வீரர்களாக இருந்த ராகுல் டிராவிட் மற்றும் சச்சின் ரசிகர். இதன்காரணமாக தன் மகனுக்கு ராகுல் பெயரிலிருந்த ”ரா” வையும் சச்சின் என்ற பெயரிலிருந்து ”ச்சின்” யும் எடுத்து “ரச்சின்” என்று பெயர் வைத்துள்ளார்.
நியூசிலாந்து அணியில் ஏற்கனவே இஷ் சோதி போன்ற இந்திய வம்சாவளி வீரர்கள் உள்ளனர். இப்போது அந்த வரிசையில் ரச்சினும் இணைந்துள்ளார்.
ரச்சின் உள்ளூர் போட்டிகளில் எவ்வளவு நன்றாக ஆடினாலும் சில காலமாக அவை பெரும் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. ஆனால் தளராமல் உள்ளூர் போட்டிகளில் ஆடிக்கொண்டே இருந்தார். அதன் விளைவால் நியூசிலாந்து தேசிய அணியில் தேர்வு செய்யப்பட்டார். ஆனாலும் நிரந்தரமான முதன்மை வீரராக இல்லை. நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் காயம் காரணமாக போட்டியில் இடம் பெறாத நிலையில் ரச்சின் ரவீந்திரா தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இடது கை பேட்ஸ்மேன் மற்றும் இடது கை சுழற் பந்துவீச்சாளரான ரச்சின் தனது அறிமுக டெஸ்ட் ஆட்டத்தை இந்தியாவை எதிர்த்து 2021 ஆம் ஆண்டு ஆடினார். பின்னர் தனது அறிமுக ஒரு நாள் கிரிக்கெட் ஆட்டத்தை 2023 ஆம் ஆண்டு இலங்கையை எதிர்த்து ஆடினார். அதேபோல் டி20 அறிமுக ஆட்டத்தை 2021 ஆம் ஆண்டு பங்களாதேஷை எதிர்த்து ஆடினார்.
ரச்சின் இதுவரை ஆடியுள்ள 13 ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளில் மொத்தம் 312 ரன்கள் மற்றும் பவுலிங்கில் 13 விக்கெட் எடுத்திருக்கிறார். மூன்று டெஸ்ட் போட்டிகளில் 73 ரன்கள் மற்றும் 3 விக்கெட்டுகள் எடுத்துள்ளார். அதேபோல் 18 டி20 ஆட்டங்களில் 145 ரன்கள் குவித்து 11 விக்கெட்டுகளை எடுத்துள்ளார்.
ரச்சின் ரவீந்திரா தனது முதல் ஐசிசி அறிமுக ஆட்டத்திலையே சதம் அடித்து கிரிக்கெட் ரசிகர்களை திரும்பிப்பார்க்க வைத்துள்ளார். நியூசிலாந்து அணியினருக்காக ரச்சின் ரவீந்திரா ஆடினாலும் அவர் உள்ளூர ஒரு இந்திய கிரிக்கெட் வீரரின் ஆட்டத்தை வெளிப்படுத்தி உள்ளார் என்றுதான் சொல்லவேண்டும்.