உலக கோப்பை கிரிக்கெட் லீக் போட்டியில் இன்று ஆப்கானின்ஸ்தான் இலங்கை அணியுடன் மோதுகிறது. மகாராஷ்டிர மாநிலம், புனேயில் உள்ள கிரிக்கெட் ஸ்டேடியத்தில் இந்த போட்டி நடைபெறுகிறது.
இலங்கை அணி, உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகளின் தொடக்கத்தில் ஆடிய மூன்று போட்டிகளிலும் தோல்வியைத் தழுவியது. எனினும் பின்னர் சுதாரித்துக் கொண்டு நெதர்லாந்து மற்றும் இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் வெற்றிபெற்றது. அரையிறுதிக்கு முன்னேற இது போதாது என்றாலும், இன்று ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் தனது மூன்றாவது வெற்றியை பதிவு செய்யும் எண்ணத்தில் இலங்கை இருக்கிறது.
ஆப்கானிஸ்தான் இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் வென்று அதிர்ச்சித் தோல்வி அளித்தது மற்றும் பாகிஸ்தானை வென்று அதன் அரையிறுதி கனவை தகர்த்தது. இலங்கையைப் போல ஆப்கானிஸ்தானுக்கு அரையிறுதி பகற்கனவு ஏதும் இல்லை என்றாலும், இலங்கை அணியை வெல்வதன் மூலம் உலக் கோப்பை போட்டியில் தன்னை நிலைநிறுத்திக் கொள்ள பார்க்கிறது.
ஆப்கானிஸ்தானும் இலங்கையும் இதுவரை 11 ஒருநாள் போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இவற்றில் 7 போட்டிகளில் இலங்கை அணியும் 3 போட்டிகளில் ஆப்கானிஸ்தானும் வெற்றிபெற்றுள்ளது. ஒரு போட்டி முடிவு ஏதும் ஏற்படாமல் முடிவடைந்தது.
புனேயில் உள்ள மகாராஷ்டிர கிரிக்கெட் சங்க ஸ்டேடியம் பேட்ஸ்மென்களுக்கு சாதகமான ஆடுகளமாகும். எனினும் ஆடுகளம் வேகப்பந்து வீச்சாளர்களுக்கும் உதவிகரமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், சுழற்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக இருக்கும் என்று சொல்ல முடியாது. இதுவரை இங்கு நடந்துள்ள 5 போட்டிகளில் முதலில் பேட் செய்த அணி 300 ரன்களை எட்டியுள்ளது.
டாஸ் ஜெயிக்கும் அணி முதலில் பீல்டிங்கை தேர்வுசெய்யக்கூடும் என்று சொல்லப்படுகிறது. வானம் தெளிவாக காணப்படுவதால் மழை பெய்வதற்கான வாய்ப்பு இல்லை. மழையால் ஆட்டம் தடைபடவோ தாமதமாகவோ முற்றிலும் வாய்ப்பு இல்லை என்றே வானிலை ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.