சீனாவின் ஹாங்சுவில் நடைபெற்று வரும் 19வது ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்தியா வெள்ளிக்கிழமை ஓரே நாளில் 2 தங்கம் உள்பட 8 பதக்கங்களை தட்டிச் சென்றது.
துப்பாக்கி சுடுதலில் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் போட்டியில் மகளிர் தனிநபர் பிரிவில் பாலக் தங்கப் பதக்கத்தையும், ஈஷா சிங் வெள்ளிப் பதக்கத்தையும் தட்டிச் சென்றனர். 10 மீட்டர் ஏர் பிஸ்டல் குழு போட்டியில் பாலக், குலியா, ஈஷா, திவ்யா ஆகியோர் அடங்கிய அணி வெள்ளிப் பதக்கத்தை கைப்பற்றியது.
ஆடவர்களுக்கான 50 மீட்டர் ரைஃபிள் துப்பாக்கி சுடுதல் போட்டியில் தனிநபர் பிரிவில் ஐஸ்வரி பிரதாப் வெள்ளிப் பதக்கம் வென்றார். குழு போட்டியில் ஐஸ்வரி பிரதாப், ஸ்வப்னில், அகில் ஆகியோர் இணைந்து தங்கம் வென்றனர்.
துப்பாக்கி சுடுதல் போட்டியில் மட்டும் இந்தியா 6 தங்கம் உள்பட மொத்தம் 17 பதக்கங்களை வென்றுள்ளது. 2006 ஆம் ஆண்டு தோஹாவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டு போட்டியில் இந்திய துப்பாக்கி சுடும் வீரர்கள் 14 பதக்கங்களை வென்றது குறிப்பிடத்தக்கது.
குண்டு எறிதல் போட்டியில் மகளிர் பிரிவில் 24 வயதான கிரன் பால்யன் வெண்கலம் வென்று வரலாறு படைத்தார். 72 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த போட்டியில் இந்தியா பதக்கம் வென்றுள்ளது. எனினும் இந்த போட்டியில் தங்கம் மற்றும் வெள்ளிப்பதக்கத்தை சீனாவின் லிஜியோவ் கோங் மற்றும் ஜியாயுவான் சோங் தட்டிச் சென்றனர்.
டென்னிஸ் ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ராம்குமார் ராமநாதன் மற்றும் சாகேத் மைனேனி ஜோடி, தைவானின் ஜாஸன் ஜங் மற்றும் யு ஹுசு ஜோடியை 4க்கு 6, 4க்கு 6 என்ற செட் கணக்கில் வென்று வெள்ளிப் பதக்கத்தை கைப்பற்றியது.
எனினும் கலப்பு இரட்டையர் பிரிவில் அரையிறுதியில் ரோஹன் போபண்ணா - ருதுஜா போஸ்லே ஜோடி, தைவானின் யு ஹுசு மற்றும் ஹாவ் ஜிங் சான் ஜோடியை 6க்கு 1, 3க்கு 6, 1க்கு 4 என்ற செட் கணக்கில் வென்று இறுதிச்சுற்றில் நுழைந்தது.