ஆசிய விளையாட்டு: இந்தியாவுக்கு மேலும் 3 பதக்கம்!
சீனாவின் ஹாங்ஸு நகரில் நடைபெற்று வரும் 19-வது ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் வியாழக்கிழமை இந்தியாவுக்கு மேலும் 3 பதக்கங்கள் கிடைத்தன. இதையடுத்து இந்தியா இதுவரை 25 பதக்கங்களைப் பெற்றுள்ளது.
துப்பாக்கி சுடுதலில் இந்தியாவுக்கு மேலும் ஒரு தங்கப்பதக்கம் கிடைத்தது. வுஷு போட்டியில் இந்தியா வெள்ளி வென்றது. குதிரையேற்றம் போட்டியில் வெண்கலப் பதக்கம் கிடைத்தது. இதனிடையே டென்னிஸ் அணிகள் பதக்கம் வெல்வதை உறுதிசெய்துள்ளன.
கால்பந்து சுற்றுப் போட்டியில் இந்தியா, செளதி அரேபியாவிடம் 2 க்கு 0 என்ற கோல்கணக்கில் தோல்வி அடைந்ததை அடுத்து போட்டி முடிவுக்கு வந்தது. எனினும் ஹாக்கி போட்டியில் இந்தியா, ஜப்பான் அணியை 4க்கு 2 என்ற கோல் கணக்கில் வென்றதை அடுத்து அரையிறுதியை நெருங்கியுள்ளது.
பாட்மின்டன் போட்டியில் இந்திய மகளிர் அணி மங்கோலியாவை 3க்கு 0 என வென்று காலிறுதிக்கு முன்னேறியது. நீச்சல் போட்டியில் இந்திய மகளிர் ரிலே அணியினர் புதிய தேசிய சாதனை படைத்த போதிலும் பதக்கம் வெல்லும் வாய்ப்பை இழந்தனர்.
டென்னிஸ் போட்டியில் இந்தியா இரண்டு பதக்கங்களை உறுதிசெய்துள்ளது. இதேபோல ஸ்குவாஷ் அணியும் அரையிறுதிக்கு தகுதி பெற்று பதக்கத்தை உறுதிசெய்துள்ளது.
துப்பாக்கி சுடுதலில் ஸ்கீட் கலப்பு இரட்டையர் பிரிவில் அனந்த் ஜீத் சிங் மற்றும் கனேமட் ஷெகோன் ஜோடி 5 வது இடத்தையே பெற்றது. எனினும் ஆடவர் 10 மீட்டர் பிஸ்டல் பிரிவில் இந்தியாவின் சரப்ஜித் சிங், அர்ஜுன் சிங் சீமா, சிவா நர்வால் அணியினர் தங்கம் வென்றனர்.
இந்த பிரிவில் தங்கம் வென்றதன் மூலம் இந்தியா துப்பாக்கி சுடுதல் போட்டியில் இதுவரை 13 பதக்கங்களை வென்றுள்ளது. அதாவது துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்தியா நான்கு தங்கம், நான்கு வெள்ளி, ஐந்து வெண்கலப் பதக்கங்களை வென்றுள்ளது. எனினும் தனிநபர் பிரிவில் சரப்ஜித் சிங், அர்ஜுன் சீமா பதக்கம் வெல்ல முடியவில்லை.
வுஷு போட்டியில் 60 கிலோ எடைப்பிரிவு இறுதியில் இந்தியாவின் ரோஷிபினா தேவி கடுமையாக போராடிய போதிலும் வெள்ளிப் பதக்கத்தையே பெற முடிந்தது. அவரை எதிர்த்து நின்ற சீனாவின் ஜியோவை 2க்கு 0 என்ற கணக்கில் வென்று தங்கத்தை தட்டிச் சென்றார்.
குதிரையேற்ற போட்டியில் அனுஷ் அகர்வல்லா தனிநரப் பிரிவில் வெண்கலம் வென்றார்.
டென்னிஸ் ஆடவர் இரட்டையர் பிரிவில் அரையிறுதியில் ராம்குமார் ராமநாதன் மற்றும் சாகேத் மைனேனி கொரியாவைச் சேர்ந்த சோனாவூ க்வான் மற்றும் சியோஞ்சன் ஹாங் ஜோடியை 6க்கு 1, 6க்கு 7, 10க்கு 0 என வென்று இறுதிக்கு தகுதி பெற்றனர்.
இதனிடையே ரோஹன் போபண்ணா, ருதுஜா போஸ்லே கலப்பு இரட்டையர் பிரிவில் அரையிறுதிக்குள் நுழைந்து பதக்கத்தை உறுதிசெய்துள்ளனர்.