சீனாவின் ஹாங்ஸு நகரில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டுப் போட்டியில் புதன்கிழமை இந்தியாவுக்கு 8 பதக்கங்கள் கிடைத்தன. இதனிடையே பதக்கப்பட்டியலில் இந்தியா 5 தங்கங்களுடன் மொத்தம் 22 பதக்கங்களை வென்று 7-வது இடத்தில் உள்ளது.
50 மீட்டர் துப்பாக்கி சுடும் போட்டியில் தனிநபர் பிரிவில் இந்தியாவின் சிப்ட் கெளர் சர்மா தங்கம் வென்றார். இந்த போட்டியில் ஆஷி செளக்க்ஷி வெண்கலம் வென்றார். குழு போட்டியில் (மனினி, ஆஷி, சிப்ட்) வெள்ளிப்பதக்கம் கிடைத்தது.
25 மீட்டர் துப்பாக்கி சுடும் போட்டியில் இளம் வீராங்கனை ஈஷா சிங் வெள்ளிப்பதக்கம் வென்றார். ஆடவர் ஸ்கீட் பிரிவில் அனந்த் ஜீத் சிங் வெள்ளிப்பதக்கம் வென்றார். எனினும் குழு பிரிவில் (ஈஷா, மனு, ரிதம்) இந்தியா தங்கம் வென்றது.
பாய்மரப் படகு போட்டியில் விஷ்ணு சரவணன் வெண்கலப் பதக்கம் வென்றார்.
இதனிடையே வுஷு அதெலடிக் போட்டியில் ரோஷிபினா தேவி மகளிர் 60 கிலோ சண்டா பிரிவில் அரையிறுதியில் வெற்றிபெற்று இறுதிக்கு தகுதி பெற்றார்.
ஹாக்கி போட்டியில் ஏ பிரிவில் இந்தியா, சிங்கப்பூரை 13க்கு 0 என்ற கணக்கில் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறியது.
டென்னிஸ் போட்டியில் ஆடவர் பிரிவில் சீனாவின் ஜிஜென், இந்தியாவின் நாகலை 6க்கு 7 (3), 6க்கு 1, 6க்கு 2 என்ற செட் கணக்கில் வென்றார். எனினும் இரட்டையர் பிரிவில் மைனேனி - ராம்குமார் ராமநாதன் ஜோடி, ஜிஜென்- யிபிங் ஜோடியை 6க்கு 1, 7க்கு 6 (8) என்ற செட் கணக்கில் வென்றது.
மகளிர் ஒற்றையர் பிரிவில் காலிறுதி ஆட்டத்தில் ஜப்பானின் காஜி, இந்தியாவின் அங்கீதாவை 3க்கு 6, 6க்கு 4, 6க்கு 4 என்ற செட் கணக்கில் வென்றார்.
எனினும் கலப்பு இரட்டையர் பிரிவில் ரோஹன் போபண்ணா- ருதுஜா சம்பத்ராவ் ஜோடி ஜப்பானின் ஷிமிஸு மற்றும் ஹஸாவா ஜோடியை 6க்கு 3, 6க்கு 4 என்ற செட் கணக்கில் வென்று காலிறுதிக்கு தகுதிபெற்றது.
குத்துச்சண்டை போட்டியில் ஆடவரில் ஷிவ் தாபா மற்றும் சஞ்ஜீத் தோல்வியடைந்து வெளியேறிய நிலையில், மகளிரில் நிகார் ஜரீன் கால்இறுதிக்கு முன்னேறினார்.