ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்திய ஆடவர் கைப்பந்து (வாலிபால்) அணி, குரூப் சி பிரிவில் நடைபெற்ற ஆட்டத்தில் கடந்த முறை வெள்ளிவென்ற தென்கொரிய அணிக்கு அதிர்ச்சித் தோல்வி தந்தது.
சீனாவின் ஜெஜியாங் நகரில் நடைபெற்ற போட்டியில் இந்திய அணி, பலம்பொருந்திய தென்கொரிய அணியை 3-க்கு 2 என்ற கணக்கில் வென்றது. அதாவது 25-27, 29-27, 25-22, 20-25 மற்றும் 17-15 என்ற செட்கணக்கில் வென்றது.
இந்த வெற்றியை அடுத்து இந்திய ஆடவர் அணி நாக் அவுட் போட்டிக்கு தகுதி பெற்றது. முன்னதாக செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மற்றொரு போட்டியில் இந்திய ஆடவர் அணி, கம்போடியாவை 3-0 என வென்றது குறிப்பிடத்தக்கது. இந்த வெற்றியின் மூலம் இந்திய அணிக்கு 5 புள்ளிகள் கிடைத்துள்ளன.
அமித் குலியா மற்றும் அஷ்வல் ராய் இருவரும் இந்திய அணிக்காக சிறப்பாக விளையாடி முக்கியமான கட்டங்களில் அணியில் ஸ்கோர் அதிகரிக்க உதவினர். அடுத்த சுற்றில் இந்தியா, சீன தைபே அல்லது மங்கோலியாவை சந்திக்கும்.
கைப்பந்துப் போட்டியில் ஜப்பான், சீனா மற்றும் தென்கொரிய அணிகள் பலம் வாய்ந்தவை. ஆசிய ஆடவர் கைப்பந்து போட்டியில் ஜப்பான் இதுவரை 16 முறை தங்கம் வென்றுள்ளது. சீன அணி 11 முறை தங்கம் வென்றுள்ளது. தென்கொரியா 5 முறை தங்கம் வென்று மூன்றாவது இடத்தில் உள்ளது.
1958 ஆம் ஆண்டு டோக்கியோவில் நடைபெற்ற ஆசியப் போட்டியில்தான் வாலிபால் (கைப்பந்து) முதல் முதலாக அறிமுகமானது. இந்திய ஆடவர் அணி இதுவரை 3 முறை பதக்கம் வென்றுள்ளது. 1962 ஆண்டு நடைபெற்ற போட்டியில் இந்திய சிறப்பாக விளையாடி ரன்னர் இடத்தை பிடித்தது. 1958 மற்றும் 1986 ஆம் ஆண்டுகளில் (37 ஆண்டுகளுக்கு முன்) நடைபெற்ற போட்டிகளில் இந்திய அணி வெண்கலம் வென்றது.
கடைசியாக இந்தோனேசியாவில் நடைபெற்ற கைப்பந்து போட்டியில் இந்தியா 12-வது இடத்தையே பிடித்தது குறிப்பிடத்தக்கது.
----------------