சீனாவில் ஆசிய விளையாட்டு போட்டிகள் தொடங்க உள்ளன. இந்த நிலையில் கிரிக்கெட், கால்பந்து போட்டிகள் ஏற்கெனவே தொடங்கி நடைபெற்று வருகின்றன. இந்த போட்டியில் மகளிர் கிரிக்கெட் காலிறுதி போட்டி நேற்று நடைபெற்றது. இதில் இந்திய அணி, மலேசியாவை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது.
இந்த போட்டியில் இந்திய மகளிர் அணி, மலேசிய அணியை எதிர்கொண்டது. டாஸ் வென்ற மலேசிய அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. வங்கதேசத்துக்கு எதிரான ஒரு போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்ப்ரீத், நடுவரை விமர்சித்ததால் 2 போட்டிகளில் பங்கேற்க அவருக்கு தடை விதிக்கப்பட்டது.
இதனால் ஸ்மிருதி மந்தனா தலைமையில் அணி களத்தில் இறங்கியது. மழை காரணமாக போட்டி 15 ஓவர்களாக குறைக்கப்பட்டது.
இந்திய அணியில் ஸ்மிருதி மந்தனா, ஷபாலி வர்மா ஜோடி நல்ல தொடக்கத்தை கொடுத்தது. மந்தனா 27 ரன்களும், ஷபாலி 67 ரன்களும் எடுத்தனர். இந்திய அணி 15 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் எடுத்தது. ஜெமிமா (47), ரிச்சா (21) இருவரும் கடைசி வரை அவுட்டாகாமல் இருந்தனர்.
டக்வொர்த் லீவிஸ் விதிமுறைப்படி 15 ஓவரில் 177 ரன்கள் எடுக்க வேண்டும் என்ற நிலையில் மலேசியா களத்தில் இறங்கியது. 2 பந்துகளில் 1 ரன் எடுத்திருந்த நிலையில் மீண்டும் மழை குறுக்கிட்டதால் போட்டி கைவிடப்பட்டது. ஐ.சி.சி. தரவரிசைப்படி ஆசிய அளவில் இந்திய மகளிர் அணி முதலிடத்தில் உள்ளதால் அரையிறுதிக்கு தகுதி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.