உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் புதன்கிழமை சென்னையில் நடைபெற்ற ஆட்டத்தில் நியூஸிலாந்து அணி, ஆப்கானிஸ்தானை 149 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. இதன் மூலம் நான்காவது தொடர் வெற்றியை பெற்று நியூஸிலாந்து புள்ளிப் பட்டியலில் முன்னிலை பெற்றுள்ளது.
ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து அணியை வென்று தனது இரண்டாவது வெற்றியை பதிவு செய்த ஆப்கானிஸ்தான், நியூஸிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் போராடி தோற்றது.
முதலில் விளையாடிய நியூஸிலாந்து அணி, நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 288 ரன்கள் எடுத்தது.
நியூஸிலாந்து அணி உற்சாகத்துடன் ஆட்டத்தை தொடங்கிய போதிலும், ஒரு கட்டத்தில் 110 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்தது. கேப்டன் டாம் லாதம் 68 ரன்களும், கிளென் பிலிப்ஸ் 71 ரன்களும் குவித்தனர். இருவரும் ஓரளவு நின்று ஆடி ஐந்தாவது விக்கெட்டுக்கு 144 ரன்கள் சேர்த்தனர். வில் யங் 54 ரன்களும், ராச்சின் ரவீந்திரா 32 ரன்களும் எடுத்து அணியில் ஸ்கோர் அதிகரிக்க உதவினர்.
ஆப்கானிஸ்தான் பந்துவீச்சாளர்களில் நவீன், ஓமராஸி தலை 2 விக்கெட்டுகளையும், முஜிப், ரஷீத் தலா ஒருவிக்கெட்டுகளையும் எடுத்தனர்.
அடுத்து விளையாடிய ஆப்கானிஸ்தான் 34.4 ஓவர்களில் 139 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
289 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் ஆப்கானிஸ்தான் களம் இறங்கியது. ஆனால், தொடக்க ஆட்டக்காரர்களான ரஹமனுல்லா குர்பாஸ் 11 ரன்களிலும், இப்ராகிம் ஜர்தான் 14 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். ரஹ்மத் ஷா மட்டும் 36 ரன்கள் எடுத்தார். மற்றபடி அனைத்து வீரர்களும் நியூலாந்து பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து வெளியேறினர்.
இறுதியில் ஆப்கானிஸ்தான் 139 ரன்களில் வீழ்ந்தது. நியூஸாந்து பந்துவீச்சாளர்களில் மிட்செல் சான்ட்னர், லாக்கி பெர்குஸன் இருவரும் 3 விக்கெட்டுகளை சாய்த்தனர். போல்ட் 2, ஹென்றி, ரவீந்திரா தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றினர்.
இதையடுத்து நியூஸிலாந்து அணி 149 ரன்கள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தானை வென்றது.