உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்று ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன.
பெங்களூருவில் உள்ள சின்னசாமி விளையாட்டரங்கில் ஐந்துமுறை சாம்பியன் பட்டம் வென்ற ஆஸ்திரேலிய அணி, பாகிஸ்தானை எதிர்கொள்கிறது.
முதல் இரண்டு போட்டிகளில் இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளிடம் தோல்வியடைந்த ஆஸ்திரேலிய அணி, 3-வது போட்டியில் இலங்கையை வெற்றிகண்டது. மூன்று போட்டிகளிலும் ஆஸ்திரேலிய பேட்ஸ்மென்கள் தங்கள் திறமையை வெளிப்படுத்தி ஆடவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். இலங்கைக்கு எதிரான போட்டியில் மட்டும் மிட்சல் மார்ஷ், இங்கிலிஷ் அரைசதம் எடுத்தனர்.
எனினும் மார்னஸ் லபுசாக்னே, வார்னர், ஸ்மித் நம்பிக்கை அளிக்கிறார்கள். மிடில் ஆர்டர் பேட்ஸ்மென்களும் அதிரடி காட்டினால்தான் பாகிஸ்தானை வெல்ல முடியும். ஆடம் ஜம்பா, மேக்ஸ்வெல் சிறப்பாக பந்துவீசினால் ஆஸ்திரேலியா இரண்டாவது வெற்றியைப் பெறலாம்.
நெதர்லாந்து, இலங்கையை வீழ்த்திய பாகிஸ்தான் அணி, இந்தியாவிடம் தோல்வி அடைந்தது. தொடக்க ஆட்டக்காரர் ஃபக்கர் ஜமான் முழங்காலில் அடிபட்டுள்ளதாலும் அணியில் சிலருக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளதாலும் பாகிஸ்தான் ஆஸ்திரேலியாவை சந்திக்க முழுமையாக தயாராகி உள்ளதா என்பது சந்தேகமே.
ஆனாலும் கேப்டன் பாபர் ஆஸம், முகமது ரிஸ்வான், அப்துல்லா ஷபீக், இமாம் உல் ஹக் ஆகியோர் திறமையை வெளிப்படுத்தி ஆடினால், பந்துவீச்சில் ஷகீன் அப்ரிடி, ஷாதாப் கான், முகமது நவாஸ் சிறப்பாக செயல்பட்டால் பாகிஸ்தான் வெற்றிக்கு வழிவகுக்கலாம்.
ஐந்து முறை சாம்பியன் பட்டம் வென்ற ஆஸ்திரேலியா பாகிஸ்தானை எளிதில் வீழ்த்துமா அல்லது தங்களது திறமையான ஆட்டத்தால் ஆஸ்திரேலியாவை பாகிஸ்தான் வீழ்த்துமா என்பதை அறிய ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கின்றனர்.