தமிழகத்தில் பிரபல வணிக நிறுவனமான சூப்பர் சரவணா ஸ்டோர்ஸ் கடைகள் மற்றும் அலுவலகங்களில் இன்று வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
தமிழகம் முழுவதும் உள்ள சரவணா ஸ்டோர்ஸுக்கு சொந்தமான 15-க்கும் மேற்பட்ட இடங்களில் 100-க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். சென்னை தியாகராயநகர், புரசைவாக்கம், பாடி, சோழிங்கநல்லூர், குரோம்பேட்டை, போரூர் உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் சூப்பர் சரவணா ஸ்டோர்ஸ் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. மேலும் மதுரை, திருநெல்வேலி மற்றும் கோவையிலும் கிளைகள் கொண்டுள்ளது.
இந்நிலையில் சூப்பர் சரவணா ஸ்டோர்ஸ் நிறுவனத்தின்மீது வரி ஏய்ப்பு, கணக்கில் வராத முதலீடு உள்ளிட்ட புகார்களின் அடிப்படையில் இன்று காலை 8 மணி முதல் சூப்பர் சரவணா ஸ்டோர்ஸ், கிளை நிறுவனங்கள், மற்றும் குடோன்களில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. இதனால் கடை ஊழியர்கள், வாடிக்கையாளர்கள் என யாரும் கடைக்குள் செல்ல அனுமதிக்கப்பட வில்லை.