சஸ்பென்ஸ் திரில்லர் படங்களுக்கு பஞ்சம்!

சஸ்பென்ஸ் திரில்லர் படங்களுக்கு பஞ்சம்!
Published on

பேட்டி: ராகவ் குமார்.

புஷ்பா, ஸ்பைடர் மேன் என்று அதிரடி படங்களின் பரபரப்புகளுக்கு நடுவில், ''இறுதிப் பக்கம்'' என்ற புதிய சஸ்பென்ஸ் திரில்லர் படம் வெளியாகி, சத்தம் போடாமல் பாராட்டுகளை அள்ளி வருகிறது. இப்படத்தின் தயாரிப்பாளரும் இயக்குனருமான மனோ வெ. கண்ணதாசன் ஒரு என்ஜினீயரிங் பட்டதாரி. அவரிடம் கல்கி ஆன்லைனுக்காக பேசினோம்..

என்ஜினியரிங் படித்து விட்டு சினிமா மீது மோகம் ஏன்?

சினிமா மோகம் என்று சொல்ல முடியாது. தேடல் என்று சொல்ல லாம். பெரம்பலூர் மாவட்டத்தை சொந்த ஊராக கொண்ட நான் திருப்பூரில் அரசு கல்லூரியில் என்ஜினீயரிங் படித்தேன். காலேஜ் டைமில் நிறைய சினிமாக்கள் பார்த்தேன். தொடர்ந்து பல படங்கள் பார்க்க, பார்க்க அவற்றில் ஏதோ ஒரு விஷயம் சொல்லப்படாதது  போல தோன்றியது. அந்த விஷயம் ஒரு சஸ்பென்ஸ் திரில்லர் என்று உண்ர்ந்தேன். உடனே 'நாமே ஏன் ஒரு கதை அவ்வாறு எழுதக்கூடாது?' என்று தோன்றியது. அன்று எழுந்த உள்ளுணர்வுக்கு வடிவம் தந்து, திரைக்கதை அமைத்து உருவானதுதான் 'இறுதிபக்கம்'.

நீங்கள் யாரிடமும் உதவி இயக்குனரராகப் பணியாற்றாமலே இயக்குனரானது எப்படி?

பொதுவாக ஒரு பிரபல இயக்குனரிடம் அசிஸ்டன்டாக சேர்ந்து பிறகு வாய்ப்பு தேடி தயாரிப்பாளர் கிடைப்பதற்கு நீண்ட வருடங்கள் காத்திருக்க வேண்டும். மேலும் இப்போது பல இயக்குனர்கள் தங்களிடம் அசிஸ்டன்டாக சேர்வதற்கே குறும்படம் வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள் எனவே நாமே குறும்படம் எடுத்து முயற்சிதால் என்ன என்று யோசித்தேன். மேலும் என் வீட்டில் இரண்டு வருடங்கள் மட்டுமே டைரக்டர் ஆக டைம் கொடுத்திருந்தார்கள். அதனால் யாரிடமும் உதவி இயக்குனராக சேர நேரம் இல்லை .

.'இறுதிப் பக்கம்' படத்தை நீங்களே தயாரிக்க முன்வந்தது ஏன்?

தயாரிப்பாளர்கள் கிடைப்பதில் பிரச்சினை இருந்தது. புது பையன், யாரிடமும் உதவியாளராக இல்லை. எப்படி சினிமா எடுப்பான் என்ற தயக்கம் தயாரிப்பாளர்களிடம் இருந்தது. அதனால் என் நண்பர்கள் சிலரே இந்த படத்தை தயாரிக்க முன்வந்தார்கள். அவர்களுடன் நானும் இணைந்து தயாரித்தேன்.

இந்த படத்தின் கதைக்கு இன்ஸ்பிரேஷன் எது?

இன்ஸ்பிரேசன் என்று சொல்ல முடியாது.பாதிப்பு என்று சொல்லலாம். பிங்க் என்ற ஹிந்தி படம் பார்த்தேன். இதை போன்று ஒரு படம் எடுக்க வேண்டும் என்ற முயற்சியின் ஒரு விளைவு தான் இப்படம்

இந்த படத்தில், தற்சார்புள்ள, சுயமுடிவெடுக்கும் பெண் இறுதியில் தற்கொலை செய்துகொள்வது போல் காட்டுவது ஆணாதிக்க சிந்தனை இல்லையா?

தற்சார்புடன் சுய முடிவெடுக்கும் பெண்கூட அன்புக்கு ஏங்குகிறாள் என்பது போலத்தான் காட்டியுள்ளேன். ஆணாதிக்க மனோபாவத்தால் சரியாக புரிந்து கொள்ளபடாத ஆண்களால் எடுக்கம் முடிவைத்தான் காட்டியுள்ளேன்.

உங்களின் அடுத்தடுத்த படங்கள் எப்படி இருக்கும்?

தமிழில் சஸ்பென்ஸ் திரில்லர் படத்திற்கு ஒரு தேவை இருப்பது  போல உணர்கிறேன். என்னுடைய அடுத்தடுத்த படங்களும் சஸ்பென்ஸ் திரில்லர் படங்களாகத்தான் இருக்கும். அதற்காக

தேவைப்பட்டால், தமிழ் கிரைம் எழுத்தாளர்களின் கதைகளை நான் டைரக்ஷன் செய்வதில் எனக்கு தயக்கம் கிடையாது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com