இந்திய தொழிலதிபர் விஜய் மல்லையா சுவிஸ் வங்கியில் வாங்கிய கடனை திரும்ப செலுத்தாததால் லண்டனில் உள்ள அவரது பங்களா பறிமுதல் செய்யப்படும் நிலை உருவாகி உள்ளதாக தெரிவிக்கப் பட்டுள்ளது.
பெங்களூருவை சேர்ந்த தொழிலதிபர் விஜய் மல்லையா தன் ‘கிங்பிஷர் ஏர்லைன்ஸ்‘ நிறுவனத்துக்காக பல்வேறு வங்கிகளிலும் 9000 கோடி ரூபாய்க்கு மேல் கடன் பெற்று அதை திருப்பி செலுத்தாமல் வெளிநாடு தப்பி சென்றார். தற்போது லண்டனில் வசித்து வரும் விஜய் மல்லையாவை இந்தியாவுக்கு நாடு கடத்த அந்நாட்டு அரசு 2019-ல் உத்தரவு பிறப்பித்தது. இந்நிலையில் பிரிட்டன் அரசிடம் அரசியல் தஞ்சம் கோரி உள்ளார்.இதற்கிடையே மத்திய லண்டனில் உள்ள மேடம் டுஸாட் மெழுகு சிலை அருங்காட்சியகம் அருகே ‘கார்ன்வால் டெரஸ்‘ என்ற பெயரில் விஜய் மல்லையாவுக்கு சொந்தமான பங்களாவை சுவிஸ் வங்கியில் அடமானம் வைத்து மல்லையா கடன் பெற்று இருந்தார். அதில் 24 கோடி ரூபாய் கடன் தொகையை விஜய் மல்லையா திருப்பி செலுத்தவில்லை.
இதையடுத்து வங்கி தொடர்ந்த வழக்கில் சொத்தை பறிமுதல் செய்ய லண்டன் நீதிமன்றம் 2019-ல் உத்தரவிட்டது. பறிமுதல் செய்வதற்கான காலக் கெடுவும் விதிக்கப்பட்டது. இந்த நேரத்தில் கொரோனா தொற்று பரவல் உருவானதை அடுத்து சொத்தை பறிமுதல் செய்யும் நடவடிக்கை தடைபட்டது.தற்போது நீதிமன்றம் அளித்த காலக்கெடு முடிவடைந்த நிலையில் இந்த உத்தரவு மீது தடை கோரி மல்லையா தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவை விசாரித்த லண்டன் உயர்நீதிமன்றம் விஜய் மல்லையாவின் லண்டன் வீட்டை பறிமுதல் செய்ய சுவிஸ் வங்கிக்கு அனுமதி அளித்து உத்தரவிட்டது. இதையடுத்து அந்த பங்களா எந்த நேரத்திலும் பறிமுதல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
This content is restricted to site members. If you are an existing user, please log in. New users may register below.