தமிழ்நாட்டில் ஸ்பா, மசாஜ் மையங்களில் சிசிடிவி கேமராக்களைப் பொருத்த நடவடிக்கை எடுக்குமாறு தமிழக டிஜிபி சலேந்திர பாபுவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை: விழுப்புரம் மாவட்டம் ஆரோவில் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில் இயங்கிவரும் மருதசஞ்ஜீவினி என்ற ஆயுர்வேத சிகிச்சை மையத்தின் சட்டரீதியான செயல்பாடுகளில் காவல் துறை தலையிடக் கூடாது என உத்தரவிடக் கோரி அதன் நிர்வாகி சி.பி. கிரிஜா என்பவர் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார். தமது மையத்தில் சட்ட விதிகளுக்குள்பட்டு சிகிச்சை அளித்துவருவதாகவும், ஆனால் சோதனை என்ற பெயரில் காவல் துறை அடிக்கடி தலையிடுவதாக தன் மனுவில் குற்றஞ்சாட்டியிருந்தார்.
இந்த வழக்கில் விசாரணையின் முடிவில் நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்ததாவது:
காவல் துறையின் நடவடிக்கைகளைத் தடுக்கும்வகையில் உத்தரவு பிறப்பிப்பது அரசியலமைப்புச் சட்டத்திற்கு விரோதமானது. மேலும் குற்றங்கள் அதிகரிப்பதற்கும் அதுவே காரணமாகி விடும். ஆனால், சென்னை மாநகராட்சியில் உள்ளதுபோல தமிழ்நாடு முழுவதும் உள்ள ஸ்பாக்கள், மசாஜ் மையங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்த தமிழ்நாடு டிஜிபி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-இவ்வாறு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
மேலும் தமிழக ஸ்பா மற்றும் மசாஜ் மையங்களில் சட்டவிரோத செயல்பாடுகள் நடைபெறாமல், வெளிப்படைத்தன்மையுடன் நடைபெறுவதை உறுதிசெய்யும் வகையில் தகுந்த அறிவுறுத்தல்களை வழங்கவும் தமிழ்நாடு டிஜிபிக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
இதையடுத்து உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவைக் கடைப்பிடிக்கக் கோரி தமிழக டிஜிபி சைலேந்திரபாபு, அனைத்து காவல் துறை உயரலுவலர்கள், காவல் ஆணையர்கள், கண்காணிப்பாளர்களுக்குச் சுற்றறிக்கை அனுப்பியுள்ளதாக தெரிவிக்கப் பட்டுள்ளது..