தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்தில் தென்மேற்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக் கூடும் என்றும் அதனால் கனமழை பெய்யும் என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து இந்திய வானிலை ஆய்வுமையம் தெரிவித்ததாவது:
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்ததன் காரணமாக கடந்த 10 நாட்களாக பெய்த கனமழையால் மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. இந்நிலையில் அடுத்த மூன்று நாட்களுக்கு தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. தென்மேற்கு வங்கக்கடலில் அடுத்த 48 மணிநேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு உருவாக வாய்ப்பு உள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் இலங்கை மற்றும் தென் தமிழகத்தை நோக்கி நகரக்கூடும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. அதனால் வருகிற வியாழன் மற்றும் வெள்ளிகிழமை (நவம்பர் 25 மற்றும் 26) தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் அதி கனமழை பெய்யும்.
–இவ்வாறு இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.