தமிழகத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் பார்களையும் 6 மாதத்துக்குள் மூடும்படி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
தமிழக டாஸ்மாக் கடைகளில் பார் உரிமம் பெற்ற சிலர் தங்களுடைய உரிமத்தை நீட்டிக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். அந்த மனுவில், 'கொரோனா ஊரடங்கு காரணமாக பல நாட்கள் டாஸ்மாக் கடைகள் செயல்படாமல் இருந்தன. இதனால் உரிய வருமானம் கிடைக்கவில்லை. எனவே எங்களுடைய உரிமம் காலத்தை நீட்டிக்க வேண்டும்' எனக் கூறியிருந்தனர்.
இந்த வழக்கின் இன்றைய விசாரணையின் போது, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து டாஸ்மாக் பார்களையும் மூட சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி சி சரவணன் உத்தரவிட்டார். இதுகுறித்து அவர் தெரிவித்ததாவது;
டாஸ்மாக் கடைகளில் மதுபானங்களை விற்க மட்டுமே அனுமதி உண்டு. பார்களை இணைத்து நடத்த சட்டத்தில் இடமில்லை. எனவே தமிழ்நாட்டில் உள்ள டாஸ்மாக் கடைகளில் உள்ள பார்களை 6 மாதத்திற்குள் மூட வேண்டும்.
-இவ்வாறு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி சி.சரவணன் உத்தரவிட்டார்.
மேலும் பார்களுக்கு உரிமம் வழங்கும் அதிகாரம் கலால் வரித்துறை ஆணையருக்கு மட்டுமே உள்ளது என்றும் அதற்கான அனுமதியை டாஸ்மாக் நிர்வாகம் வழங்க முடியாது என்றும் கூறி இந்த வழக்கை நீதிபதி தள்ளுபடி செய்தார் என்பது குறிப்பிடத் தக்கது.