டாடாவின் வசம் சென்ற ஏர் இந்தியா! யாருக்கு லாபம் ?

டாடாவின் வசம் சென்ற ஏர் இந்தியா! யாருக்கு லாபம் ?

ராஜ்மோகன் சுப்ரமண்யன்.

"மகன்தந்தைக்கு ஆற்றும் உதவி இவன்தந்தை
என்நோற்றான்கொல்எனும்சொல் –

திருவள்ளுவரின் இந்த திருக்குறளை சமீபத்தில் நிரூபித்திருக்கிறார் ரத்தன் டாடா. அவரது தந்தை ஜே.ஆர்.டி.டாடாவால் துவங்கப்பட்டு, சுமார் 60 ஆண்டுகளுக்கு முன்பு  அரசால் கையகப்படுத்தப்பட்டது ஏர் இந்தியா விமான சேவை. இப்போது ஏர் இந்தியா நிறுவனத்தை மீண்டும் அரசிடம் இருந்து வென்று டாடா எனும் குழுமத்தின் பெயரை மட்டுமல்ல தமது தந்தையான ஜே.ஆர்.டி.டாடாவுக்கும் பெருமிதம் சேர்த்துள்ளார் ரத்தன் டாட்டா.

இதன் மூலம் டாடா நிறுவனத்திற்கான செல்வாக்கு கூடி வருகிறது. அதே  நேரம் உலகின் மிகப்பெரிய வல்லரசாகவும் ராணுவ வலிமையில் உலகின் ஐந்தாவது பெரிய நாடாகவும் கருதப்படும் இந்தியா அரசு, தனக்கென்று   சொந்தமாக ஒரு சர்வதேச ஏர்லைன்ஸ் இல்லாத நாடாக விமர்சனத்திற்குள்ளாகியுள்ளது.

அரசின் தனியார்மயகொள்கையின் மூலம் ஏர் இந்தியா டாடாவின் வசம் சென்றதன் மூலம் யாருக்கு லாபம் ?

தினந்தோறும் 20 கோடி ரூபாய் நஷ்டத்தில் இயங்கிய ஒரு நிறுவனத்தினை விற்றதின் மூலம் இந்திய அரசு தப்பித்துகொண்டதா? இத்தனை நஷ்டத்தில் இயங்கும் ஒரு நிறுவனத்தை வாங்குவதின் மூலம் டாடாவுக்கு என்ன லாபம்?. இது குறித்து பார்க்கும் முன்பு கொஞ்சம் வரலாற்றை திரும்பி  பார்ப்போம்.

பிரிட்டிஷ் இந்தியாவில் 1932 ஆம் ஆண்டு முதன் முதலில் தொடங்கப்பட்ட விமான சேவை டாடா ஏர்லைன்ஸ். 1953 ல் பண்டிதர் ஜவஹர்லால் நேருவின் ஆட்சிகாலத்தில்  விமானசேவைகள் தேசியமயமாக்கப்பட்டபோது  டாடாவின் ஏர்லைன்ஸும் இந்திய அரசுவசமானது. இதற்காக இந்திய அரசு அன்றைய மதிப்பில் ரூ.2.8 கோடி ரூபாயை டாட்டாவுக்கு கொடுத்தது. என்னதான் நல்ல விலையை அரசு கொடுத்தாலும் ஏர்லைன்ஸ் நடத்துவது பெருமிதமிகு தொழில்களில் ஒன்றாக கருதப்பட்டதால் ஜே.ஆர்.டி டாடா இதற்கு மிகுந்த வருத்தமுடனும் அரை மனதுடனே அரசிடம் ஒப்படைத்தார்.  எனினும் தன்னால் நிறுவப்பட்ட ஒரு நிறுவனம் அரசின்கீழ் செல்வதில்  மகிழ்ச்சி அடைவதாகவும் ,இது ஒரு வரலாற்று சிறப்புமிக்க தருணம் என்றும்  குறிப்பிட்டார்.   அந்த வரலாறு மீண்டும் திருப்பி எழுதப்படுகிறது.

தற்போது மத்தியில் ஆளும் பாஜக  அரசு பொதுத்துறை நிறுவனங்களை தனியார்  மயமாக்குவதில் முனைப்புடன் செயல்பட்டு வருகிறது.  இதன் ஒரு அங்கமாக ஏர் இந்தியா நிறுவனத்தையும் தனியார்மயமாக்குவது என்று முடிவு செய்தது. ஏற்கனவே சுமார் 65 ஆயிரம் கோடி நஷ்டத்தில் இருப்பதாக கூறுப்படும் நிலையில் இதனை தனியார் மயமாக்குவதின் மூலம் நஷ்டத்தில் இருந்து அரசு காப்பாற்றப்படும் என்று சொல்லி இது விற்கப்பட்டது.

ஏர் இந்தியா நஷ்டத்தில் இயங்கியதின் காரணம் அரசின் நிர்வாக திறமையின்மைதான். அரசின் எந்தவித தலையிடும் இல்லாமல் இதனை நடத்தியிருந்தால் இந்த நேரம்   இது ஒரு லாபகரமான நிறுவனமாகதான் இயங்கியிருக்கும் என்கின்றனர். இதன் ஊழியர்கள். கடந்த சில வருடங்களாகவே ஊதிய உயர்வு பிரச்சனை நடந்தபோது பேச்சுவார்த்தையின் போது 'அரசால் நடத்த முடியவில்லை எனில் நாங்களே நடத்திகொள்கிறோம்'' என்ற திட்டத்தை முன்வைத்தனர் ஏர் இந்தியா ஊழியர்கள் . ஆனால் இதனை அரசு ஏற்கவில்லை. இதனை விற்பதிலேயே  முனைப்பு காட்டியது அரசு.

டாடா இந்த நிறுவனத்தை வாங்கிய பின்னர் கடுமையான பாதிப்புக்கு உள்ளானவர்கள் ஊழியர்கள்தான். அரசு நிறுவனமாக இருந்தபோதே ஊதிய உயர்வு பணி பாதுகாப்பு உட்பட பல்வேறு பிரச்சனைகள். ஒருபுறம்  நிறுவனம் இயங்கிகொண்டிருந்தாலும் இன்னொருபுறம் போராட்டம், வேலைநிறுத்தம் என்ற கடந்த பல ஆண்டுகளாக வாழ்க்கை தொடர்ந்தது. இந்த நிலையில் தனியார்மயமாக்கியதன் மூலம் அவர்களின் பணிகுறித்த பெரிய கேள்விக்குறியை எழுப்பியுள்ளது. எனினும் , அரசும் டாடா நிறுவனமும் செய்த ஒப்பந்தப்படி, "ஊழியர்கள் யாரையும் ஒரு வருடத்திற்கு வேலை நீக்கம் செய்ய மாட்டோம்" என்று உறுதி கூறுகிறது டாடா நிறுவனம். அதே நேரம் ஒரு வருடத்திற்கு பிறகு இவர்கள் விருப்ப ஓய்வு அறிவித்து வெளியேற்றப்படுவார்கள் என்று கூறியுள்ளது டாடா நிறுவனம். இது ஒருபுறம்  இருக்க தற்போது ஊழியர்கள் குடியிருக்கும் குடியிருப்புகளை காலி செய்ய நோட்டீஸ் அனுப்பியுள்ளது அரசு.

ஏர் இந்தியாவின் மொத்த கடன் சுமார் 65 ஆயிரம் கோடி . இப்பொழுது வெறும் 18 ஆயிரம் கோடி கொடுத்து இதனை வாங்குவதின் மூலம் மீதமுள்ள சுமார் 47000 கோடியை அரசு தான் ஏற்றுகொள்ளவேண்டும். இதனால் அரசுக்கு எந்த பயனும் இல்லை என்று கம்யூனிஸ்ட் இப்பொழுதே கம்பு சுற்றதொடங்கிவிட்டது.

இப்படி பல்வேறு விமர்சனங்கள்  பல முனைகளில் எழுந்தாலும் பொதுப்படையாக பார்த்தால் நஷ்டத்தில் இயங்கும் நிறுவனத்தை எடுத்து டாடா  காப்பாற்றியிருக்கிறது என்ற பாசிடிவ் அலை பொதுவெளியில் உருவாகியுள்ளது. இது தவிர டாடா குழுமம் தேசபக்திக்கும் மக்கள் மீதான பாசத்திற்கும் பெயர் பெற்ற நிறுவனம் என்பதால் மக்கள் மத்தியில் இது வரவேற்பு பெற்ற நிகழ்வாகவே இருக்கிறது.

சொந்த விமானமே இல்லாத ஒரு நாட்டில் எதற்கு விமானப்போக்குவரத்திற்கு என்று ஒரு அமைச்சகம் என்று எதிர்கட்சிகள் நக்கல் அடிக்க தொடங்கியிருக்கிறார்கள்.  அரசு ஏர் இந்தியாவை மட்டும் தான் விற்றிருக்கிறதே தவிர அதன் ஏடிஆர் வகை விமானங்கள் அரசின் கட்டுப்பாட்டிலேயே இயங்கும். இதனை நல்ல முறையில் நடத்த அரசு நடவடிக்கை எடுக்கும்  என்கிறது அரசு தரப்பு.

லாபத்தில் இயங்கிகொண்டிருந்த ஒரு நிறுவனத்தை நஷ்டம் என காரணம் காட்டி விற்பது அரசுக்கு ஒரு  சரிவுதான். எனினும் டாடா போன்ற பன்பட்ட குழுமத்தின் கீழ் இவை செல்வது  விமான சேவையை ஒரு தரமான சேவையாக மாற்ற உதவும். இதன் மூலம் பயணிகள் நிச்சயம் பயன் அடைவார்கள் என்பது மக்களின் பொதுவான கருத்தாக இருக்கிறது.

வன்பொருள், மென்பொருள். வாகன உற்பத்தி, ஆயுத தளவாட உற்பத்தி என டாடா நிறுவனக் குழுமம் கால்பதிக்காத தொழிலே இல்லை என்ற  நிலையில், தற்போது ஏர் ஏஷ்யா மற்றும் விஸ்தாரா ஆகிய விமான நிறுவனங்களிலும் முக்கிய பங்குகள் வைத்துள்ளது. இப்பொழுது ஏர்  இந்தியாவை வாங்கியிருப்பதின் மூலம்  இழந்த பாரம்ப்ரியத்தை  மீட்டதுடன்  முழுமையான ஏர்லைன்ஸ் நிறுவனம்  ஒன்றையும் மீண்டும் கட்டி எழுப்பியுள்ளது. ஏற்கனவே ஏர் ஏஷியா மற்றும் விஸ்தாரா லாபகரமாக இயங்கிகொண்டிருக்கும் நிலையில் இந்த புதிய அங்கம் டாடாவுக்கு மேலும் வலுசேர்க்கும். ஆனால் அரசுக்கு? பொறுத்திருந்து பார்ப்போம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com