அந்தமான் அருகே வங்கக் கடலில் நாளை மறுநாள் (டிசம்பர் -1) மீண்டும் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகவிருப்பதால், தமிழகத்துக்கு கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்ததாவது:
தமிழகத்தில் குமரிக் கடல் மற்றும் அதை ஒட்டிய இலங்கை கடற் பகுதியில் நிலவும் வளி மண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கன்னியாகுமரி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் இன்று ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும். தூத்துக்குடி, ராமநாதபுரம், மாவட்டங்களிலும், பிற கடலோர மாவட்டங்களான புதுச்சேரி, காரைக்கால், பகுதிகளிலும் பெரும்பாலான இடங்களில் மிதமான மழை பெய்யும். உள் மாவட்டங்களிலும் பெரும்பாலான இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யும்.
மேலும், தெற்கு அந்தமான் பகுதியில் டிசம்பர் 1-ம் தேதி ஒரு காற்றழுத்தம் உருவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அது வலுப்பெற்று வட மேற்கு திசையில் நகர்ந்து தமிழக கடலோரப் பகுதியை நெருங்கும்போது மீண்டும் தமிழகத்தில் கனமழை பெய்யும்.
–இவ்வாறு சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.