சபாஷ் ​மித்து: ‘லேடி சச்சின்’ மித்தாலி ராஜ் அபார சாதனை!

சபாஷ் ​மித்து: ‘லேடி சச்சின்’ மித்தாலி ராஜ் அபார சாதனை!

-ஜி.எஸ்.எஸ்.

இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டன் மிதாலி ராஜ் இப்போது நியூசிலாந்தில்நடைபெறும் கிரிக்கெட் உலகப்போட்டியில் பங்கெடுத்துக் கொண்டு ஒருபெரும் சாதனையைச் செய்திருக்கிறார். ஆறுஉலக கோப்பை போட்டிகளில் பங்கு பெற்ற ஒரே பெண்மணி இவர்தான்!  39 வயதிலும் தன் விளையாட்டுத் திறமையை வெளிப்படுத்தி கொடிகட்டிப் பறக்கிறார்.

சாதனை செய்வது அவருக்குப் புதிதல்ல.  சில மாதங்களுக்கு முன் சர்வதேச அரங்கில் 10,377 ரன்களைக் குவித்து உலகின் மிக அதிக ரன்கள் எடுத்த வீராங்கனை பட்டியலில் முதலிடத்தைப் பிடித்தார்.

2004-லிலிருந்து இந்திய மகளிர் கிரிக்கெட் குழுவின் கேப்டனாக பணிபுரிந்து வருகிறார்.  இவ்வளவு நீண்ட காலம் உலகின் எந்த மகளிர் கிரிக்கெட் அணியிலும் ஒருவர் கேப்டனாக இருந்ததில்லை.  21 வயதிலேயே கேப்டன் ஆனவர் மிதாலி.

ஒருநாள் கிரிக்கெட் பந்தயங்களில் ஐயாயிரம் ரன்களைத் தாண்டியபோது மிதாலி 'பொம்பள சச்சின்' என்று அழைக்கப்பட்டார்.  இவர்1999ல் முதன்முதலாக கலந்துகொண்ட அயர்லாந்து மகளிர் கிரிக்கெட் அணிக்கு எதிரான  போட்டியில் 114 ரன்கள் எடுத்து பலரையும் திரும்பிப்பார்க்க வைத்தார்.   அப்போது அவருக்கு வயது வெறும் ஸ்வீட் சிக்ஸ்டீன்தான்.  ஒருநாள் போட்டிகளில் முதல் போட்டியிலேயே 100 ரன்களைத் தாண்டிய மிக  இளம்பெண்.

மிதாலியின் இளமைக் கனவு பரதநாட்டியக் கலையில் சிறப்பு பெறுவதுதான்.  இதற்கு வேறொரு பின்னணியும் உண்டு.  விமானப்படையில் பணியாற்றிய துரைராஜ், மற்றும் லீலா ஆகியோருக்கு மகளாக ஜோத்பூரில் பிறந்தார் மிதாலி. வளர்ந்தது ஹைதராபாதில் உள்ள கூட்டுக் குடும்பத்தில். கட்டுப்பாடுகள் நிறைந்த தமிழ்க் குடும்பம் அது.   பெண் குழந்தை என்றால் பாட்டோ நடனமோ கற்றுக் கொடுக்க வேண்டும் என்ற சம்பிரதாயப்படி பரதநாட்டிய வகுப்பில் அவர் சேர்க்கப்பட்டார். காலை வேளைகளில் சுலபத்தில் எழுந்திருக்க மாட்டாராம் மிதாலி. ஆனால்அவர்தந்தைக்குதன் மகள் தன்னைப்போலவே கட்டுப்பாடுடனும் மிகவும் சுறுசுறுப்பாகவும் இருக்க வேண்டும் என்று நினைத்தார் அப்பா.

எனவே மிதாலியின் அண்ணன் மிதுன் சென்று கொண்டிருந்த கிரிக்கெட் பயிற்சி வகுப்புக்கு தினமும் விடியற்காலையில் தன் மோட்டார் சைக்கிளில் மகளை அழைத்துச் செல்லத் தொடங்கினார் அப்பா.   அண்ணனின் பயிற்சியாளர் 'உங்கள் மகள் தினமும் இங்கே சும்மா வந்து போவதற்கு பதிலாக அவளும் அந்த நேரத்தில் கிரிக்கெட் கற்றுக் கொள்ளலாமே' என்று கூற அப்பா சம்மதித்திருக்கிறார்.

ஆக ஒன்பதாவது வயதில் கிரிக்கெட் பேட்டைக் கையில் பிடித்தார் மிதாலி ராஜ். மூன்று மாதப் பயிற்சியிலேயே மிதாலியின் விளையாட்டுத்  திறமையை உணர்ந்து கொண்டார் பயிற்சியாளர். 'பதினான்கு  வயதாகும் போது உங்கள் மகள் தேசிய கிரிக்கெட் அணியில் இடம் பெறுவார்' என்று அவர் கணிக்க அவர் ஜோக் அடிப்பதாக நினைத்தார்கள் பெற்றோர்கள்.

காலை ஆறிலிருந்து எட்டு மணி வரை தீவிர கிரிக்கெட் பயிற்சி.  எட்டரையிலிருந்து பள்ளி வகுப்புகள்.   பள்ளி முடிந்தவுடன் மீண்டும் மாலையில் நெட் ப்ராக்டீஸ். அது ஏழு மணி வரை இருக்கும்.

தன் பெற்றோரை மகிழ்ச்சிப்படுத்த மட்டுமே அவர் கிரிக்கெட் விளையாடத் தொடங்கினார் மிதாலி. ஆனால் இன்று அந்த விளையாட்டில் பெரும் சாதனை படைத்து அர்ஜுனாவிருது, கேல் ரத்னா விருது, பத்மஸ்ரீ என்று பல விருதுகளைப் பெற்று இந்தியாவுக்குப் பெருமை சேர்த்துக் கொண்டிருக்கிறார்.

சபாஷ் மித்து என்ற பெயரில் மிதாலி ராஜின் வாழ்க்கை இந்தியில் திரைப்படம் ஆக உள்ளது.  மிதாலியாக நடிப்பவர் நம் ஆடுகளம் புகழ் தாப்ஸிதான்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com