தமிழில் அனிமல் த்ரில்லர்: ‘கெஸ்ட் – சாப்டர் 2’

தமிழில் அனிமல் த்ரில்லர்: ‘கெஸ்ட் – சாப்டர் 2’

-லதானந்த்

குட் ஹோப் பிக்சர்ஸ் சார்பில் D.கோகுலகிருஷ்ணன் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் 'கெஸ்ட் – சாப்டர் 2'.

ரங்கா புவனேஷ்வர் படத்தை இயக்கியிருக்கிறார். இவர் கடந்த சில வருடங்களுக்கு முன்பு வெளியான  'ஆறாவது வனம்' என்கிற படத்தை இயக்கியவர். அதன் பிறகு மலையாளத் திரையுலகம் சென்றவர், அங்கே இரண்டு படங்களை இயக்கினார். அதன் பின்னர் தமிழ், தெலுங்கு என இருமொழிப் படம் ஒன்றையும் இயக்கி உள்ளார். விரைவில் அந்த படம் ரிலீசாக இருக்கிறது.

இந்தப் படத்தில் பாலிவுட் நடிகர் ரன்வீர் குமார், விது பாலாஜி ஆகியோர் நடித்திருக்கிறார்கள். கதாநாயகியாக சாக்ஷிஅகர்வாலும், முக்கிய வேடத்தில் ஜாங்கிரி மதுமிதாவும் நடித்துள்ளனர்.

க்ரைம் த்ரில்லர் சைக்கோ த்ரில்லர் என வழக்கமாக வெளிவரும் திரைப்படங்களில் இருந்து சற்றே மாறுபட்டு அனிமல் திரில்லர் என்கிற ஜானரில் இந்தப் படம் உருவாகியுள்ளது. இந்தப் படத்தில் ஹாங்காங் விஃஎப்எக்ஸ் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. 

நடிகை சினேகா மற்றும் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி இணைந்து படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டிருக்கிறார்கள். 

ஓநாய் மனிதன் ஒருவனிடம் கதாநாயகி சாக்ஷி அகர்வால் சிக்கிக்கொள்ளும் காட்சிகள் ஜில்லிட வைக்கும் என்கிறார்கள்.

இந்தப் படத்திற்கு ரமேஷ் ஜி ஒளிப்பதிவு செய்ய, அன்வர் கான் தாரிக் இசையமைக்கிறார். படத்தொகுப்பை சியான் மேற்கொண்டிருக்கிறார்.

இந்தப் படம் பற்றி இயக்குநர் ரங்கா புவனேஷ்வர் கூறும்போது, "இன்றைக்கு இதுபோன்ற வித்தியாசமான திரில்லர் படங்களுக்கு ரசிகர்களிடம் அதிக வரவேற்பு இருக்கிறது. 

நல்ல வியாபாரத்திற்கான அம்சங்களும் படத்தில் இருக்கின்றன. அதுமட்டுமல்ல… இந்த ஓநாய் மனிதன் என்கிற கதைக் களம் இந்திய சினிமாவிலேயே முதல் முறையாக இப்போதுதான் முழுமையாகக் கையாளப்படுகிறது. இதற்கு முன்னதாக இந்தியில், எழுபதுகளின் காலகட்டத்தில், ஒன்றிரண்டு படங்கள் வந்திருந்தாலும் அவற்றில் ஓநாய் மனிதன் என்கிற உருவத்தை அந்தக் காலகட்டத்துக்கு ஏற்ப சாதாரணமாகவே கையாண்டு இருந்தார்கள்.

ஆனால் இந்தப் படத்தில் ஓநாய் மனிதன் உருவாக்கத்தில் விஎஃப்எஸ் தொழில்நுட்பம் மிகப்பெரிய பங்கு வகித்துள்ளது. 

இந்தியாவில் இந்த ஓநாய் மனிதன் சம்பந்தப்பட்ட காட்சிகளுக்கு விஃஎப்எக்ஸ் தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் வசதியில்லை என்பதால் ஹாங்காங்கில் இந்தப் படத்தின் விஃஎப்எக்ஸ் காட்சிகளை வடிவமைத்துள்ளோம். கொடைக்கானல் மற்றும் திருவனந்தபுரம் பகுதியில் உள்ள அடர்ந்த காட்டுப் பகுதிகளில் கிட்டத்தட்ட 45 நாட்கள் படப்பிடிப்பை நடத்தியுள்ளோம். 

இப்படத்தின் கதாநாயகி சாக்ஷி அகர்வால் அத்தனை நாட்களும் அந்தக் காட்டுப் பகுதியில் தங்கியிருந்து, படப்பிடிப்பில் அர்ப்பணிப்பு உணர்வுடன் கலந்துகொண்டு நடித்தது பாராட்டுக்குரியது. அதுமட்டுமல்ல… இதுவரை நகைச்சுவை நடிகையாக நாம் பார்த்த மதுமிதா, இந்த படத்தில் தனது வேறொரு நடிப்பு முகத்தைக் காட்டியுள்ளார்.  படத்தின் இரண்டு நாயகர்களும் மிகச் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர். அதிலும் ரன்வீர் குமார் மும்பையை சேர்ந்த தியேட்டர் ஆர்ட்டிஸ்ட் என்பதால் எங்களுக்கு இன்னும் வசதியாக இருந்தது.

படத்தின் கதையே இந்த நால்வரைச் சுற்றித்தான் பின்னப்பட்டுள்ளது. 

இந்த நான்கு பேரில் ஒருவர்தான் ஓநாய் மனிதராக மாறுகிறார். அது யார் ? எதற்காக ஓநாய் மனிதராக மாறுகிறார் என்பதுதான் இந்தப் படத்தின் கதை 

மிகப் பிரம்மாண்ட பொருட் செலவில் குட்ஹோப் பிக்சர்ஸ் சார்பாக D.கோகுல கிருஷ்ணன் தயாரித்திருக்கிறார். படத்திற்கான எல்லாத் தேவைகளையும் தயாரிப்பாளர் வசதியாக செய்துகொடுத்தது படம் மிகச் சிறப்பாக வர உதவியது.  

வனப் பகுதிகளில் படப்பிடிப்பு நடக்கும்போது ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான திகில் அனுபவம் கிடைத்தது. திருவனந்தபுரம் காட்டுப் பகுதிகளில் எப்போதுமே காலை பத்து மணிக்குத்தான் வெயில் வரும். அது வரை காட்டெருமைகள் அங்கே சுற்றிக்கொண்டே இருக்கும். அவை அங்கிருந்து சென்ற பின்னரே எங்களால் படப்பிடிப்பை நடத்த முடிந்தது. 

இந்தப் படத்தின் படப்பிடிப்பிற்காக டம்மியாக ஓநாய் உருவத்தில் பொம்மைகள் செய்து வைத்திருந்தோம். அப்படி ஒரு பொம்மையை வைத்து விட்டு மறைவாக நின்று படமாக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்தபோது எங்கிருந்தோ திடீரென நூற்றுக்கும் மேற்பட்ட குரங்குகள் அங்கே படையெடுத்து வந்து, அந்த ஓநாய் பொம்மையை இழுத்துச்சென்று கடித்துக் குதறிச் சின்னாபின்னப் படுத்தி விட்டன.

அதற்கு முன்னதாக அவைகள் ஓநாய் என்கிற மிருகத்தை அந்தக் காட்டில் பார்த்ததே இல்லை என்பதுதான் இதற்குக் காரணம். அதனால் அடுத்த நாளிலிருந்து விகாரமாக, பயமுறுத்தும் தோற்றம் கொண்ட சோளக்கொல்லை பொம்மை ஒன்றை மரத்தில் கட்டி வைத்துவிட்டு, அதன்பின் ஓநாய் பொம்மையை வைத்துப் படப்பிடிப்பு நடத்தியபோது குரங்குகளின் தொல்லை ஏற்படவில்லை. எங்களது இந்த டெக்னிக்கைப் பார்த்து வன அதிகாரிகளே வியந்துபோய்ப் பாராட்டினார்கள்" என்றார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com