நடிகர் அருள்நிதி குறிப்பிட்ட இடைவெளியில் படங்கள் தந்தாலும் சிறந்த படங்களை தருவார் என்ற நம்பிக்கையை மீண்டும் நிரூபித்து இருக்கிறார்.
ஒரு விஷயம் நடக்கும்போது அது முன்பே நமக்கு நடந்தது போன்ற உள்ளுணர்வு ஏற்படும். இதை பிரெஞ்சு மொழியில் தேஜா வு என்பார்கள். இந்த பெயரை தன் படத்தின் தலைப்புக்கு வைத்து ஒரு அழகான சஸ்பென்ஸ் திரில்லர் படத்தை தந்துள்ளார் அறிமுக இயக்குனர் அர்விந்த் ஸ்ரீனிவாசன்.
ஒரு கிரைம் எழுத்தாளர் தனது கதையில் வரும் சம்பவங்களை போலவே நிஜ உலகிலும் நடக்கிறது. பூஜா என்ற பெண் கடத்தபடுவது போன்று நாவலில் எழுதப் போக, பூஜா நிஜமாகவே கடத்தப்பட்டு விடுகிறார். காவல் துறையின் உயர் அதிகாரியாக இருக்கும் மதுவின் மகளான பூஜா கடத்தபட்டதிற்கும், இந்த எழுத்தாளருக்கும் தொடர்பு இருக்கும் என்ற கோணத்தில் போலீஸ் விசாரணை செய்கிறது.
எந்த ஒரு துப்பும் கிடைக்காமல் போகவே, புலனாய்வு அதிகாரி விக்ரம் குமாரிடம் இந்த வழக்கை ஒப்படைக்கிறது. ஒரு கட்டத்தில் அதிகாரி மது செய்த என்கவுன்டருக்கும் இந்த கடத்தலுக்கும் தொடர்பு இருப்பது தெரிய வருகிறது. பின்பு நடக்கும் விஷயங்களை ஒரு நேர்த்தியான திரில்லராக சொல்லி இருக்கிறார் டைரக்டர்.
எங்கேயும் தேவையற்ற ஒரு காட்சியோ, வசனமோ இல்லை திரையில் வைக்கும் கண்ணை முடியும் வரை எடுக்க மனமில்லை. அடுத்து என்ன நடக்கும் என்ற பரபரப்பு நம்மை தொற்றி கொள்கிறது.
ஜிப்ரானின் இசை, முத்தையாவின் ஒளிப்பதிவு, சித்தார்த்தின் எடிட்டிங் இந்த மூன்றும் ஒரு புள்ளியில் இணைந்து பயணிக்கிறது.
அருள்நிதியின் நடிப்பு ஸ்டைல் அண்ட் கேஷூவல். நீண்ட நாளுக்கு பின் மாதுபாலா. அதிகாரியாக கம்பீரமும்,அம்மாவாக பரிதவிப்பையும் காட்டுகிறார்.அச்சுத்குமார் குடிகார எழுத்தாளரை கண் முன் காட்டுகிறார்.
கிரைம் எழுத்தின் நோக்கமே இறுதியில் தவறு செய்தவர்கள் தண்டிக்க படுவார்கள் என்பது தான்.தேஜா வு படதிலும் தவறு செய்தவர்கள் தண்டிக்க படுகிறார்கள். தேஜா வு –சஸ்பென்ஸ்..பரபரப்பு.. நீதி.