உக்ரைனில் போர் பதற்றம் தீவிரமடைந்துள்ளதால், அங்குள்ள இந்தியர்களை உடனடியாக வெளியேறும்படி இந்திய தூதரகம் அறிவுறுத்தி உள்ளது.
உக்ரைனைக் கைப்பற்ர ரஷ்யா அந்நாட்டு எல்லையில் தன் போர்ப் படைகளை குவித்து வருகிறது. இதையடுத்து ரஷ்யாவுக்கு எதிராக அமெரிக்காவும் ஐரோப்பிய நேட்டோ நாடுகளும் தம் படைகளை குவித்துள்ளன. இதனைத் தொடர்ந்து உக்ரைன் எல்லையையொட்டிய தனது எல்லைப் பகுதியான பெலாரஸ் உள்ளிட்ட பகுதிகளில் லட்சம் துருப்புகளை குவித்த ரஷியா, போர் பயிற்சியில் இறங்கி இருப்பதால் அங்கு பதற்றம் நிலவுகிறது.
இந்த நிலையில், ரஷ்யா தங்கள் நாட்டின் மீது நாளை தாக்குதல் நடத்தக்கூடும் என உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார். இதையடுத்து ஆஸ்திரேலியா, இத்தாலி, இஸ்ரேல், நெதர்லாந்து, ஜப்பான் உள்ளிட்ட 10 நாடுகள் தங்கள் மக்களை உக்ரைனில் இருந்து வெளியேற்ற துவங்கி உள்ளனர்.அந்த வரிசையில், உக்ரைனில் இருந்து இந்தியர்கலும் வெளியேறும்படி இந்திய அரசு அறிவித்துள்ளது.
மேலும் உக்ரைனில் உள்ள இந்தியர்கள் தங்கள் இருப்பிடம் பற்றியும் நிலை குறித்தும் இந்திய தூதரகத்திற்கு தகவல் அளிக்க வேண்டும் என்றும் அறிவுரை வழங்கி உள்ளது. மேலும் உக்ரைனில் உள்ள இந்திய குடிமக்களுக்கு அனைத்து சேவைகளையும் வழங்க தூதரகம் தொடர்ந்து செயல்படுகிறது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. உக்ரைனில் இந்திய மாணவர்கள் 20 ஆயிரத்திற்கும் அதிகமானோர் படித்து வருவது குறிப்பிடத்தக்கது.