
தமிழகத்தின் தென்மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழை இன்று தொடங்கியது. அதன் காரணமாக இன்று திருநெல்வேலி ,தூத்துக்குடி ,ராமநாதபுரம், விருதுநகர், புதுக்கோட்டை, திருப்பூர், கரூர் மாவட்டங்களில் சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வுமையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்ததாவது:
தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை தொடங்கியதையடுத்து நாளை திருநெல்வேலி ,தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும். தெற்கு வங்க கடலின் மத்தியப் பகுதியில் வரும் 26-ம் தேதி வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உருவாகக்கூடும். இது மேற்கு நோக்கி நகர்ந்து அதனை அடுத்த 48 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெறும். இதன்காரணமாக வருகின்ற 27-ம் தேதி திருநெல்வேலி, தூத்துக்குடி ,ராமநாதபுரம் ,விருதுநகர், மதுரை ,தென்காசி ,கன்னியாகுமரி மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழையும், 28 மற்றும் 29-ம் தேதிகளில் டெல்டா மாவட்டங்கள், மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் கனமழை பெய்யக்கூடும்.
சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 27 மற்றும் 28ம் தேதிகளில் மேற்கு வங்க கடலின் மத்திய பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் , இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். இதனால் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.
-இவ்வாறு சென்னை வானிலை ஆய்வுமையம் அறிக்கை வெளியிட்டுள்ளது.