– பா.கண்ணன், புதுதில்லி.மகாபாரதம் ஆதிபர்வத்தில் மக்களுக்குப் படிப்பினையை போதிக்கும் விதமாக, ரிஷிகள் தங்கள் சீடர்களுக்கு பற்பலக் கதைகளைச் சொல்லியுள்ளனர். அதில் ஒன்றை இப்போது பார்க்கலாம்..ஒரு தாய் தனது இளம் மகனுடன் விறகு, சுள்ளிகள் திரட்டவும், சாப்பிடுவதற்குக் காய், கனிகளைப் பறிக்கவும் அருகிலுள்ள காட்டுக்குச் சென்றாள். அங்கே அந்த பாலகனைவிஷ நாகம் தீண்டிவிட, அவன் இறந்து விடுகிறான். அப்போது அவ்வழியே வந்த வேடனொருவன் ஊர்ந்து செல்லும் அந்தப் பாம்பைப் பிடித்து, அழுதவாறு இருந்த அந்தத் தாயிடம் கொண்டு வந்தான்.."தாயே! உனது மகனைத் தீண்டிய நாகத்தை இதோ பிடித்துவிட்டேன். நீயே சொல், பழிக்குப் பழியாக இதைக் கொன்றுவிடட்டுமா?" என்றான்.."வேண்டாம்! அதனால் என் மனதுக்கு அமைதி கிடைக்குமா அல்லது இறந்துபோன எனது மகன்தான் உயிரோடு வரப்போகிறானா? இவை எதுவும் சாத்தியமில்லையே?" என்றாள் அந்தத் தாய்..தனது மகனின் இறப்புக்குக் காரணமான பாம்பின் மீது கரிசனம் காட்டும் அந்தத் தாயைப் பார்த்து ஆச்சரியப்பட்ட வேடன், அவளைத் தனது வழிக்குக் கொண்டுவர முனைப்புக் காட்டலானான். "நீங்கள் நினைப்பது சரியல்ல! தவறிழைத்தது யாராயிருந்தாலும் அதற்குரிய தண்டனையை அளிப்பதே நியாயம். தவிர, இதை இப்படியே விட்டுவிட்டால் இந்தப் பாம்பு இன்னும் பலரையும் தீண்டி விடலாமே! அதனால் இதைக் கொன்றுவிடுகிறேன்!" என்றான்..அந்தத் தாயும் தனது உறுதிப்பாட்டில் நிலையாய் நின்றாள். "அப்பனே! நிரந்தரமாக எவரும் இந்த உலகில் வாழப்போவதில்லை. அதனால் இதைக் கொல்வதால் என்ன பயன் ஏற்படப் போகிறது?" என்றாள்..வேடனின் கைப்பிடியில் இருந்த நாகம் இப்போது குறுக்கிட்டது. "அப்பனே, வேடா! இந்தப் பையனைக் கடித்தேன் என்பதற்காக என்னைக் கொல்லத் துடிக்கிறாயே… எய்தவன் இருக்க அம்பை பலியிடத் துணிகிறாயே… இது என்ன நியாயம்? இதற்கெல்லாம் காரணம் யமதர்மன்தான். அவன் இட்ட கட்டளையைத் தான் நான் நிறைவேற்றினேன்!" என்றது பாம்பு.."ஓஹோ! அப்படியானால் நீங்கள் இருவருமே குற்றவாளிகள்தான். உனக்கும் இதில் பங்கு உண்டென்பதால் நிச்சயம் தண்டனைத் தரப்படுவாய்!" என்றான் வேடன்..பாம்பு விடவில்லை. "உனக்கு ஒன்றை நினைவு படுத்துகிறேன். ஒரு யாகத்தில் பங்கேற்று அதை முறைப்படி செய்விக்கும் அந்தணர்களுக்கோ, ரிஷி, முனிவர்களுக்கோ அந்த யாகத்தின் பலன் சென்றடைவதில்லை. மாறாக, அதன் காரண கர்த்தாவுக்கே அப்பலன்கள் போய்ச் சேரும். அது போலவே என் செயலின் பலனையும் நான் அனுபவிக்க முடியாது!" என்றது..அப்போது அங்கே வந்த எமதர்மராஜா, "நீங்கள் இருவரும் பேசுவதை நான் கேட்டுக்கொண்டுதான் இருந்தேன். பாம்பே! இந்தச் செயலுக்கு நீயும் காரணமல்ல, நானும் காரணமல்ல. காற்றானது, மேகங்களைப் பல இடங்களுக்கு இழுத்துச் சென்று அலைக்கழிக்கிறது. அந்த மேகங்கள் காற்றுக்குக் கட்டுப்பட்டு நடக்கின்றன. அதுபோல, நாம் அனைவரும் ஒன்றுக்குக் கட்டுப்பட்டு நடக்கிறோம். அதுதான் காலம்! அப்படியிருக்கும்போது, நீ என்னைக் குற்றவாளி என்று கூறுகிறாயே!" என்று சொன்னான்..அதற்குப் பாம்பு, "எமனே! நான் உன்னைக் குற்றவாளி என்றும் கூறவில்லை, குற்றமில்லாதவன் என்றும் கூறவில்லை. உன்னால் ஏவப்பட்டே இந்தக் காரியத்தை நான் செய்தேன் என்றும்; ஆகையால், என்னைவிட உனக்குத்தான் இதில் முக்கியப் பங்கு என்றுதான் கூறினேன்" என மீண்டும் தன் நியாயத்தைச் சொன்னது..இப்படி வேடன் பாம்பின் மீதும், பாம்பு எமனின் மீதும், எமதர்மன் காலத்தின் மீதும் பழி போட்டுக் கொண்டிருக்க, அந்த இடத்திற்குக் காலம் வந்தது..அசரீரியாகப் பேச ஆரம்பித்த காலம், "வேடனே! நீ நினைப்பது போல, அந்தத் தாயின் மகன் அகால மரணமடைந்ததற்கு பாம்போ, எமனோ, நானோ காரணமல்ல. இவன் மரணத்துக்குக் காரணம், இவனுடைய வினைப்பயனே! இவன் முற்பிறப்பில் செய்த பாவங்களான வினைப்பயன்தான், இப்பிறப்பில் இவனுக்கு இப்படி அகால மரணத்தைத் தந்திருக்கிறது. நாங்கள் எல்லோருமே அந்த வினைப் பயனுக்குக் கட்டுப்பட்டவர்கள்தான்" என்று தனது தரப்பு நியாயத்தைச் சொன்னது..இத்தனை நேரம் அனைவரின் பேச்சையும் கேட்டுக்கொண்டிருந்த அந்தத் தாய் வேடனிடம், "இவர்கள் கூறுவதெல்லாம் சரிதான். எனது மகன் மரணத்துக்கு அவனுடைய வினைப்பயனே காரணம். தவிரவும், நான் செய்த வினைப்பயனும் இவனது மரணத்தில் பங்காற்றியிருக்கிறது. எனவே, இவர்களையெல்லாம் விட்டுவிடு" என்றாள்..உண்மையைப் புரிந்து கொண்ட வேடனும், பாம்பும், எமனும், காலமும் அங்கிருந்து சென்றனர்..நல்ல கர்மா நல்ல பலனையும், கெட்ட, கொடூரச் செயல்கள் தீயப் பலனையும் தரும் என்பது விதி. வாழ்வில் ஒருவன் செய்யும் செயல்களுக்கேற்ப அவனது மறுபிறவி அமையும். ஆதலால், இப்பிறவியில் நாம் நல்லதே நினைப்போம், நல்லதே செய்வோம். மற்றதெல்லாம், 'அவன்' செயல்!
– பா.கண்ணன், புதுதில்லி.மகாபாரதம் ஆதிபர்வத்தில் மக்களுக்குப் படிப்பினையை போதிக்கும் விதமாக, ரிஷிகள் தங்கள் சீடர்களுக்கு பற்பலக் கதைகளைச் சொல்லியுள்ளனர். அதில் ஒன்றை இப்போது பார்க்கலாம்..ஒரு தாய் தனது இளம் மகனுடன் விறகு, சுள்ளிகள் திரட்டவும், சாப்பிடுவதற்குக் காய், கனிகளைப் பறிக்கவும் அருகிலுள்ள காட்டுக்குச் சென்றாள். அங்கே அந்த பாலகனைவிஷ நாகம் தீண்டிவிட, அவன் இறந்து விடுகிறான். அப்போது அவ்வழியே வந்த வேடனொருவன் ஊர்ந்து செல்லும் அந்தப் பாம்பைப் பிடித்து, அழுதவாறு இருந்த அந்தத் தாயிடம் கொண்டு வந்தான்.."தாயே! உனது மகனைத் தீண்டிய நாகத்தை இதோ பிடித்துவிட்டேன். நீயே சொல், பழிக்குப் பழியாக இதைக் கொன்றுவிடட்டுமா?" என்றான்.."வேண்டாம்! அதனால் என் மனதுக்கு அமைதி கிடைக்குமா அல்லது இறந்துபோன எனது மகன்தான் உயிரோடு வரப்போகிறானா? இவை எதுவும் சாத்தியமில்லையே?" என்றாள் அந்தத் தாய்..தனது மகனின் இறப்புக்குக் காரணமான பாம்பின் மீது கரிசனம் காட்டும் அந்தத் தாயைப் பார்த்து ஆச்சரியப்பட்ட வேடன், அவளைத் தனது வழிக்குக் கொண்டுவர முனைப்புக் காட்டலானான். "நீங்கள் நினைப்பது சரியல்ல! தவறிழைத்தது யாராயிருந்தாலும் அதற்குரிய தண்டனையை அளிப்பதே நியாயம். தவிர, இதை இப்படியே விட்டுவிட்டால் இந்தப் பாம்பு இன்னும் பலரையும் தீண்டி விடலாமே! அதனால் இதைக் கொன்றுவிடுகிறேன்!" என்றான்..அந்தத் தாயும் தனது உறுதிப்பாட்டில் நிலையாய் நின்றாள். "அப்பனே! நிரந்தரமாக எவரும் இந்த உலகில் வாழப்போவதில்லை. அதனால் இதைக் கொல்வதால் என்ன பயன் ஏற்படப் போகிறது?" என்றாள்..வேடனின் கைப்பிடியில் இருந்த நாகம் இப்போது குறுக்கிட்டது. "அப்பனே, வேடா! இந்தப் பையனைக் கடித்தேன் என்பதற்காக என்னைக் கொல்லத் துடிக்கிறாயே… எய்தவன் இருக்க அம்பை பலியிடத் துணிகிறாயே… இது என்ன நியாயம்? இதற்கெல்லாம் காரணம் யமதர்மன்தான். அவன் இட்ட கட்டளையைத் தான் நான் நிறைவேற்றினேன்!" என்றது பாம்பு.."ஓஹோ! அப்படியானால் நீங்கள் இருவருமே குற்றவாளிகள்தான். உனக்கும் இதில் பங்கு உண்டென்பதால் நிச்சயம் தண்டனைத் தரப்படுவாய்!" என்றான் வேடன்..பாம்பு விடவில்லை. "உனக்கு ஒன்றை நினைவு படுத்துகிறேன். ஒரு யாகத்தில் பங்கேற்று அதை முறைப்படி செய்விக்கும் அந்தணர்களுக்கோ, ரிஷி, முனிவர்களுக்கோ அந்த யாகத்தின் பலன் சென்றடைவதில்லை. மாறாக, அதன் காரண கர்த்தாவுக்கே அப்பலன்கள் போய்ச் சேரும். அது போலவே என் செயலின் பலனையும் நான் அனுபவிக்க முடியாது!" என்றது..அப்போது அங்கே வந்த எமதர்மராஜா, "நீங்கள் இருவரும் பேசுவதை நான் கேட்டுக்கொண்டுதான் இருந்தேன். பாம்பே! இந்தச் செயலுக்கு நீயும் காரணமல்ல, நானும் காரணமல்ல. காற்றானது, மேகங்களைப் பல இடங்களுக்கு இழுத்துச் சென்று அலைக்கழிக்கிறது. அந்த மேகங்கள் காற்றுக்குக் கட்டுப்பட்டு நடக்கின்றன. அதுபோல, நாம் அனைவரும் ஒன்றுக்குக் கட்டுப்பட்டு நடக்கிறோம். அதுதான் காலம்! அப்படியிருக்கும்போது, நீ என்னைக் குற்றவாளி என்று கூறுகிறாயே!" என்று சொன்னான்..அதற்குப் பாம்பு, "எமனே! நான் உன்னைக் குற்றவாளி என்றும் கூறவில்லை, குற்றமில்லாதவன் என்றும் கூறவில்லை. உன்னால் ஏவப்பட்டே இந்தக் காரியத்தை நான் செய்தேன் என்றும்; ஆகையால், என்னைவிட உனக்குத்தான் இதில் முக்கியப் பங்கு என்றுதான் கூறினேன்" என மீண்டும் தன் நியாயத்தைச் சொன்னது..இப்படி வேடன் பாம்பின் மீதும், பாம்பு எமனின் மீதும், எமதர்மன் காலத்தின் மீதும் பழி போட்டுக் கொண்டிருக்க, அந்த இடத்திற்குக் காலம் வந்தது..அசரீரியாகப் பேச ஆரம்பித்த காலம், "வேடனே! நீ நினைப்பது போல, அந்தத் தாயின் மகன் அகால மரணமடைந்ததற்கு பாம்போ, எமனோ, நானோ காரணமல்ல. இவன் மரணத்துக்குக் காரணம், இவனுடைய வினைப்பயனே! இவன் முற்பிறப்பில் செய்த பாவங்களான வினைப்பயன்தான், இப்பிறப்பில் இவனுக்கு இப்படி அகால மரணத்தைத் தந்திருக்கிறது. நாங்கள் எல்லோருமே அந்த வினைப் பயனுக்குக் கட்டுப்பட்டவர்கள்தான்" என்று தனது தரப்பு நியாயத்தைச் சொன்னது..இத்தனை நேரம் அனைவரின் பேச்சையும் கேட்டுக்கொண்டிருந்த அந்தத் தாய் வேடனிடம், "இவர்கள் கூறுவதெல்லாம் சரிதான். எனது மகன் மரணத்துக்கு அவனுடைய வினைப்பயனே காரணம். தவிரவும், நான் செய்த வினைப்பயனும் இவனது மரணத்தில் பங்காற்றியிருக்கிறது. எனவே, இவர்களையெல்லாம் விட்டுவிடு" என்றாள்..உண்மையைப் புரிந்து கொண்ட வேடனும், பாம்பும், எமனும், காலமும் அங்கிருந்து சென்றனர்..நல்ல கர்மா நல்ல பலனையும், கெட்ட, கொடூரச் செயல்கள் தீயப் பலனையும் தரும் என்பது விதி. வாழ்வில் ஒருவன் செய்யும் செயல்களுக்கேற்ப அவனது மறுபிறவி அமையும். ஆதலால், இப்பிறவியில் நாம் நல்லதே நினைப்போம், நல்லதே செய்வோம். மற்றதெல்லாம், 'அவன்' செயல்!