

இன்றைய வேகமான வாழ்க்கையில், பலருக்கும் தெரியாமல் உடலில் “அழற்சி” (Inflammation) என்ற பிரச்சினை உருவாகிறது. சாதாரணக் காயம் ஏற்பட்டால் வரும் குறுகியகால அழற்சி உடலுக்கு நல்லது; அது உடலின் ஒரு தற்காப்பு நடவடிக்கை. ஆனால், நீண்ட நாட்கள் நீடிக்கும் நாள்பட்ட அழற்சியானது இதய நோய், நீரிழிவு, உடல் பருமன் போன்ற தீவிரப் பிரச்சினைகளுக்குக் காரணமாகலாம். ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், காலை எழுந்தவுடன் நாம் செய்யும் சில எளிய பழக்கங்கள் இந்த அழற்சியைக் குறைக்கப் பெரிதும் உதவுகின்றன.
நாம் தூங்கும்போது உடலில் இருக்கும் நீர்ச்சத்து குறைகிறது. அதனால், காலை எழுந்தவுடன் முதலில் ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான தண்ணீர் குடிப்பது நல்லது. இது உடலைப் புத்துணர்ச்சியடையச் செய்வதோடு, உடலில் உள்ள நச்சுகளை வெளியேற்றவும் உதவுகிறது. நீர்ச்சத்து குறைவாக இருந்தால் உடலில் அழற்சி அதிகரிக்க வாய்ப்புள்ளது என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.
காலை எழுந்தவுடன் உடனே கடினமான உடற்பயிற்சிகளைச் செய்ய வேண்டியதில்லை. சில நிமிடங்கள் தசைகளை நீட்டி மடக்குவது, மெதுவாக நடப்பது அல்லது யோகா செய்வது போதுமானது. இதனால் உடலின் தசைகள் சுறுசுறுப்பாகும்; இரத்த ஓட்டமும் சீராகும். தொடர்ந்து செய்யப்படும் இத்தகைய எளிய உடற்பயிற்சிகள், உடலில் இருக்கும் அழற்சியைக் குறைக்க உதவுகின்றன.
காலை நேரச் சூரிய ஒளி உடலுக்கு மிகுந்த நன்மை தருகிறது. குறிப்பாக, காலை 7 மணி முதல் 9 மணி வரை கிடைக்கும் மென்மையான சூரிய ஒளி, உடலில் 'வைட்டமின் டி' உருவாக உதவுகிறது. இந்த வைட்டமின் டி உடலின் நோய் எதிர்ப்புச் சக்தியை மேம்படுத்தி, அழற்சியைக் குறைக்கிறது. தினமும் சில நிமிடங்கள் காலை வெயிலில் நடப்பது கூட நல்ல பலனைத் தரும்.
ஸ்ட்ராபெர்ரி, புளூபெர்ரி போன்ற பெர்ரி வகை பழங்களில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அதிகமாக உள்ளன. இவை உடலில் ஏற்படும் தீய அழற்சியைக் குறைக்க உதவுகின்றன. இப்பழங்கள் கிடைக்காத நேரங்களில் மாதுளை, திராட்சை, நாவல் பழம் போன்ற அடர் நிறமுள்ள உள்ளூர் பழங்களையும் சாப்பிடலாம். காலை உணவில் பழங்களைச் சேர்ப்பது மிகச் சிறந்த ஆரோக்கியமான பழக்கமாகும்.
அதிகமான மன அழுத்தமும் அழற்சி ஏற்படுவதற்குக் முதன்மைக் காரணமாகிறது. அதனால், காலை வேளையில் சில நிமிடங்கள் அமைதியாக அமர்ந்து ஆழ்ந்து மூச்சு விடுவது, தியானம் செய்வது அல்லது பிரார்த்தனை செய்வது மனதிற்கு அமைதியைத் தரும். மனம் அமைதியாக இருந்தால், உடலும் தானாக ஆரோக்கியமாக இருக்கும்.
பலரும் காலை வேளையில் காபி அல்லது டீ இல்லாமல் நாளைத் தொடங்க மாட்டார்கள். அளவோடு குடிக்கும் காபி அல்லது கிரீன் டீ உடலுக்கு நன்மை பயக்கும். இவற்றில் இருக்கும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் உடலில் அழற்சியைக் குறைக்க உதவுகின்றன. ஆனால், இதில் அதிகப்படியான சர்க்கரை சேர்ப்பதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.
ஆரோக்கியமான வாழ்க்கைக்குப் பெரிய மாற்றங்கள் தேவையில்லை. காலை நேரத்தில் சில நல்ல பழக்கங்களைத் தொடர்ந்து கடைப்பிடித்தாலே, உடலில் ஏற்படும் நீண்டகால அழற்சியைத்(morning-habits-reduce-inflammation) தடுத்துக் குறைக்க முடியும்.
“நல்ல காலை, நல்ல ஆரோக்கியத்தின் தொடக்கம்” என்பதை மனதில் நிறுத்தி நல்வாழ்வு வாழ்வோம்!
(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்)