தமிழில் பழுவக்காய் என்றும் மெழுகு பாகல் என்றும் பல பெயர்களில் அழைக்கப்படும் கண்டோலா, பாகற்காய் இனத்தைச் சேர்ந்த ஒரு வெப்பமண்டலத் தாவரம் ஆகும். ஆனால், இதில் கசப்பு சுவை அறவே கிடையாது. இந்தியாவின் பல மாநிலங்களில் கிடைக்கக்கூடியது. இதை ஊட்டச்சத்துக்களின் பவர் ஹவுஸ் என்றே பலரும் கூறுவர். இதிலிருந்து கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் என்னென்ன என்பது பற்றி இப்பதிவில் பார்ப்போம்.
கண்டோலாவில் வைட்டமின்கள், மினரல்கள், கரையக்கூடிய நார்ச்சத்து, கால்சியம், இரும்புச் சத்து, பொட்டாசியம், வைட்டமின் C போன்ற அநேக ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. இதில் குறைந்த அளவே கார்போஹைட்ரேட்களும் கலோரியும் உள்ளன. எனவே, இது எடை பராமரிப்பில் கவனம் கொள்வோர்களுக்கு ஒரு சிறந்த உணவாகிறது.
கண்டோலாவில் இயற்கை முறையில் உற்பத்தியாகும் கரையக்கூடிய நார்ச்சத்து உள்ளது. இது குடல் இயக்கத்தை சரிவர நடைபெறச் செய்கிறது; மலச்சிக்கலையும் நீக்க உதவுகிறது.
இதிலுள்ள ஃபிளவனாய்ட் மற்றும் பாலிஃபினால்ஸ் போன்ற ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் ஆக்ஸிடேடிவ் ஸ்ட்ரெஸைத் தடுக்கின்றன. ஃபிரிரேடிகல்ஸ் உண்டுபண்ணும் செல் சிதைவைக் குறைக்க உதவுகின்றன.
கண்டோலாவிலிலுள்ள ஒரு வகை கூட்டுப்பொருளானது இரத்த சர்க்கரை அளவை சமநிலைப்படுத்தும் குணம் கொண்டுள்ளது. இதனால் இக்காய் நீரிழிவு நோயாளிகளும் உண்பதற்கு ஏற்றதாகிறது.
இந்தக் காயிலுள்ள நார்ச்சத்து, ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் மற்றும் பொட்டாசியம் ஆகியவை இதய ஆரோக்கியம் காப்பதில் பெரும் பங்காற்றுவதோடு, ஆரோக்கிய சருமத்தையும் அளிக்கின்றன. இதிலுள்ள அதிகளவு வைட்டமின் C யானது நோயெதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கச் செய்கிறது; தொற்று நோய்க் கிருமிகளை எதிர்த்துப் போராடவும், நோய்களைக் குணமாக்கவும் செய்கிறது.
இதன் ஆன்டி இன்ஃபிளமேட்டரி குணமானது மூட்டு வலியையும், மூட்டுக்களில் உண்டாகும் வீக்கங்களையும் குறைக்க பெரிதும் உதவுகிறது. ஆர்த்ரைடிஸ் நோயின் தாக்குதலால் கஷ்டப்படுபவர்களின் வலியை குறையச் செய்கிறது. புற்றுநோய், இதய நோய் போன்ற நாள்பட்ட வியாதிகள் வரும் அபாயத்தைத் தடுக்கிறது.
இத்தனை ஆரோக்கியம் நிறைந்த கண்டோலா காயை நாமும் உணவில் பயன்படுத்தி உண்டு உடல் நலம் பெறுவோம்.