

அழுகண்ணி என்பது கிடைப்பதற்கு அரிதான, ஒரு அடி உயரம் வரை வளரக்கூடிய காயகற்ப மூலிகைச் செடியாகும். இது Drosera burmanni குடும்பத்தைச் சேர்ந்தது. இதன் இலைகள் தடிமனாகவும், வழுவழுப்பாகவும், கடலை இலைகளைப் போலவும் காணப்படும். இந்த குத்துச் செடி மூலிகைக்கு வடமொழியில் ருதந்தி, சாவ்வல்யகரணி என்றும் பெயருண்டு.
இதன் இலைகளில் இருந்து எப்போதும் பனித்துளி போன்ற நீரை சிந்துவதால் இப்பெயர் உண்டாயிற்று. ஈரப்பதம் மிகுந்த இடங்களில், குறிப்பாக வயல்வெளிகளின் ஓரங்களில் இது வளரக்கூடியது. சதுரகிரி போன்ற மலைப்பகுதிகளிலும் வளரும் இந்த மூலிகை இலைகளின் நுனியில் இருந்து பனித்துளி போல் நீர் கசிந்து கொண்டே இருக்கும்.
அதனால் இந்த செடிக்கு அடியில் பூமியில் எப்போதும் ஈரப்பதம் மிகுந்து காணப்படும். இந்த நீர் இனிப்புச் சுவை உடையதால் எப்போதும் எறும்புகள் மொய்த்துக் கொண்டிருக்கும். சித்த மருத்துவத்தில் இளமையை தக்க வைக்கவும், நீண்ட ஆயுளைப் பெற உதவும் காயகற்ப மூலிகையாக கருதப்படுகிறது.
இலைகளின் மேல் பகுதியில் பசையுள்ள சிறு முடிகள் காணப்படுகின்றன. இது சித்த, ஆயுர்வேத மற்றும் யுனானி மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகிறது. இதனை 48 நாட்கள் தொடர்ந்து உட்கொள்ளும் பொழுது நரை, திரை, மூப்பு போன்ற மூப்பின் அறிகுறிகளை குறைத்து நோயற்ற நீண்ட ஆயுளை வழங்கக் கூடியது. சித்த மருத்துவத்தில் இது பல்வேறு நோய்களுக்கு மருந்தாக பயன்படுத்தப்படுகிறது. தோல் நோய்கள், சொறி சிரங்கு மற்றும் தீராத புண்களை குணப்படுத்த இதன் சாறு பயன்படுத்தப்படுகிறது.
தொழுகண்ணி மூலிகை:
தொழுகண்ணி(Desmodium gyrans) என்பது அரிதான, தொட்டவுடன் இலைகள் கைகூப்புவது போல் அசையும் ஒரு மூலிகையாகும். இது 64 காயகற்ப மூலிகைகளில் ஒன்றாக உள்ளது. சலனக் குறணி என்று அழைக்கப்படும் இது சளி, காய்ச்சல், தோல் நோய்கள், தூக்கமின்மை மற்றும் வாத நோய்களுக்கு சித்த மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகிறது. அழுகண்ணி மூலிகையைப் போலவே இந்த காயகற்ப மூலிகையையும் முறைப்படி எடுத்துக் கொண்டால் வெட்டுக் காயங்களை குணமாக்கும்.
இந்தச் செடியின் வேர்கள் மற்றும் இலைகள் சொறி, சிரங்கு போன்ற தோல் தொடர்பான பிரச்சனைகளுக்கு சித்த மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகிறது. மூட்டு வலி மற்றும் வாதம் தொடர்பான பிரச்னைகளுக்கு இதன் வேர்ப்பொடி மருந்தாக பயன்படுத்தப்படுகிறது.
இதன் இலைகளைக் கொண்டு காய்ச்சப்படும் தைலங்கள் ஆயுர்வேத மருத்துவத்தில் தசை மற்றும் நரம்பு வலிகளுக்கு மருந்தாகப் பரிந்துரைக்கப்படுகிறது. இதன் மருத்துவ குணங்களுக்காக ஆயுர்வேதம், சித்தா மற்றும் யுனானி மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகிறது. இது அழற்சி எதிர்ப்பு, கிருமி நாசினி மற்றும் வலி நிவாரணி பண்புகளுக்காக அறியப்படுகிறது. பொதுவாக இது பெரும்பாலான மக்களுக்கு பாதுகாப்பானது என்றாலும் கர்ப்பிணி பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு பரிந்துரைக்கப்படுவதில்லை.
(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்)