50 வயதைக் கடந்த பிறகு நமது உடல் பல்வேறு மாற்றங்களை அனுபவிக்கிறது. ஹார்மோன் மாற்றங்கள், உடல் நலப் பிரச்சினைகள் மற்றும் வயதாவதால் ஏற்படும் இயற்கையான தேய்மானம் ஆகியவை நமது உடலில் சில பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும். இதுபோன்ற மாற்றங்களைப் பற்றி நாம் கவலைப்பட வேண்டியதில்லை என்றாலும், சில அறிகுறிகள் தீவிரமான உடல்நல பாதிப்பின் அறிகுறிகளாக இருக்கலாம். இந்த பதிவில் 50 வயதிற்கு மேற்பட்டவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய சில முக்கிய அறிகுறிகள் என்னென்ன என்பது பற்றி பார்க்கலாம்.
1. மார்பு வலி அல்லது அசௌகரியம்: மார்பு வலி இறுக்கம் அல்லது அழுத்தமான உணர்வு போன்ற அறிகுறிகள் இருந்தால், உடனடியாக மருத்துவரை நாடுவது நல்லது. இவை இதய செயலிழப்பு, மாரடைப்பு போன்ற தீவிரமான இதய பாதிப்புகளின் அறிகுறிகளாக இருக்கலாம்.
2. மூச்சுத் திணறல்: 50 வயதிற்கு மேல் திடீரென மூச்சுத்திணறல் அல்லது மூச்சு விடுவதில் சிரமம் இருந்தால், அது நுரையீரல் அடைப்பு இதய செயலிழப்பு அல்லது நுரையீரல் தொற்று போன்ற பாதிப்புகளின் அறிகுறியாகும்.
3. திடீர் பலவீனம் அல்லது மயக்கம்: திடீரென பலவீனமாக உணர்வதோ அல்லது மயக்கம் ஏற்படுவதோ பக்கவாதம் மற்றும் மூளை செயலிழப்பின் அறிகுறிகளாகும். இத்தகைய அறிகுறிகளை ரத்த அழுத்த பாதிப்பு என நினைக்காமல், மருத்துவமனைக்கு சென்று பரிசோதிப்பது நல்லது.
4. தொடர்ச்சியான வலி: முதுகு, மூட்டு அல்லது உடல் தசை போன்ற பகுதிகளில் தொடர்ச்சியான வலி இருந்தால் அதை சாதாரணமாக எடுத்துக் கொள்ளாதீர்கள். இது புற்றுநோய் மற்றும் பிற மருத்துவ நிலைமைகள் காரணமாக உண்டாகும் அறிகுறிகள்.
5. எடை இழப்பு: திடீரென எந்த காரணமும் இன்றி உடல் எடை குறைகிறது என்றால் அது புற்றுநோய், தைராய்டு பிரச்சனைகள் போன்றவற்றின் அறிகுறியாகும். மேலும், ஏற்கனவே உங்களுக்கு நீரிழிவு நோய் இருந்தால், திடீரென உடல் எடை குறைவது அதிக ரத்த சர்க்கரை அளவு காரணமாகவும் இருக்கலாம்.
6. மனநிலை மாற்றங்கள்: மனச்சோர்வு, பதட்டம், குழப்பம் அல்லது நினைவாற்றல் இழப்பு போன்ற அறிகுறிகள் இருந்தால், அது அல்சைமர் அல்லது பைபோலார் கோளாறு போன்ற மனநிலை பிரச்சனைகளாக இருக்கும் வாய்ப்புகள் அதிகம்.
50 வயதை கடந்தவர்களுக்கு மேலே குறிப்பிட்ட 6 அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுகி அதற்கான காரணத்தைத் தெரிந்துகொள்வது நல்லது. நீங்களாகவே எந்த ஒரு முடிவும் எடுக்காமல், உங்களது உடல் நலன் மீது அக்கறை கொண்டு, எதையும் பரிசோதித்து தெரிந்து கொள்வது, உங்களது உடல் நிலையை நல்லபடி பராமரிக்க உதவும். ஏதேனும் தீவிரமான பிரச்சனைகள் என்றால், தொடக்கத்திலேயே கண்டறிந்து விரைவில் சரி செய்வதற்கும் உதவியாக இருக்கும்.