
வெயில் காலம் துவங்கியாச்சு. எவ்வளவு தண்ணீர் குடித்தாலும் தாகம் அடங்கவே மாட்டேங்குது என்பவரா நீங்கள்? பதிமுகம் நீரை அருந்திக் பாருங்கள். தாகமும் அடங்கும். உடல் ஆரோக்கியமும் மேம்படும்.
கேரளா செல்பவர்கள் நிச்சயம் இந்த நீரை பருகியிருப்பார்கள். ஏனெனில் அங்கு இதன் மகத்துவம் அறிந்து பெரும்பாலானவர்கள் அன்றாடப் பயன்பாட்டில் வைத்து அருந்துகின்றனர். அதென்ன பதிமுகம் நீர்..வாங்க.. இந்தப் பதிவில் அதன் சிறப்புகள் பற்றி அறிவோம்.
சிசல்பினேசியக் குடும்பத்தைச் சேர்ந்த பதிமுகம் (Biancaea sappan), செசல்பானியா சப்பான் எனப்படும் அறிவியல் பெயரால் அறியப்படுகிறது. சப்பாங்கம், சப்பான், பதாங்கம், பதாங்கா, கிழக்கிந்திய செம்மரம், சாயக்கட்டா என பல பெயர்கள் இதற்கு உண்டு. பழங்கால பாரம்பரிய மருத்துவக் குடும்பத்தைச் சேர்ந்த மரமான இது பலவித மருத்துவ குணங்கள் மற்றும் இயற்கை சாயத்தை உள்ளடக்கிய சிறப்பு கொண்டது.
வறட்சியைத் தாங்கி வளரும் இது வளர்ந்து பயன்தர சுமார் 8 வருடங்கள் காத்திருக்க வேண்டும். முட்களுள்ள சிறு மரமான இதன் இலைகள் பசுமை நிறத்துடன் கூட்டிலைகளாகவும் ஒரு வருடத்தில் பூக்கும் தன்மையுடனும் இம்மரம் கிட்டத்தட்ட பார்ப்பதற்கு கொடுக்காப்புளி மரத்தை ஒத்திருக்கிறது.
சிறந்த கிருமிநாசினியான இதன் மரப்பட்டைகளைத் தூளாக்கி தண்ணீரில் கலந்து குடிக்கும் போது தண்ணீர் தூய்மையுடனும் கிருமிகளை அகற்றியும் பலன் தருகிறது. இரத்த சுத்திகரிப்பு, தாகத்தைத் தணித்தல் மற்றும் செரிமானத்திற்கு உதவுதல் உள்ளிட்ட அதன் சாத்தியமான சுகாதார நன்மைகளுக்காகப் பாரம்பரியமாக பயன்படுத்தப்படுகிறது.
சர்க்கரை நோய், இரத்த அழுத்தம், சிறுநீரகக் கோளாறு , மூல நோய், சரும நோய் போன்றவற்றுக்கு இந்த நீர் நிவாரணம் தருவதுடன் வயிறு சம்பந்தப்பட்ட நோய்களைத் தீர்த்து கொழுப்பை சமச்சீராக மாற்றும்.
நீரில் சிறிதளவு பதிமுகம் மரப்பட்டைகளை சேர்த்து வேகவைத்து, பின் வடிகட்டி ஆறவிட்டு குடிக்கலாம். இப்படி தயாரிக்கப்பட்ட பதிமுகம் தண்ணீரை ஒரு கண்ணாடி கொள்கலனில் சேமித்து 24 மணி நேரத்திற்குள் உட்கொள்ளவும் என்கிறது குறிப்பு. இருப்பினும் மருத்துவ ஆலோசனைகள் பெறுவதும் அவசியம் என்கின்றனர் இயற்கை மருத்துவர்கள்.
மேலும் இம்மரத்திலிருந்து இதயம் மற்றும் புற்றுநோய் பாதிப்பை நீக்கும் மருந்துகள் தயாரிப்பதாக கூறப்படுகிறது. குறிப்பாக பெரும்பாலான ஆயுர்வேத மருந்துகள் தயாரிப்பில் இந்த மரம் பயன்படுத்தப்படுகிறது.
பார்த்தவுடன் குடிக்கத் தோன்றும் அழகிய வண்ணத்தில் இருக்கும் பதிமுகம் நீர் இந்த கோடையின் நாவறட்சியை சமாளிக்க உதவும்.
கூடுதல் தகவல்:
இம்மரத்தின் மையத் தண்டிலிருந்து எடுக்கப்படும் இயற்கை சாயம் 'கயா' எனும் மர சாயமுடன் கலக்கும்போது கருப்பு, ஊதா மற்றும் சிவப்பு வண்ண சாயங்கள் கிடைக்கும். இது பட்டு, பருத்தி இழை, கம்பளி, நார், காலிகோ, அச்சுத்தொழில், மரச்சமான்கள் மற்றும் பல வகை கைவினைப் பொருள்களுக்கு வண்ணமேற்ற பயன்படுத்தப்படுகிறது. உதாரணமாக உலகப் புகழ்பெற்ற பத்தமடைப் பாய்கள் மீது இந்த மரசாயமே ஏற்றப்படுவது சிறப்பு. அத்துடன் மது பானங்கள், இனிப்பு வகைகள், கேக், குளிர்பானம் போன்றவற்றுக்கு இயற்கை நிறமூட்ட இந்த மரப்பட்டை பயன்படுத்தப்படுகிறது.