‘உடல் பருமன்’ என்பது உடலில் சாதாரணமாக இருக்கவேண்டிய அளவை விட கொழுப்பு அதிகமாக சேர்தலால் உண்டாகும் நோய் நிலையாகும். பொதுவாக, நமது உடல் நாம் உண்ணும் உணவில் நமது தேவைக்கும் எஞ்சியதை கொழுப்பாக மாற்றி சேமிப்பதை வழக்கமாகக் கொண்டிருக்கிறது. எதிர்காலத்தில் உணவு கிடைக்காத சூழ்நிலை பஞ்சங்களின் மூலம் உருவானால் அப்போது உடலில் உள்ள கொழுப்பை எரித்து உயிர் வாழத் தேவையான சக்தியைப் பெறும். கொழுப்பை உடலில் சேமித்து வைத்தல் என்பது நமது உடல் இயங்குவியலில் நார்மலான நிகழ்வே ஆயினும் அது எல்லை மீறும்போது நோய் நிலையாக உருவெடுக்கிறது.
தற்காலத்தில் பஞ்சங்கள் ஏற்படுவதில்லை. பட்டினி எனும் நிலை இல்லை. அதற்கு நேர் எதிராக காணும் திசையெங்கும் மலிவான விலையில் இனிப்புகள், பண்டங்கள், ஃபாஸ்ட் ஃபுட், குளிர் பானங்கள் என விற்கிறது. தானியங்கள் சார்ந்த அதிக மாவுச்சத்து உணவு உண்ணும் முறையாக இருக்கிறது. உடல் உழைப்பு செய்ய தேவையும் இல்லை நேரமும் இல்லை எனும் அளவில் வாழ்க்கை ஓடிக்கொண்டிருக்கிறது. இதன் விளைவாக உடலில் சேரும் கொழுப்பைக் கரைக்கவும் வழியில்லாமல் மேலும் மேலும் உடல் எடை கூடுகிறது.
உடலில் கொழுப்பு சேர்வது எப்படி?
நாம் அளவுடன் உண்ணும் பால், பால் பொருட்கள், மாமிசம், முட்டை, மீன் ஆகியவற்றால் உடலில் கொழுப்பு சேருவதில்லை. இனிப்பு, (சீனி, நாட்டு சர்க்கரை, வெல்லம், கருப்பட்டி, தேன்) தானியங்கள், (அரிசி, கோதுமை, சிறுதானியம்) பேக்கரி தீனிகள், குளிர் பானங்கள், பழச்சாறுகள், அதிகமாக உண்ணும் இனிப்பான பழங்கள் ஆகியவை உடலால் கொழுப்பாக உருமாற்றம் பெற்று சேமித்து வைக்கப்படுகின்றன.
உடல் பருமனின் வகைகள்: உடல் பருமனில் மைய உடல் பருமன் (CENTRAL OBESITY), சுற்றுப்புற உடல் பருமன் (PERIPERAL OBESITY) என இருவகை உண்டு.
சுற்றுப்புற உடல் பருமன் என்பது உடல் முழுவதும் கொழுப்பு பரவலாக சருமத்துக்குக் கீழ் சேமித்து வைக்கப்படும். பொதுவாக, பெண்களுக்கு இந்த வகை உடல் பருமன் இருக்கும். இதனால் உடலின் வளர்சிதை மாற்றத்துக்கு பாதிப்பு ஏற்படுவதில்லை.
மைய உடல் பருமன் என்பது வயிற்றுப் பகுதியில், இடுப்புப் பகுதியில், பின் பக்கத்தில் கொழுப்பு அதிகமாக சேருவதாகும். இது ஆபத்தானதாகும். இது தொப்பையைத் தாண்டி உடலின் முக்கிய உள்ளுறுப்புகளான கல்லீரல், கணையம் போன்றவற்றில் படியத் துவங்கும். இதனால் உடலின் வளர்சிதை மாற்றத்தில் பாதிப்பு உண்டாகி டைப் டூ டயாபடிஸ் (நீரிழிவு), இரத்தக் கொதிப்பு, இதய நோய், பிசிஓடி போன்ற நோய்களும் உருவாகின்றன.
இவற்றுக்கெல்லாம் ஆதி ஊற்றாக இருப்பது இன்சுலின் எனும் ஹார்மோனை தேவைக்கும் மீறி அடிக்கடி தூண்டிக்கொண்டே இருப்பதாக இருக்கிறது. இன்சுலினை அதன் அளவில் கட்டுக்குள் வைக்க மாவுச்சத்து குறைவான உணவுகளை சாப்பிட்டு, புரதச்சத்து மற்றும் நல்ல கொழுப்புச் சத்து உணவுகளை சாப்பிடவேண்டும். அத்துடன் தினசரி ஒரு மணி நேரம் உடற்பயிற்சி அவசியம். உடல் எடையைக் குறைக்க நீண்ட மற்றும் தரமான உறக்கமும் அவசியம். உறக்கம் சரியாக அமையாதோருக்கு கார்டிசால் எனும் ஹார்மோன் சுரந்து கொண்டு இருக்கும். இதன் விளைவாக உடல் எடை குறையாமல் கூடும்.
உடல் பருமனுக்கு அரிதான மரபணுக் காரணிகளும் உண்டு. அவற்றைக் கண்டறிந்து சிகிச்சை பெறலாம். நான்காவது, ‘உளநலன்’ - மன அழுத்தத்தைப் போக்கும் வழிகளை அடைய வேண்டும். இவை அனைத்தையும் கூட்டாக முயற்சி செய்தால் கட்டாயம் உடல் எடை நன்றாகக் குறையும்.
(நன்றி: Dr.அ.ப.ஃபரூக் அப்துல்லாவின் பதிவில் இருந்து)