

மருந்துகளின் உண்மை தன்மையை மக்கள் எளிதில் அறியும் வகையில் க்யூ.ஆர் கோடை மருந்த அட்டைகளில் பயன்படுத்த வேண்டும் என்று மருந்து நிறுவனங்களுக்கு அரசு உத்தரவிட்டது.
போலி மருந்துகளை தடுப்பதற்காகவும் மருந்தின் நம்பகத்தன்மையை மக்களுக்கு உறுதிப்படுத்தும் விதமாகவும் கடந்த ஆண்டு மார்ச் மாதம் அனைத்து மருந்து நிறுவனங்களும் மருந்து அட்டைகளில் க்யூ.ஆர் கோடை பயன்படுத்த வேண்டும் என்று ஒன்றிய அரசு உத்தரவிட்டது.
இதற்காக ஒன்றிய சுகாதாரத் துறை அமைச்சகம் மருந்து விலை நிர்ணய ஆணையத்திடம் இந்தியாவில் செயல்படும் முக்கிய மருந்து பொருள் தயாரிப்பு நிறுவனங்களில் பெயர்களை பட்டியலிட கேட்டிருந்தது. இதை அடுத்து 300 முன்னணி மருந்து நிறுவனங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. அந்த நிறுவனங்களுக்கு ஒன்றிய சுகாதாரத் துறை அமைச்சகத்தின் சார்பில் கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளன.
இதைத் தொடர்ந்து தற்போது இந்தியாவில் இயங்கி வரும் முன்னணி மருந்து பொருள் நிறுவனங்கள் தங்கள் தயாரிக்கும் மருந்துகளின் அட்டைகளில் க்யூ.ஆர் கோடை பயன்படுத்த தொடங்கி இருக்கின்றனர். இந்தக் க்யூ.ஆர் கோடை ஸ்கேன் பண்ணுவதன் மூலம் மருந்து தயாரிக்கப்பட்ட தேதி, காலாவதியாகும் தேதி, மருந்து எங்கு தயாரிக்கப்பட்டது என்ற முகவரி, மருந்து தயாரிப்பு நிறுவனத்தில் பெயர், மருந்தின் பெயர், மருந்தின் பொதுப்பெயர், மருந்து சேர்க்கப்பட்டுள்ள பொருட்கள், அதன் அளவுகள் ஆகியவை குறிப்பிட பட்டிருக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் மருந்து சந்தையில் போலி மருந்துகளினுடைய எண்ணிக்கை குறைக்கப்படும் என்றும், மருந்தினுடைய நம்பகத்தன்மையை மக்கள் எளிதில் தெரிந்து கொள்ள வாய்ப்பாக இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
மேலும் மருந்து அட்டைகளில் க்யூ.ஆர் கோட் பதிவு செய்வதற்கு 5 சதவீதம் கூடுதலான தொகை செலவு ஆகும் என்று கூறப்படுவதால் மருந்துகளின் விலை அதிகரிப்பதற்கான வாய்ப்பு உள்ளது.