அதிகரிக்கும் டெங்கு காய்ச்சல்: அறிகுறியும் எச்சரிக்கையும்!

அதிகரிக்கும் டெங்கு காய்ச்சல்: அறிகுறியும் எச்சரிக்கையும்!
Published on

ழைக்காலம் தொடங்கி இருப்பதால் தமிழ்நாட்டில் டெங்கு காய்ச்சலின் பாதிப்பு அதிகரிக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், டெங்கு காய்ச்சல் அறிகுறி மற்றும் முன்னெச்சரிக்கை குறித்து இந்தப் பதிவில் காணலாம்.

தற்போது தமிழ்நாடு முழுவதும் பருவ மழை தொடங்கி இருக்கிறது. இந்த மழை காரணமாக, பல்வேறு வகையான காய்ச்சல்கள் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஏற்படுவது வழக்கம். அதேநேரம் டெங்கு போன்ற வீரியம் அதிகம் கொண்ட காய்ச்சல்கள் ஏற்படவும் அதிக வாய்ப்பு உள்ளது.

இந்த நிலையில், தற்போது தமிழ்நாட்டில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு சிறுவர்களை அதிகம் பாதித்து வருகிறது. டெங்கு காய்ச்சல் ஏ டி எஸ் வகை கொசுக்களில் இருந்து பரவுகிறது. இந்த வகை கொசுக்கள் அதிகம் தண்ணீரில் உற்பத்தி ஆகின்றன. எனவே, பொது இடங்கள் மற்றும் வீடுகளில் தேங்கி உள்ள தண்ணீரை மக்கள் சுத்தப்படுத்த வேண்டும். நீண்ட நாட்கள் தண்ணீர் தேங்கி இருந்தால் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தெரிவித்து தண்ணீரை சுத்தம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஏ டி எஸ் வகை கொசுக்கள் பெரும்பாலும் பகலில் கடிக்கக்கூடிய தன்மை கொண்டவை. அதனால் பகல் நேரங்களில் உடலை முழுமையாக மறைக்கும் வகையில் குழந்தைகளுக்கு ஆடை அணிவிப்பது நல்லது. கொசு விரட்டிகளைப் பயன்படுத்தலாம். மழை நேரங்களில் வீட்டிலும் வீட்டைச் சுற்றிலும் தண்ணீர் தேங்காமல் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வது அவசியம். மேலும், சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்துக் கொள்ளுதல் டெங்கு கொசு உற்பத்தியைக் குறைக்கும்.

ஏ டி எஸ் வகை கொசுக்கள் கடித்தவுடன் முதலில் காய்ச்சல், தலையில் பின்பகுதி வலி, உடல் சோர்வு ஆகியவை ஏற்படும். இந்த முதல்கட்ட அறிகுறிகள் ஏற்பட்ட உடனே மருத்துவரை அணுகி சிகிச்சை எடுப்பது காய்ச்சலின் வீரியத்தைக் கட்டுப்படுத்தும். பிறகு தீவிர வயிற்றுப்போக்கு, தொடர் வாந்தி, வாந்தியுடன் கூடிய ரத்தம் வெளியேறுதல், முழுமையான உடல் சோர்வு, ஈறுகளில் இரத்தப்போக்கு ஆகிய அறிகுறிகள் தென்பட்ட உடனே மக்கள் உடனடியாக மருத்துவமனையில் அனுமதி பெற்று தீவிர சிகிச்சை மேற்கொள்ள வேண்டும்.

மேலும், டெங்கு மற்றும் இதர தீவிர காய்ச்சல்களை ஏற்படுத்தும் கொசு வகைகளை கட்டுப்படுத்த மழைக்காலங்களில் கொசு மருந்து அடிக்கும் பணி, தூய்மைப் பணியை விரைவாக மேற்கொள்ள நடவடிக்கை மற்றும் சிறப்பு மருத்துவ முகாம்களுக்கும் அரசு சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. அதேநேரம், மக்களும் போதிய விழிப்புணர்வோடு செயல்பட வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுரை கூறுகின்றனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com