நாம் உண்ணும் உணவுகளில் நம் உடலுக்குத் தேவையான முக்கியச் சத்துக்களான புரதம், கார்போஹைட்ரேட்ஸ், கொழுப்பு, வைட்டமின்கள், கனிமச் சத்துக்கள் போன்றவை வெவ்வேறு விகிதங்களில் அடங்கியிருக்கும். அநேகமாக நாம் உண்ணும் உணவுகளை உப்பு, புளி, காரம், எண்ணெய் ஆகியவற்றை சுவை கூட்டியாகச் சேர்த்து சமைத்த பிறகே உட்கொள்கிறோம். அவ்வாறு சமைக்கும்போது, உஷ்ணம் மற்றும் வேதியல் மாற்றங்களின் காரணமாக உணவுகளிலுள்ள நுண்ணுயிர்ச் சத்துக்கள் முழுவதுமாகவோ அல்லது பகுதியாகவோ அழிந்துவிடும் வாய்ப்பு உண்டு. அவ்வாறு நேர்வதைத் தடுக்க சில வகை உணவுகளை சமைக்காமல், பச்சையாக சாப்பிட்டால் அவற்றிலுள்ள ஊட்டச் சத்துக்கள் அனைத்தும் நம் உடலுக்குள் சேரும். அப்படிப்பட்ட சில உணவுகள் குறித்து இந்தப் பதிவில் காண்போம்.
பசலை, காலே மற்றும் அருகுலா போன்ற பச்சை இலைக் காய்கறிகளில் வைட்டமின்கள், மினரல்கள், ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் போன்ற ஊட்டச் சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ளன. இவற்றை பச்சையாக உண்ணும்போது அவற்றிலுள்ள உயிர்ச் சத்துக்கள் எவ்வித சேதமுமின்றி வயிற்றுக்குள் சென்று சீரான செரிமானத்துக்கும், சத்துக்கள் உறிஞ்சப்படுவதற்கும் உதவிபுரிகின்றன.
ஆப்பிள், சிட்ரஸ் வகைப் பழங்கள் மற்றும் பெரி வகைப் பழங்களையும் பொதுவாக நாம் பச்சையாகவே உண்ணுகிறோம். அவ்வாறு உண்ணும்போது அவற்றிலுள்ள அடர்த்தியான வைட்டமின்கள், இயற்கையான இனிப்புச் சத்துக்கள், நார்ச் சத்துக்கள் ஆகியவை எவ்விதக் குறைபாடுகளுமின்றி உடலுக்குக் கிடைக்கின்றன.
பாதாம், வால்நட், சியா மற்றும் ஃபிளாக்ஸ் விதைகளில் அதிகளவு ஊட்டச் சத்துக்கள் நிறைந்துள்ளன. இவற்றை பச்சையாக உண்ணும்போது அவற்றில் நிறைந்துள்ள ஆரோக்கியமான கொழுப்புகள், புரோட்டீன் சத்துக்கள் மற்றும் தேவையான கனிமச் சத்துக்கள் அனைத்தும் குறைவின்றி உடலுக்குள் சேர்கின்றன.
புரோக்கோலி, காலிஃபிளவர், பிரஸ்ஸல் ஸ்பிரௌட்ஸ் போன்ற க்ரூஸிஃபெரஸ் காய்கறிகளை சமைக்கும்போது அவற்றிலுள்ள நன்மை தரும் கூட்டுப் பொருட்களின் ஒரு பகுதி அழிந்துவிடும் வாய்ப்பு உள்ளது. எனவே, இக்காய்கறிகளை சமைக்காமல் பச்சையாகவே சாப்பிட்டால் அவற்றிலுள்ள ஊட்டச் சத்துக்கள் அனைத்தையும் முழுமையாகப் பெற முடியும்.
முளைவிட்ட புரோக்கோலி, பச்சைப் பயறு, ஆல்ஃபல்ஃபா (alfalfa) அகியவற்றில் அதிகளவு வைட்டமின்கள், கனிமச் சத்துக்கள், என்சைம்கள் நிறைந்துள்ளன. இவற்றை பச்சையாக உண்ணும்போது உயிர்ச் சத்துக்கள் அனைத்தும் முழுமையாக உடலுக்குள் உறிஞ்சப்படுகின்றன.
கிராமங்களில் தோட்டத்தில் பணிபுரியும் பெண்கள் வெங்காயத் தாள், வெண்டைக்காய், பிஞ்சிக் காராமணிக்காய், ராகி கதிர், சோளக்கதிர் போன்றவற்றை அவ்வப்போது பச்சையாக தின்பதைப் பார்த்த அனுபவமுண்டு. நாமும் இதை முயற்சிக்கும் முன் அவற்றில் பூச்சிக்கொல்லி மருந்துகளின் தாக்கம் இல்லை என்பதை உறுதிசெய்து கொள்வது அவசியம்.