‘காட்டுயானம்’ பாரம்பரிய சிவப்பு அரிசி வகையில் மிகவும் முக்கியமானதாகும். இந்த அரிசிக்கு காட்டுயானம் என்ற பெயர் வரக் காரணம், இந்த அரிசி விளையக்கூடிய நெல்வயலில் யானை நின்றால், அதுவே மறையக்கூடிய அளவுக்கு அதனுடைய நெற்கதிர்கள் உயரமாக வளருமாம். இது மற்ற நெல் ரகங்களை விடவும் சுமார் 150 நாட்கள் அதிகமாக விளையக்கூடியது.
காட்டுயானம் அரிசியில் அதிக அளவில் கால்சியம், புரதம், மெக்னீசியம், நார்ச்சத்து, வைட்டமின், மினரல், Anthocyanin, Polyphenols போன்ற ஆன்டி ஆக்ஸிடென்டுகள் நிறைந்திருக்கிறது. இவ்வளவு சத்துக்களை கொண்ட இந்த அரிசியை சாப்பிடும்போது காட்டு யானைக்கான பலம் கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது. காட்டுயானம் அரிசியால் கிடைக்கும் பயன்களைப் பற்றி இந்தப் பதிவில் காண்போம்.
1. இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்தும்: பொதுவாக, இரத்தத்தில் சர்க்கரையின் அளவு கட்டுப்பாட்டுடன் இருக்க குறைந்த Glycemic index உள்ள உணவுகளையும், நார்ச்சத்து அதிகமாக உள்ள உணவையும் எடுத்துக்கொள்வது நல்லது. அந்த வகையில் காட்டுயானம் அரிசி சிறந்த தேர்வாகும். இந்த அரிசியில் இருக்கும் Glycemic index 47 என்பதால் சர்க்கரை நோயாளிகள் தாராளமாக இதை எடுத்துக்கொள்ளலாம். மேலும், இதிலுள்ள Amylose உணவின் மூலமாக வரும் குளுக்கோஸ் இரத்தத்தில் சர்க்கரையாக மாறக்கூடிய வேகத்தை குறைக்கும். இதனால், இரத்தத்தில் உள்ள சர்க்கரையை நன்கு கட்டுப்படுத்தலாம்.
2. எலும்புகளை பலப்படுத்தும்: அரிசி உணவுகளில் கார்போஹைட்ரேட் அதிகம் இருப்பதாக கேள்விப்பட்டிருப்போம். ஆனால், எலும்பை பலப்படுத்தக்கூடிய கால்சியம் அதிகம் நிறைந்தது காட்டுயானம் அரிசியாகும். இது புதிய எலும்பு செல்கள் உருவாகக் காரணமாக இருப்பதோடு மட்டுமில்லாமல், எலும்புகளை பலப்படுத்தவும் உதவுகிறது.
3. அனீமியாவை குணமாக்கும்: இரத்தத்தில் இரும்புச்சத்து குறைவாக இருப்பதுதான் அனீமியா வருவதற்குக் காரணமாக இருக்கிறது. காட்டுயானம் அரிசியில் 100 கிராமில் 1.9 மில்லி கிராம் இரும்புச்சத்து இருக்கிறது. சிவப்பு அணுக்களின் உற்பத்தியை தூண்டக்கூடிய வைட்டமின் B9 உள்ளது. எனவே, இதைத் தொடர்ந்து எடுத்து வந்தால், அனீமியா குணமாகும்.
4. செரிமான மண்டலத்தை பலப்படுத்தும்: மற்ற அரிசிகளை விட அதிக நார்ச்சத்து இந்த காட்டுயானம் அரிசியில் உள்ளது. இது வயிற்றில் உள்ள Probiotics பாக்டீரியாவிற்கு சிறந்த உணவாக இருப்பதோடு மட்டுமல்லாமல், அதன் வளர்ச்சியையும் அதிகப்படுத்தும். இதனால் குடல் சார்ந்த பிரச்னைகளை சரிசெய்து ஒட்டுமொத்த குடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது. காட்டுயானம் அரிசி Gluten free என்பதால் Gluten அழற்சி இருப்பவர்கள் கூட தாராளமாக இதை எடுத்துக் கொள்ளலாம்.
5. மாரடைப்பை தடுக்கும்: இதய இரத்தக்குழாயில் Inflammation ஏற்படுவதும், கெட்ட கொழுப்புகள் படிந்து அடைப்பை ஏற்படுத்துவதுமே ஹார்ட் அட்டாக்கிற்கு முக்கியமான காரணமாகும். இதை தடுக்கும் ஆற்றல் காட்டுயானம் அரிசிக்கு உண்டு. இந்த அரிசியில் உள்ள சிவப்பு நிறத்திற்கு Anthocyanin என்னும் ஆன்டி ஆக்ஸிடென்ட் பண்புகளே காரணம். இதில் உள்ள அதிகப்படியான நார்ச்சத்து இரத்தத்தில் உள்ள கெட்டக் கொழுப்பை குறைகிறது. இதனால், இரத்தக் குழாயில் ஏற்படும் அடைப்புகளைத் தடுத்து மாரடைப்பு வராமல் காக்கிறது. இத்தகைய சத்துக்கள் நிறைந்த காட்டுயானம் அரிசியை தினமும் உணவில் எடுத்துக்கொண்டு ஆரோக்கியமாக வாழுங்கள்.